![](pmdr0.gif)
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும்
பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 4 (6. கேமசரியார் இலம்பகம் (1412-1556) &
(7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888)
cIvaka cintAmani - part 4 (verses 1412 -1888)
of tiruttakka tEvar with commentaries
of M.P. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திருத்தக்க தேவர் இயற்றிய
சீவகசிந்தாமணி - மூலமும் பொ. வே. சோமசுந்தரனார் உரையும்
பாகம் 4 (கேமசரியார் இலம்பகம் 1412- 1556) &
(கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888)
-
Source:
திருத்தக்க தேவர் இயற்றிய "சீவகசிந்தாமணி" மூலமும்
புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1961
உள்ளடக்கம்
-
பதிப்புரை
அணிந்துரை
நூலாசிரியர் வரலாறு
I. கடவுள் வாழ்த்து, பதிகம் 1-29 (29)
II. நூல்
1. நாமகள் இலம்பகம் 30-408 (379)
2. கோவிந்தையார் இலம்பகம் 409- 492 (84)
3. காந்தருவதத்தையார் இலம்பகம் 493- 850 (358)
4. குணமாலையார் இலம்பகம் 851- 1165 (315)
5. பதுமையார் இலம்பகம் 1166- 1411
6. கேமசரியார் இலம்பகம் 1412- 1556
7. கனகமாலையார் இலம்பகம் 1557 - 1888
8. விமலையார் இலம்பகம் 1889 - 1994
9. சுரமஞ்சரியார் இலம்பகம் 1995 - 2101
10. மண்மகள் இலம்பகம் 2102 - 2326
11. பூமகள் இலம்பகம் 2327 - 2377
12. இலக்கணையார் இலம்பகம் 2378 - 2598
13. முத்தி இலம்பகம் 2599 - 3145
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
அருஞ்சொற்களின் அகரவரிசை
மூலமும் புலவர் 'அரசு' பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
ஆகியோர் எழுதிய உரையும்
6. கேமசரியார் இலம்பகம் (1412-1556)
கதைச் சுருக்கம்: சுதஞ்சணன் கூறிய நெறி பற்றிச்சென்ற சீவகன் சித்திர கூடம் என்னும் சிறந்ததொரு தவப்பள்ளியை எய்தினன். ஆண்டுள்ள தாபதர்களோடு அளவளாவி அவர்க்கு அறவுரை பல கூறித் திருத்தினன். அப்பள்ளியினின்றும் புறப்பட்டுத் தக்க நாட்டிற் புகுந்தனன். அந்நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை எய்தினன். இனி அந்நகரத்தில் வாழும் சுபத்திரன் என்னும் வணிகனுக்குக் கேமசரி என்னும் ஓர் அழகிய மகளிருந்தனள். அம்மகள் பிறந்தபொழுது சுபத்திரன் கணிகளை அழைத்து இவட்குக் கணவன் யாவன்? என வினவினன். அக் கணிகள், நின்மகள் எவனைக் கண்டு நாணுகின்றனளோ! அவ்வாடவனே இவட்குக் கணவன் ஆகுவன். இவட்குப் பிற ஆடவரைக் காணுங்கால் நாணந் தோன்றமாட்டாது, என உணர்த்தியிருந்தனர். இக் காரணத்தால் அவ்வணிகன் நாடொறுந் தன் கடைக்குவரும் அழகிய இளைஞரைத் தன்மனைக்கழைத்துச்சென்று விருந்தூட்டுவன், அத்தகையோருள் ஒருவரையும் கேமசரி கண்டு நாணமுற்றிலள். மணப்பருவம் கழிந்து விடுமோ என்று சுபத்திரன் வருந்தியிருந்தான்.
சீவகன் ஊழ்வலியுண்மையால் சுபத்திரன் கடைக்குச் சென்றனன். இவனது எழிலும் இளமையும் கண்ட சுபத்திரன் வியப்புற்றனன். இவனையும் சுபத்திரன் தன்னில்லத்திற்கழைத்துச்சென்று விருந்தூட்டினன். சீவகனைக் கண்ட கேமசரி பெரிதும் நாணமுற்றனள். அவன்பாற் காதன்மிக்கு வருந்தா நின்றனள். அவ்வழி சுபத்திரன் சீவகனுக்குக் கேமசரியை மணம் செய்வித்தனன். அம்மங்கை நல்லாளுடன் சீவக நம்பி இரண்டு திங்கள் இன்புற்றிருந்தனன். பின்னர்க் கேமசரி யறியாதபடி, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். வழியில் ஒருவனுக்கு அறவுரை பகர்ந்து தன் அணிகலன்களை அவனுக்கு வழங்கினன்; வழங்கி அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்றான். கேமசரி பிரிவாற்றாது பெரும் பேதுற்றனள். அவள் தாயாகிய நிப்புதி அவளை அரிதில் தேற்ற ஒருவாறு தேறியிருந்தனள்.
-
1412. வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற்
றேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன்றேங்கொ
ணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாய
கானம் வழங்கன் மேவிக் காலின் னேகி னானே.
விளக்கம் : கை மார்பு தார் என்னும் மூன்றும் சிறுவனுக்கு அடை மொழிகள். கை முதலியவற்றையுடைய சிறுவன்; விசையை சிறுவன் எனத் தனித்தனி கூட்டுக. தேம் - தேன். காலின் ஏகினான் என்றது ஊர்திகளின்றி என்பதுபட நின்றது. நானம் - புழுகு. கோதை : ஆகுபெயர்; பதுமை. விசையை சிறுவன், காலின் ஏகினான் என்பன சீவகன் நிலைக்கு இரங்கிய நூலாசிரியரின் இரக்கமொழிகள். தேனும் : உம் : இசைநிறை. காலின் - காற்றைப்போல என்றலுமாம். ( 1 )
-
1413. சிலைகொ ணாணிற் றீராத் திருந்து கற்பின் னவர்த
மிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்க
முலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி முள்கு மொய்ம்பன்
மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான்.
விளக்கம் : வில்நாண் பசையிட்டு முறுக்கப்படுதலால் தான் அழியுந் துணையும் முறுக்குடைதலின்று; அதுபோல அன்பாற் பிணைக்கப் படுதலின் இறுமளவும் பிறழ்தலில்லாக் கற்பினையுடையோர் என்பார் நாணிற் றீராக் கற்பின்னவர் என்றார். முலைக் கண்களின் எழிலைக் கூர்ந்து நோக்கித் தன்னுள்ளக் கிழியின் எழுதிப் பின் முயங்குபவன் என்றவாறு. இதனால் காட்சியின்பமும் உற்றின்பமும் ஒருங்கே கூறப்பட்டன. முள்குதல் - முயங்குதல். மலையும் கானமு முதலியவற்றின் எழில் கண்டு மகிழ்வதென் நோக்கம் என்று சீவகன் சுதஞ்சணனுக்குக் கூறியதற்கிணங்க (1175) ஈண்டு மகிழ்வோடேகுகின்றான் என்ற நயம் உணர்ந்து மகிழ்க.
இச் செய்யுளும் நூலாசிரியரின் இரக்கத்தைக் காட்டுகின்றது. ( 2 )
-
1414. கனிகொள் வாழைக் காட்டுட்
கருமை மெழுகி யவைபோன்
றினிய வல்லா முகத்த
முசுவுங் குரங்கு மிரியத்
துனிவு தீர நோக்கித்
தோன்றல் செல்லு முன்னாற்
பனிவெண் டிரைசூழ் கடல்போற்
பழுவந் தோன்றிற் றவணே.
விளக்கம் : முசு - கருங்குரங்கு. இரிதல் - கெட்டோடுதல், துனிவு - துன்பம். நோக்கி என்றது அவற்றின் அச்சந்தீர்தற்குக் காரணமான அருட்பார்வையாலே நோக்கி என்பதுபட நின்றது, இதனால் சீவக நம்பியின் பேரருளுடைமை கூறப்பட்டது. கடத்தற் கின்னாக் கல்லதர் அத்தம் இதுவே என்றுணர்த்தற்குப் பணி வெண்திரைசூழ் கடல் போற் பழுவம் என்றார். பழுவம் - காடு. ( 3 )
-
1415. பருகு வாரிற் புல்லிப்
பயங்கண் மாறத் துறக்கு
முருகு விம்மு குழலார்
போல மொய்கொ டும்பி
யுருவப் பூங்கொம் பொசியப்
புல்லித் தீந்தேன் பருகி
யருகு வாய்விட் டார்ப்ப
வண்ணன் மெல்லச் சென்றான்.
விளக்கம் : பருகுவார் என்னும் வினைக்குத்தகுதி பற்றி நீர் என்னும் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. பயம் - பொருள்: ஆகுபெயர். பயங்கண் மாறத் துறக்குங் குழலார் எனவே அவர் புல்லுவது பொருள் உளவாயபொழுதே என்பது பெற்றாம். அகத்தே அன்பில்லார் என்பது பட முருகுவிம்மு குழலார் என்றார். எனவே பொருட் பெண்டிர் என்றாராயிற்று. பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிர் என்றார் பிறரும் (மணி.18 108-9.) அப் பழுவத்துட் புகாமல் சித்திரகூட நோக்கிச் சென்றான் என்பது தோன்றபுக்கான் என்னாது சென்றான் என்றார். ( 4 )
-
1416. செல்வர் மனத்தி னோங்கித் திருவின் மாந்தர் நெஞ்சி
னெல்லை யிருளிற் றாகிப் பூந்தா தினிதி னொழுகிக்
கொல்லும் மரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற்
செல்லச் செல்ல வஃகு நெறிசேர் சிலம்பு சேர்ந்தான்.
விளக்கம் : செல்வர் மனத்தின் என்புழி ஆகூழால் திருவுடையராய கீழ்மக்களின் நெஞ்சம்போல என்று கொள்க. என்னை? மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி என இவரே முன்னருங் கூறுதல் காண்க. ஓங்குதல் மனதிற் செருக்குற்று நிமிர்தல். நெறிக்கு ஏறுதற்கரிய தாய்ச் செல்லச் செல்ல உயர்ந்துபோதல் எனக் கொள்க. இனிதின் என்புழி இன் ஐந்தாவதன் உருபு; ஒப்புப் பொருளில் வந்தது. இனிது போல எனவே காட்சிமாத்திரையான் இனிதுபோலத் தோன்றிப் பின் துயர்தருவது என்பது பெற்றாம். பூந்தாது துன்பந் தருவதாதலை : மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் - சண்பகம் நிறைத்த தாதுசேர் பொங்கர் - பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் - கையறு துன்பங்காட்டினுங் காட்டும் (சிலப், 10-68-71 ) என்றார் பிறரும். இனி மாவின் மயங்கி என்று பாடம் ஓதிப் புலி முதலியவற்றால் மயங்கி யென்றும் உரைப்பர். ( 5 )
-
1417. சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியா
வனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கி
இனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடி
நனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்.
விளக்கம் : வரைகள் தம்மைச் சூழ்ந்த சுனைகள் கண்களாக அவற்றின் மலர்ந்த குவளை மலர்கள் கருவிழிகளாகக் கொண்டு நோக்கிக் கண்ணீர் வீழ்ந்து அழுவன போலத் தோன்றுதற்குக் காரணமான இனிய அருவியின் ஆடி என்று இயைத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் உரையில் தன்னைச் சூழ்ந்த என்றிருத்தல், தம்மைச் சூழ்ந்த என்றிருத்தல் வேண்டும், திருத்தாத வழி, ஒருமை பன்மைகள் எழுவாய் முதலியன தலைதடுமாறுதலுணர்க. நாதன் - இறைவன். நச்சினார்க்கினியர் சுனைகளை எழுவாயாக்குதல் சிறப்பாகத் தோன்றவில்லை. ( 6 )
வேறு
-
1418. செய்தா னிருவினையின்
பயத்தைச்சேருஞ் சென்றென்றி
யெய்தா னதன்பயத்தைப்
பிறனேதுய்த்த லியல்பென்றி
கொய்தாமந் தாழ்ந்தொசிந்த
குளிர்பூம்பிண்டிக் கோமானே
யிஃதேநின்சொ லியல்பென்றா
லடியேனின்னைத் தொழுதேனே.
விளக்கம் : இருவினை - நல்வினையுந் திவினையும். பயம் - பயன். அவையாவன - இன்பமுந் துன்பமும். இஃதே என்னுஞ் சுட்டு இங்ஙனம் இரண்டுபட்டிருக்குமிதோ என்பதுபட நின்றது. உயிர் ஒன்றாதலின் செய்தவனே வினைப்பயனைத் துய்த்தல் இயல்பு என்றும், உயிர் ஒன்றாயினும் பல பிறப்பு எடுத்துப் பல உடம்புகளினாலும் அவ் வினைப்பயனைத் துய்த்தலின் பிறனே துய்த்தல் இயல்பு என்றும் கூறினார் என்க. என்றி : நிகழ்கால முன்னிலை ஒருமை முற்று. ( 7 )
-
1419. உண்டே தனதியல்பி
னுணருங்காலை யுயிரென்றி
யுண்டாய வ்வவுயிரே
பிறிதினில்லை யெனவுரைத்தி
வண்டார்த்து நாற்காதம்
வண்ணமாலை சுமந்தொசிந்து
கொண்டேந்து பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.
விளக்கம் : உயிர் தனதியல்பின் உணர்தலாவது, மெய்ப்பொருளாந்தனது இயல்பில் வைத்து ஆராய்ந்துணர்தல். பிறிதின் இயல்பால் ஆராய்தலாவது, உடல் முதலிய பொய்ப் பொருளின்கண் வைத்து ஆராய்தல். இதனாற் கூறியது மெய்யுணர்வார்க்கு உயிர் உள்பொருள்; அஃதுணரமாட்டார்க்கு அஃதில் பொருள் என்பதாம். பூம்பிண்டிக் கோமான் : விளி : அருகன். இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் : உயிர் ஒருவனிடத்துண்டு; தூணில் இல்லை. ஆதலால், உயிர் தனக்கே உண்டும் இல்லையும் தங்கின. இத் தன்மை வேறுபாட்டால் அங்கில்லை என்பர். ( 8 )
-
1420. காதலா லெண்வினையுங்
கழிபவென்றி யக்காத
லாதலா லெண்வினையுங்
கழியாவென்று மறைதியாற்
போதுலாய்த் தேன்றுளித்துப்
பொழிந்துவண்டு திவண்டுலாங்
கோதைதாழ் பூம்பிண்டிக்
கோமானின்னைத் தொழுதேனே.
விளக்கம் : எண்வினையாவன : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம் அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியானலோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்னுமிவ் வெட்டுமாம். இவற்றின் விளக்கம் முத்தியிலம்பகத்தில் (3076) கூறப்படும், ஆண்டுக் காண்க. இச் செய்யுள்,
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள். 350)
என்றும்,
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (குறள். 347)
என்றும் வரும் இரண்டு திருக்குறட் கருத்தினையுந் தன்பாற் கொண்டுளது.
கழிப : பலவறிசொல்.
இவை இருபுறவாழ்த்து; தேவபாணித் தாழிசைக்கொச்சக ஒருபோகு. இவற்றின் இடையிடையே நாலசைச்சீர்களும் வந்துள்ளன.
( 9 )
வேறு
-
1421. இனிதி னிங்ஙன மேத்தி வலங்கொண்டு
முனிவர் சித்திர கூடமு னாதெனத்
தனிதி னேகுபு தாபதர் வாழ்வதோர்
பனிகொள் பூம்பொழிற் பள்ளிகண் டானரோ.
விளக்கம் : சித்திரகூடம், பள்ளியின் பெயர். தனித்து என்பது தனிது என விகாரப்பட்டது. தனிதின் : இன் : அசை. அரோ : அசை. இனிதின் என்புழி இன் அசைச்சொல். என - என்று சுதஞ்சணன் முற்கூறியிருந்தமையால் (1190). ( 10 )
-
1422. புல்லு மல்லியும் போகுயர் நீள்கழை
நெல்லு நீர்விளை கேழலுந் தோரையு
மல்ல தீம்பழங் காய்கிழங் காதியா
நல்ல வேநுகர் வார்பள்ளி நண்ணினான்.
விளக்கம் : புல், அல்லி, நெல், கேழல், தோரை என்பன இவற்றின் அரிசிகட்கு ஆகுபெயர். போகுயர் : ஒரு பொருட் பன்மொழி; மிக வளர்ந்த என்க. கேழல் - குளநெல். தோரை - மூங்கிலரிசி. அல்ல என்றது இவையல்லாதவிடத்து என்றவாறு. நல்லவே என்புழி ஏகாரம் - பிரிநிலை; என்னை? தீயவாகிய ஊன் உணவைப் பிரித்து நிற்றலின் என்க. ( 11 )
-
1423. அரிய கொள்கைய ராரழ லைந்தினுண்
மருவி வீடு வளைக்குறு மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவி றீத்தொழிற் சிந்தையின் மேயினார்.
விளக்கம் : ஆர் அழல் ஐந்திடை மருவி என்றது, நான்கு திசைகளினும் வளர்க்கப்பட்ட ஓமகுண்டத் தீயும் உச்சியிற் கதிரவனுமாகிய ஐந்து தீயின் நடுவண் நின்று என்றவாறு. தெரிவுஇல் தீத்தொழில் என்றது, காம வேட்கையாலியற்றும் தீவினைகளை. அரிய கொள்கையாவன : நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்; நீர்பில கால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் - சோர்நடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் - கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் - வானகத் துய்க்கும் வழி. (பு. வெ. 168) என்பனவும் பிறவுமாம். ( 12 )
-
1424. வள்ளி யின்னமு தும்வரை வாழையின்
றெள்ளு தீங்கனி யுஞ்சில தந்தபின்
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென
வுள்ள மாட்சியி னாருவந் தோம்பினார்.
விளக்கம் : அமுது : ஆகுபெயர். வெள்ளமாரியனாய் என்றது பலர்க்கும் பயன்படுபவனே என்றவாறு. ( 13 )
-
1425. பாங்கின் மாதவர் பான்மதி போன்றிவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருட் கேள்விய
னாங்கு நாமு மளக்குவ மென்றுதம்
மோங்கு கட்டுரை யொன்றிரண் டோதினார்.
விளக்கம் : பால்மதி - பால் போன்ற ஒளியையுடைய முழுத்திங்கள். ஒவ்வொரு கலையாக நாடோறும் வளர்ந்து நிரம்பிய திங்கள் ஒவ்வொரு கலையாகப் பயின்று நிரம்பிய சீவகனுக்க உவமை. மெய்ப்பொருள் - காரண காரியங்களிரண்டுமின்றி முடிவாய் நிற்கும் பொருள். அளக்குவம் : தன்மைப் பன்மை. கட்டுரை - பொருள் பொதிந்த மொழி.
ஒன்றிரண் டென்பதொரு வழக்கு; ஒருசில என்பது கருத்து.
பாங்கு - நல்லிடம்; பாங்கர்ப் பல்லி (அகம் : 9) என்ப. ( 14 )
-
1426. ஐயர் கூறலு மண்ணலுங் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திர நீந்துவா
னுய்யு மேற்றொடர்ப் பாட்டினிங் கியாவையு
மெய்தி னார்களு முய்பவென் றோதினான்.
விளக்கம் : ஐயர் - தலைவர்; என்றது அம் முனிவரை. சையம் - கல். இச் செய்யுளோடு,
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344)
என்னுந் திருக்குறளை நினைக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் வந்து மனக்கலக்கம் செய்யும் என்பான், தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும் உய்ப என்றோதினான் என்க. இச் செய்யுள் மனைவிமக்களோடிருந்தும் வீடெய்துதல் கூடும் என்னும் ஏனைச் சமயிகளைப் பழித்தபடியாம். அவர்கள் மனைவியருடன் இருத்தலின் தொடர்ப்பாடு என்றான். ( 15 )
-
1427. வீடு வேண்டி விழுச்சடை நீட்டன்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
யோடுகோட லுடுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே.
விளக்கம் : இச் செய்யுள்,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்
என்னுந் திருக்குறளின் விளக்கமாக அமைந்துள்ளமை உணர்க. துன்பமல்லது தொழுதகவு இல்லாப் பிறப்பென்பான், பீடிலாப் பிறவி என்றான். ( 16 )
-
1428. ஏம நன்னெறி யெந்நெறி யன்னெறி
தூய்மை யின்னெறி யாமுந்து ணிகுவங்
காமன் றாதை நெறியின்கட் காளைநீ
தீமை யுண்டெனிற் செப்பெனச் செப்பினான்.
விளக்கம் : ஏமம் - இன்பம். காளைபோல்வானைக் காளையென்றது ஆகுபெயர். அல்நெறி - இந் நெறியல்லாத பிற நெறிகள். காமன் தாதை - திருமால். காளை : விளி. ( 17 )
வேறு
-
1429. தூங்குறிக் கிடந்து காயும்
பழங்களுந் துய்ப்ப நில்லா
பாங்கலா வினைக ளென்றார்
பகவனா ரெங்கட் கென்னி
னோங்குநீண் மரத்திற் றூங்கு
மொண்சிறை யொடுங்கல் வாவல்
பாங்கரிற் பழங்க டுய்ப்பப்
பழவினை பரியு மன்றே.
விளக்கம் : சமயங்கள் கூறிய புற ஒழுக்கமாத்திரையானே பழவினைகள் கழியா என்பது இச் செய்யுளின் கருத்து. பழங்களையே உண்டு மரத்திலே தலைகீழாய்த் தொங்குதலானே வெளவால்களின் பழவினை தீர்தல் இல்லையானாற் போன்று இவ்வொழுக்கமாத்திரையாற் பிறப்பறாது என்றபடியாம். இது மாறுபட வந்த உவமத்தோற்றம். ( 18 )
-
1430. அல்லியும் புல்லு முண்டாங்
காரழ லைந்து ணின்று
சொல்லிய வகையி னோற்பத்
துணியும்வெவ் வினைக ளென்னிற்
கல்லுண்டு கடிய வெம்புங்
கானுறை புறவ மெல்லாம்
புல்லிய வினையை வென்று
புறக்கொடை காணு மன்றே.
விளக்கம் : வெப்பமிக்க பாலையின்கண் கல் முதலியவற்றை உண்டு வாழும் புறாவின் பிறப்பறாமைபோல நல்லனவே உண்டு அழல் நடுவில் நின்று தவமியற்றன் மாத்திரையானே பிறப்பொழியா தென்பது கருத்து. இதுவும் மாறுபடவந்த உவமத் தோற்றமே.
( 19 )
-
1431. நீட்டிய சடைய மாகி
நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள்
வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக்
கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும்
வெளிற்றுரை விடுமி னென்றான்.
விளக்கம் : சடையுடைமை கருதிக் கரடியை உவமை கூறினான். சடை வளர்த்தலும் காட்டிடை வாழ்தலும் கயமூழ்கலும் உடைமையாற் கரடி பிறப்பொழியாமை போல இவ்வொழுக்கமாத்திரையானும் பிறப்பறாது என்பது கருத்து. இதுவும் அவ்வுவமமே. ( 20 )
-
1432. கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கி
யிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாக
முலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின்
மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே.
விளக்கம் : இஃது வானப்பிரத்த நிலையினைப் பழித்தபடியாம். அந்நிலையின்கண் உளதாம் பேதைமையை விளக்குவான், காமர் மென் சேக்கையை நீங்கி இருநிலஞ் சேக்கையாக என்று விதந்தோதினான். இயல்பாகவே குறவர்களுக்கு இவ்வானப்பிரத்த நிலை எய்தியதாகவும் அவர் பிறப்பறாமைபோல இதனாற் பிறப்பறாது என்பது கருத்து. கலை - ஈண்டு இசைக்கலை. காமர் மென்சேக்கை என்றதனால், கற்கள் உறுத்தும் புன்னிலச் சேக்கை எனவும், இலைவளர் குரம்பை என்றதனால் மணிமாடத்து நிலாமுற்றத்திலமைந்த காமர்மென்சேக்கை எனவும் விரித்தோதுக. ( 21 )
-
1433. வெண்ணிறத் துகிலி னாங்கண் வீழ்ந்துமா சாகிநின்ற
வொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமே
பண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங்
கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே.
விளக்கம் : துகிலின் கட்பட்ட குருதிக்கறையைக் குருதியாலே மாற்றல் கூடாமைபோலப் பிறவிக்குக் காரணமாகிய பற்றாலேயே பிறவியை அறுக்க இயலாது என்பதாம். பிறப்பறுக்கலுற்றார் முலையினார் கலவியைத் தவிர்தல் வேண்டும் என்பது கருத்து. ( 22 )
-
1434. நுண்டுகில் வேத லஞ்சி
நெருப்பகம் பொதிந்து நோக்கிக்
கொண்டுபோய் மறைய வைத்தாற்
கொந்தழல் சுடாது மாமே
கண்டத்தி னாவி யார்தங்
கடிமனை துறந்து காட்டுட்
பண்டைச்செய் தொழிலிற் பாவம்
பறைக்குற்றாற் பறைக்க லாமே.
விளக்கம் : தொன்று தொட்டுப் பிறப்புக்கடோறுந் தொடர்ந்து வரும் செயல் என்பார், பண்டைச் செய்தொழில் என்றான். பறைக்கல் - தேய்த்தல். பறைதல் - தேய்தல். பார்வையாத்த பறைதாள் விளவின் என்னும் பெரும்பாணாற்றுப்படையினும் (95) அஃதப்பொருட்டாதல் காண்க. சுடாதும் என்புழி, உம்மை, இசை நின்ற. மகளிரின் மனையைத் துறந்தகல (அவரை நெஞ்சாலே நோக்கிக்) காட்டிலே கொண்டுபோய் வைத்து, முன்பு செய்த தொழிலிற் பிறந்த பாவத்தைப் போக்கலுற்றாற், போக்க ஒண்ணாது என்பர் நச்சினார்க்கினியர். ( 23 )
-
1435. நோய்முதிர் குரங்கு போல
நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா
காய்முதிர் கனியி னூழ்த்து
வீழுமிவ் வியாக்கை யின்னே
வேய்முதிர் வனத்தின் வென்றா
னுருவொடு விளங்க நோற்றுப்
போய்முதிர் துறக்கத் தின்பம்
பருகுவ புரிமி னென்றான்.
விளக்கம் : கொண்டது விடாமையானும் குரங்கு உவமையாயிற்று. வேண்டின் உண்டாகத் துறக்க என்பான் இன்னே என்றான். இன்னே என்பதனை நோற்றுப்போய் என்பதனோடு கூட்டுக. வென்றான் : பெயர். ( 24 )
-
1436. மெய்வகை தெரிதன் ஞானம்
விளங்கிய பொருள்க டம்மைப்
பொய்வகை யின்றித் தேறல்
காட்சியைம் பொறியும் வாட்டி
யுய்வகை யுயிரைத் தேயா
தொழுகுத லொழுக்க மூன்று
மிவ்வகை நிறைந்த போழ்தே
யிருவினை கழியு மென்றான்.
விளக்கம் : இச் செய்யுளில் நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மூன்றன் இயல்பும் கூறுகின்றார். இவற்றை, இரத்தினத்திரயம் என்றும் பரத்திரயம் என்றும் வழங்குப. இவற்றுள் நன்ஞானம் - எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தாகிய அறிவு, நற்காட்சி ஐயமின்மை அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கமின்மை, அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல், அறத்துக்கு அளவளவு, அறத்தை விளக்கல் என்னும் எண்வகை உறுப்பிற்று. நல்லொழுக்கம் அணுவிரதம் மாவிரதம் என இருவகைப்படும். ( 25 )
-
1437. குன்ற னானுரைப்பக் கேட்டே
பாகத்தார் குடும்ப நீக்கி
யின்றுகண் விடுக்கப் பட்டேம்
யாமென வெழுந்து போகி
வென்றவன் பாதஞ் சேர்ந்து
வீட்டுநன் னெறியைப் பெற்றார்
சென்றது பருதி வட்டஞ்
செம்மலு மசைவு தீர்ந்தான்.
விளக்கம் : குன்றம் சீவகனுக்குச் சலியாமை என்னும் பண்பு பற்றி வந்த பெருமித வுவமை. பாகத்தார் என்றது இத்தகைய ஞானக்கேள்வியைக் கேட்டற்குரிய அதிகாரிகள் என்பதுபட நின்றது. குடும்பம் என்றது மனைவி முதலிய தொடர்ப்பாட்டினை. கண் : ஈண்டு அறிவுக்கண். கண் திறப்பிக்கப்பட்டேம் என்றவாறு. முன்னர் (24) இன்னே என்றதற்கேற்ப ஈண்டும் எழுந்து போய் என்றார்.
எழுந்து போய் என்றது, அப்பொழுதே எழுந்துபோய் என்பதுபட நின்றது. வட்டம் என்றது, ஞாயிறு நாடோறும் வட்டமாய் மாமேரு வருதலை என்பர் நச்சினார்க்கினியர். (26 )
வேறு
-
1438. அசைவு தீர்ந்திரு ளஃகிய காலையே
வசையி னீங்கியி னார்வழி காட்டலிற்
றிசையும் யாறுந் தெரிந்துகொண் டேகினான்
மிசையு மில்லதோர் மெய்ப்பொறி யாக்கையான்.
விளக்கம் : வசை - காமவெகுளி மயக்கமென்னும் குற்றம். இனி 9 - ஆம் செய்யுளிற் கூறப்பட்ட அப்பிரத்தியாக்கியான, பிரத்தியாக்கியான குரோதம் மானம் மாயை லோபம் என்பனவுமாம். மிசை : தேவருலகிற்கு ஆகுபெயர். மெய்ப்பொறி - உடலுக்குக் கூறும் நல்லிலக்கணம். நீங்கியினார் : இன் : அசை. ( 27 )
வேறு
-
1439. படம்புனைந் தெழுதிய வடிவிற் பங்கயத்
தடம்பல தழீ இயது தக்க நாடது
வடங்கெழு வருமுலை மகளிர் மாமைபோன்
றிடம்பெரி தினிதத னெல்லை யெய்தினான்.
விளக்கம் : ஓவியப்புலவன் கிழியின்கண் தன் கலையுணர்ச்சியினாற்புனைந்து வரையப்பட்ட ஓவியம் போலத்தோன்றும் தாமரைத் தடம்பல தன்பால் அமைந்தது என்னும் இச்சொல்லோவியம் மிகவும் இனிதாதல் உணர்க. மாமை - அழகு. ஈண்டு அந்நாடு தெவிட்டாத காட்சியின் பமுடைத்தாதற்கு உவமை. ( 28 )
-
1440. தேங்கயத் தணிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
பூங்குழன் மடந்தையர் புனைந்த சாந்தமு
மாங்கெலா மகிற்புகை யளாய வாசமுந்
தாங்கலா றக்கநா டாய தென்பவே.
விளக்கம் : தெகிழ்ந்த - நெகிழ்ந்த; மலர்ந்த என்றவாறு. தக்க நாடு - தகுதியுடைய நாடு; தகுதி -தாங்குதல். எனவே தக்க நாடென்பது அதற்குக் காரணப் பெயர் என்றவாறு. என்ப - என்று சான்றோர் கூறுவர். ( 29 )
-
1441. சண்பக நறுமலர் மாலை நாறுசாந்
தொண்பழுக் காயினோ டுருவ மெல்லிலை
யுண்பத மியாவர்க்கு மூன மில்லது
வண்புகழ் நாட்டது வண்ண மின்னதே.
விளக்கம் : பழுக்காய் - பாக்கு. உருவம் - அழகு. மெல்லிலே : வினைத்தொகை; வெற்றிலை. உண்பதம் : வினைத்தொகை. நாறுசாந்து என்பதும் அது. ஒண்பழுக்காய், வண்புகழ் : பண்புத்தொகைகள். மலர் முதலிய இன்னோரன்னவற்றால் ஊனம் இல்லது என்க. ஊனம் - குறைவு. வண்ணம் - இயல்பு. ( 30 )
-
1442. கரும்பணி வளவயற் காமர் தாமரை
வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செநெ
லரங்கணி நாடக மகளி ராய்நுதற்
சுரும்புசூ ழிலம்பகத் தோற்ற மொத்ததே.
விளக்கம் : அதன் - அத்தாமரை மலரினது. இலம்பகம் - தலைக்கோலம் என்னும் ஓரணிகலம். வார்செநெல் - என்புழி நகரமெய் விகாரத்தாற் கெட்டது. அணைந்து - அணைய : எச்சத்திரிபு. சுரும்பு தாமரைமலரைச் சூழ இருக்கும். அவ்வாறே தலைக்கோலத்தை சூழக் கூந்தல் இருக்கும். வரம்புக்கு அரங்கு உவமை. ( 31 )
-
1443. வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமே
னண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்
விண்டொளித் தூண்டுறந் தொடுக்கும் வீழ்புனல்
கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.
விளக்கம் : ஒரு கன்னி தன்மேலே உகிர் உற்றதனால் நாணத்தினால் நடுங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று ஒளித்து ஊணைத்துறந்து ஓடுங்குமாறு போல என வாளைக்கு உவமை கொள்க. வரியகட் டலவன் வள்ளுகிர் உற்றெனக் கன்னிவாளை உண்ணா தொடுங்கும் தண்பணை என்றார் கதையினும் (1 - 89 : 100 - 2.) ( 32 )
-
1444. அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி
புகழ்தகு மேகலை நாயில் பூண்முலை
திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ்
சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே.
விளக்கம் : பத்திரப் பாம்புரி அத்தகக் கலாஅய் என்றார் கதையினும் (3 - 3 : 17) பாம்புரி : மதிலின் அடியே உள்ள ஆளோடிகள் (சீவக. 1250; அடிக்குறிப்பு) நாயில் : ஞாயில்: போலி. ஞாயில் - மதிலின் ஓர் உறுப்பு; மதிலில் இருப்போர் வெளியார்மேல் அம்பெய்து மறையும் சூட்டு. ( 33 )
-
1445. நாட்டிய மணிவரை கடைந்து நல்லமிர்
தூட்டினு மதனைவிட் டுறைந ரின்மையா
லீட்டிய வளநிதி யிறைகொண் மாநகர்ச்
சூட்டுவைத் தனையதச் சுடர்ப்பொ னிஞ்சியே.
விளக்கம் : இனி, அ மணிவரை நாட்டி - எனப் பிரித்துக் கூட்டுக் கண்ணழித்து அம்மணி மலையாகிய மந்தரத்தை நட்டு எனினுமாம். இதற்கு அகரச்சுட்டுப் பண்டறி சுட்டு ஆகும். இதற்கு நிதி, ஆகுபெயர். சூட்டு என்றது சிறப்புப் பட்டத்திற்கு அடையாளமாகிய ஓரணிகலனை. ( 34 )
-
1446. எறிசுற விளையவ ரேந்து பூங்கொடி
மறிதிரை வரைபுரை மாட மாக்கலம்
பெறலருந் திருவனா ரமுதம் பேரொலி
யறைகடல் வளநக ராய தென்பவே.
வேறு
-
1447. மதியக டுரிஞ்சுஞ் சென்னி
மாடநீண் மறுகு தோறும்
பொதியவிழ் மாலை வீழ்ந்து
பொன்செய்நன் கலன்கள் சிந்தி
நிதியறை திறந்து நோக்கி
யன்னதோர் நீர்மை யெய்திப்
புதியவர்க் கியங்க லாகாப்
பொற்பொடு பொலிந்த தன்றே.
விளக்கம் : உரிஞ்சும் - தேய்க்கும். மறுகு - தெரு. நிதியறை - கருவூலம். புதியவர் பொருள் கிடக்குமிடத்தே புகுதற்கு அஞ்சுதல் இயல்பாகலின் புதியவர்க்கு இயங்கலாகாப் பொற்பு என்றார். இதனால் அந்நகரத்துத் திருவுடைமை உணர்த்தப்பட்டது. ( 36 )
வேறு
-
1448. கேமமா புரமெனுங் கேடி னல்லிசைப்
பூமிமேற் றிலகம்வைத் தனைய பொன்னகர்த்
தாமம்நீ ணெடுங்குடைத் தரணி காவல
னாமம்வே னரபதி தேவ னென்பவே.
விளக்கம் : நல்லிசையை நரபதி தேவனுக்கு ஆக்குவர் நச்சினார்க்கினியர். ( 37 )
-
1449. அந்நகர்க் கரசனே யனைய வாண்டகை
மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன்
கைந்நிக ரமைந்தவேற் கமழுந் தாரினான்
மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான்.
விளக்கம் : இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர். அரசன் : நரபதிதேவன். ஆண்மைத் தன்மையில் அரசனையே ஒத்தவன் என்றவாறு. ஆற்றலுடைய கையும், அதற்குத் தகுந்த வேலும் இவற்றால் எய்திய வெற்றி மாலையினையும் உடையோன் என்றவாறு. மழைக்கணார் மருட்ட வைகுவான் என்றது அவனுடைய வாழ்க்கைச் சிறப்பினை விதந் தோதியபடியாம். ( 38 )
வேறு
-
1450. வார்சிலை வடிப்ப வீங்கி
வரையெனத் திரண்ட தோளான்
சோர்புய றொலைத்த வண்கைச்
சுபத்திரன் மனைவி பெற்ற
சீர்நலம் கடந்த கேம
சரியெனத் திசைக ளெல்லாம்
பேர்நலம் பொறித்த பெண்மைப்
பெருவிளக் காகி நின்றாள்.
விளக்கம் : ஆகி யெனவே மங்கைப்பருவமுடையாளென்பது பெற்றாம். கேமசரி என (ஒரு பெண்) என ஒரு மொழி சேர்க்க. (39)
-
1451. மாசிலாள் பிறந்த ஞான்றே
மதிவலான் விதியி னெண்ணிக்
காசிலாள் கண்ட போழ்தே
கதுமென நாணப் பட்டான்
றூசுலா மல்கு லாட்குத்
துணைவனாம் புணர்மி னென்று
பேசினா னன்று கொண்டு
பெருவிருந் தோம்பு கின்றான்.
விளக்கம் : தன் கணவனைத் தவிர மற்றோர் அவட்கு ஆடவராய்த் தோன்றாரென்பது தோன்றப் பலரையும் நோக்கும் அவளை, மாசிலாள் என்றும், காசிலாள் என்றும் கூறினார். மதிவல்லான் என்றது கணிவனை. விதி - நூல் கூறும் முறை. காசிலாள் - குற்றமற்றவள் என்னும் பொருட்டு; இது வாளா அவள் என்னுஞ் சுட்டு மாத்திரையாய் நின்றது. பெருவிருந்தோம்புகின்றான் என்றது, அத்தகையானைக் காணும் பொருட்டு என்பதுபட நின்றது. ( 40 )
-
1452. தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று
சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்கு
மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே.
விளக்கம் : தான் நோக்குழிச் சிறிது தோன்றித் தன்னைப் பிறர் நோக்குழிக் கணத்திலே தூணின் மறைந்து விடுதல் பற்றி, மின்னின், தூணையே சார்ந்து நோக்கும் என்றார். தந்தை செய்யுள் விருந்திடையே இவள் ஒரு தூணைச் சார்ந்து நின்று தனக்கு ஊழினால் தரப்படுஞ் காதலனை நோக்குவாள் என்க. ( 41 )
-
1453. சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு
மாயிரத் தெட்டு நேர்ந்த வாரமு தடிசி லூட்டி
யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு
போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே.
விளக்கம் : சேயிழை : அன்மொழித் தொகை. அமுதடிசில் : உவமத்தொகை. திருமகன் திறத்து என்பது, என்றிறத்து அவலங்கொள்ளல் என்பதுபோல (புறநா. 253) பொருட்டு என்னும் பொருளில் வந்தது. ஊட்டி - ஊட்ட : எச்சத்திரிபு. ( 42 )
-
1454. முருக்கிதழ் குலிக மூட்டி
வைத்தன முறுவற் செவ்வாய்த்
திருக்கவி னிறைந்த வெங்கட்
பணைமுலைத் தேம்பெய் கோதைப்
புரிக்குழற் பொன்செய் பைம்பூட்
புனையிழை கோல நோக்கித்
தரிக்கிலா துருகி நையுந்
தடமலர்க் கோதை நற்றாய்.
விளக்கம் : இயல்பாகவே சிவந்த முருக்க மலரின்மேல் இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்று நனிசிவந்த வாய் என்பார், முருக்கிதழ் குலிகம் ஊட்டிவைத்தன செவ்வாய் என்றார். புனையிழை : அன்மொழித் தொகை; கேமசரி. இத்தகைய அழகினாட்கு இன்னும் கணவன் வாய்த்திலனே என்று நற்றாய் நோக்குந்தோறும் நைந்துருகினாள் என்பது கருத்து. ( 43 )
-
1455. மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில்
பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைக
வேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்ற
தாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கி னானே.
விளக்கம் : மாவடுப் பிளவினை ஒத்த கண் எனினுமாம். தாரவன் : சுபத்திரன். நீக்கினான் என்றது பின்விருமாறு கூறி நீக்கினான் என்பது பட நின்றது. ஏ - அம்பு. பிணை - பெண்மான். இறை - முன்கை. தாய் : நிப்புதி. ( 44 )
-
1456. போதுவாய் திறந்த போதே
பூம்பொறி வண்டு சேர்ந்தாங்
கூதுமே மகளிர்க் கொத்த
போகமு மன்ன தொன்றே
யாதுநீ கவல வேண்டா
வாரழ குடைய நம்பி
காதலான் றவத்தின் மிக்கான்
கண்ணுறு நாளை யென்றான்.
விளக்கம் : இவளை நுகர்தற்குரியோன் தவத்தின் மிக்கோனும் ஆரழகுடையோனும் காதலானும் நம்பியுமாக இருத்தல் ஒருதலை என்பான், ஆரழகுடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் என்றான். அத்தகைய தவம் வீண்போகாது என்பான் நாளைக் கண்ணுறும் என்றான். ஆங்கு : அசைச்சொல். ஊதுமே : ஏ : வினா. ஒன்றே : ஏ : தேற்றம். ( 45 )
வேறு
-
1457. பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி
மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்
பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர்
துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே.
விளக்கம் : பொன்னிலம் - வானுலகம். காமவல்லி - கற்பகமரத்திற்படர்வதொரு பொன்னிறப் பூங்கொடி. பேதை : கேமசரி. குருசில் - தலைவன் : ஈண்டுச் சீவகன். ( 46 )
-
1458. மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற்
சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ்
செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோ
பல்கதிர் மணியொளி பரந்த பூணினான்.
விளக்கம் : சிறுமி தந்தையும் பூணினானுமாகிய சுபத்திரன் என்க. செல்வன் : சீவகன். திருநகர்ச் சேட்பட்டான் என்றது, அவன் வருகையை உணர்ந்து தன்னகரத்தினின்றும் தொலைவிடத்திலேயே எதிர் சென்று கண்டு அழைத்து வந்தனன் என்பதுபட நின்றது.
( 47 )
-
1459. தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுட
ரொன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்
மன்றல்கொண் மார்பினான் வந்தொ ரானிழ
னன்றுவந் திருந்தன னாதற் சிந்தியா.
விளக்கம் : இச் செய்யுளின்கண் சுபத்திரன் சீவகனை எதிர்ப்பட்ட இடமும் அவன் அவ்விடத்து இறைவணக்கஞ் செய்திருந்ததும் கூறுகின்றார். நாதன் - இறைவன். சிந்தியா - சிந்தித்து. நன்று - பெரிதும். தியானித்தல் : நமோ அரஹந்தாணம் என்றுகூறி மந்திரத்தியானஞ் செய்தல். வேற்று நாட்டின் சுவைகளை அறிந்து நுகரவேண்டும் என்று சீவகன் கூறியதற் கிசைந்த சுதஞ்சணன் இவனுக்கு ஊழ் வகையான் உறவு கொண்டு நுகர்ச்சி எய்தும் இடங்களை நாடி ஆண்டுச் சேறற்கு வழி கூறலின், வடதிசையிற் போதல் உளதாயிற்று. விசயமாதேவியைக் கண்டாற் பின்பு இராசமாபுரம் நோக்குவான். ( 48 )
-
1460. குடைகவித் தனையது கோல மாமுடி
யடியிணை யாமையின் வடிவு கொண்டன
புடைதிரள் விலாவும்வில் வளைந்த பொற்பின
கடிகமழ் தாமரை கண்ணின் வண்ணமே.
விளக்கம் : இது முதல் ஆறுபாட்டுக்கள் சீவகன் உருவச் சிறப்புக் கூறுகின்றன. ஆலமர நீழலில் இருந்த சீவகனைச் சுபத்திரன் கண்டு மனத்திடை இவ்வாறு சிந்திக்கிறான். கண்ணின் வண்ணம் தாமரை வண்ணம் என வண்ணத்தைத் தாமரையோடுங் கூட்டுக. ( 49 )
-
1461. குறங்கணி மயிலொடு கோல மார்ந்தன
பிறங்கிய வுறுப்பின்மேற் பெரிய நோக்கின
கறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகு
மறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே.
விளக்கம் : கோலம் - அழகு, நோக்கு - அழகு; நோய் இகந்து நோக்கு விளங்க எனவரும் மதுரைக்காஞ்சியினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. பிறங்குதல் - பருத்தல். கறங்கிசை: வினைத்தொகை. மணி முழா என்றது குடமுழவினை. புலியின் வாய் சிறுகி வளைந்திருத்தலின் உவமையாக எடுத்தோதினர். வாயின் வண்ணம் புலிவாய் வண்ணம் என்க. ( 50 )
-
1462. வரையகன் மார்பிடை வரியு மூன்றுள
புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத்
தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற்
றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே.
விளக்கம் : அகல் மார்புவரை அம்மார்பிடை என விரித்தோதி அகன்ற மார்பும் மலையை ஒக்கும் அம்மார்பினிடத்தே என்க.வரி - கோடு. அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ப்பின் என்றார் திருமுருகாற்றுப்படையினும். இங்ஙனம் மூன்று கோடமைதல் உத்தம விலக்கணம் என்ப. அமரர்கோன் : இந்திரன். உருவிரண்டனுள் முன்னது அழகு, ஏனையது வடிவம். ( 51 )
-
1463. இலங்குபொன் னிறுவரை யனைய வேந்தலுக்
கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்ன தாய்
வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடு
நலங்கிளர் நாபியு மினிது நாறுமே.
விளக்கம் : இறுவரை - பெரிய மலை. பொன் இறுவரை என்றது, மேருமலையினை. நாபி - உந்தி. நாறுதல் - தோன்றதல். இனிது என்புழி இனிமைப் பண்பு கட்கினிமையைக் குறித்து நின்றது. ( 52 )
-
1464. தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூழ்
கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரைய
கடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிர
லடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே.
விளக்கம் : இறை - விரலிலுள்ள கோடுகள். இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவிற்கு என்க. கெடிறு - கெளிறு; ஒருவகை மீன். பொன் தோரை - பொன்னிறமுடைய மூங்கில் நெல்; கடிப்பகை: ஐயவி - வெண் சிறு கடுகு. கடிப்பகையும் நுழைதற் கியலாதபடி இடைவெளியற இணைந்த என்பது கருத்து. கதிர்த்தல் - ஒளிவிடுதல். வயிரத்தோட்டி - வயிர மணியாற் செய்த தோட்டி (அங்குசம்.) தோரைய என்னும் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய், கதிர்த்த என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு அது கை விரல் என்பதைக் கொண்டது. ( 53 )
-
1465. வார்ந்திலங் கெயிறணி பவழ மாண்டவா
யார்ந்தபூ வங்கையு மடியுந் தாமரை
தேர்ந்தனன் றிருமகள் கணவ னாமெனத்
தீர்ந்தனன் சொல்லளைஇத் தேர்க்கொண் டேறினான்.
விளக்கம் : மாண்ட வாய் - மாட்சிமையுடைய வாய். பற்களால் அணியப்பட்ட வாய் என்க. அளைஇ - கலந்து அளைஇ என்பது தீர்ந்தனன் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. இவனே என் திருமகள் கணவனாம் என்றும் ஒரு பொருள் தோற்றி நின்றது.சீவகனுடைய தோற்றம் இந்த ஆறு செய்யுட்களிலும் தலைதடுமாறக் கூறிற்றாயினும் தலைமுதல் அடிவரை முறையே கொள்க. (54)
-
1466. தேரிவ ரூர்ந்தனர் செல்ல விற்றலைக்
கூருகிர் விடுத்ததோர் கோல மாலையைப்
பேரிசை வீணையிற் சூட்டிப் பெண்கொடிக்
காரிகை யுலகுணர் கடவுட் பாடுமே.
விளக்கம் : ஊர்ந்தனர்: முற்றெச்சம். தண்கயத் தமன்ற ஒண்பூங்குவளை அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி என்றும் (அகநா. 180) காலமன்றியும் கையினெரித்த கழுநீர்க் குவளை (பெருங். 1-35 : 1834) என்றும் பிறசான்றோர் கூறுதல் நோக்கி மாலை என்றது செங்கழுநீர் மாலை எனப்பட்டது. காரிகை : கேமசரி; ஆகுபெயர். உலகு - உயர்ந்தோர்.( 55 )
வேறு
-
1467. வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்
தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்
தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி
நாவி னவிற்றாதார் வீட்டுலக நண்ணாரே.
விளக்கம் : எனவே, நவிற்றுவோர் வீட்டுலகம் நண்ணுவர் என்பதாயிற்று.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள். 8)
என்றார் வள்ளுவனாரும். முக்குடை : சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன. ஓதவண்ணம் : நேமிநாதர். ( 56 )
-
1468. அடல்வண்ண வைம்பொறியு மட்டுயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின் றுணர்ந்தான்
காசின் றுணர்ந்தான் கமல மலரடியை
மாசின்றிப் பாடாதார் வானுலக நண்ணாரே.
விளக்கம் : காசு - ஐயந்திரிபு. மாசு - காமவெகுளி மயக்கம். வானுலகம் - வீடு. பொறிவாயிலைந்தவிந்தான் என்பது பற்றி ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான் என்றார். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்பன. அவற்றை அடலாவது தத்தமக்குரிய புலன்களில் செல்லாது அடக்குதல். ( 57 )
-
1469. பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை
நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே
வீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்ப
வோட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே.
விளக்கம் : ஓடிடுப என்பது ஓட்டிடுப என விகாரப்பட்டது. எண்குணம், வரம்பிலா அறிவு முதலிய பண்புகள். அருகனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி, நுகர்ச்சி எய்திப் பற்றற்று வீடு பெறுதல் கூடாதாய் இருந்த தென்பது கருத்து. முன்னர் வணங்காமையின் தானும் இவ்வருத்தம் உற்றேன் என்றாள். இவை படர்க்கையாதலிற் பொருள் வேறுபட்டு வந்த தேவபாணிக் கொச்சக ஒருபோகு. ( 58 )
வேறு
-
1470. முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும்
பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட்
டொத்தரம்பை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர்
வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள்.
விளக்கம் : முந்நீர் வண்ணன் மணிவண்ணன் எனத் தனித்தனி கூட்டுக முந்நீர் - மூன்று நீரையுடையது அல்லது மூன்று தொழிலையுடையது என்னும் பொருள்பட்டுக் கடலுக்காயிற்று. வித்தகன் - சதுரப்பாடுடையவன். இன்னே - இப்பொழுதே. உரைத்தாள் என்பது வேண்டிப்பரவினள் என்பதுபட நின்றது. ( 59 )
வேறு
-
1471. நிலந்தினக் கிடந்தன நிதியந் நீணகர்ப்
புலம்பறப் பொலிவொடு புக்க காலையே
யிலங்குபூங் கொடியன வேழை நோக்கமு
முலங்கொடோ ளுறுவலி நோக்கு மொத்தவே.
விளக்கம் : நிலத்தினக் கிடந்தன நிதியம் என்றது அழிவின்றி மிக்குக் கிடக்கும் நிதியம் என்பதுபட நின்றது. அஃகா வியல்பிற்றாய செல்வம் தங்கிக் கிடத்தற்குக் காரணங் கூறுவார் நச்சினார்க்கினியர் அறத்தால் தேடின பொருள் என்று நுண்ணிதின் உரைத்தனர். நிதியந் நீள்நகர் என்புழி மகரவீறு கெடாமல் நகர வீறாய்த் திரிந்து நின்றது. பெண்டிரின் மென்மைப் பண்பு குறித்த ஏழை என்னும் சொல்லால் கேமசரியையும் ஆடவரின் வன்மையைக் குறித்த உறுவலி என்னுஞ் சொல்லால் சீவகனையுங் கூறிய நயமுணர்க. அவளைப் பூங்கொடி என்றும் அவனை உலங்கொள்தோள் உடையன் என்றலும் உணர்க. உறுவலி : அன்மொழித்தொகை : சீவகன். ( 60 )
வேறு
-
1472. கண்ணுறக் காளையைக் காண்டலுங் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழ்ந்தன மாமையு
முண்ணிறை நாணு முடைந்தன வேட்கையு
மொண்ணிறத் தீவிளைத் தாளுருக் குற்றாள்.
விளக்கம் : உண்ணிறையும் நாணம் : வினைத்தொகை.( 61 )
-
1473. வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவ
ணோக்கணங் காய்மன நோய்செய நொந்தவன்
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்
தாக்கணங் கோமக ளோனெத் தாழ்ந்தான்.
விளக்கம் : வாக்கு - திருத்தம். வாக்கணங்கு என்று கொண்டு நாமகள் எனினுமாம். இனி, அணங்கு என்றற்கு வீணைக்குரிய மாதங்கி என்னும் தெய்வம் எனினுமாம். இது நச்சினார்க்கினியர் கொள்கை. சீவக 550 ஆம் செய்யுளையும் உரையையும் காண்க. தாக்கு அணங்கு : திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 62 )
-
1474. நல்வளத் தாமரை நாணிய வாண்முகக்
கொல்வளர் வேற்கணி னாள்குழைந் தாளெனச்
சொல்வளர்த் தாரவ டோழியர் சோர்குழன்
மல்வளர் மார்பனை வந்து வளைந்தார்.
விளக்கம் : சோர்குழல் அவள் எனக் கூட்டுக. ( 63 )
-
1475. நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்
கினத்திடை யேறனை யானெழி னோக்கிப்
புனக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினை யேகண்டு வாட்க ணகன்றாள்.
விளக்கம் : ஏறனையான் எழில் புனக்கொடி பொற்பொடு நோக்கி என முன்னர்க் கூட்டிப், பின்னர், புண்ணிய நம்பி வனப்பினையே பார்த்து வாட்கண் அகன்றாள் என்பர் நச்சினார்க்கினியர். நிப்புதி : நிஸ்ப்ருதி என்பதன் திரிபு என்பர். வாட்கண்ணாள் மீண்டுபோனாள் என்றும் உரைக்கலாம். மகளிர் கூட்டத்தினிடையே நின்றமை கருதி இனத்திடை ஏறனையான் என்றார். ( 64 )
-
1476. வள்ளலை வாசநெய் பூசி மணிக்குடத்
தெள்ள னீர்சொரிந் தாட்டினர் தேம்புகை
யுள்ளுற வுண்ட கலிங்க முடுத்தபின்
கள்ளவிழ் கண்ணி கலத்தொ டணிந்தார்.
விளக்கம் : தானே வலியவந்து கேமசரிக்குத் தன்னையே வழங்கினமை கருதி வள்ளலை என்றார். கலிங்கம் - கலிங்க நாட்டில் நெய்யப்பட்டதோர் ஆடையைக் குறித்துப் பின்னர் ஏனைய ஆடைக்கும் பொதுவாய் நின்றதொரு சொல். கண்ணி - தலையிற் சூட்டுமாலை. கலத்தொடு - ஆபரணத்துடன். ( 65 )
-
1477. மங்கல வெள்ளை வழித்துமுத் தீர்த்தபின்
கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தி
யங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர்
செங்கயற் கண்ணியர் சீரி னயின்றான்.
விளக்கம் : வெள்ளை - சந்தனத்தில் ஒருவகை. இது வெண்ணிறமுடைமையின் மங்கலப் பொருளாகவும் மதிக்கப்படும். முத்தும் மங்கலங்கருதிக் கூறப்பட்டது. ( 66 )
-
1478. பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற்
சித்திரத் தவிசினுட் செல்வன் சீர்பெற
நித்தில மணியுறழ் கரக நீரினா
லத்துறை விடுத்தன னலர்ந்த தாரினான்.
விளக்கம் : திண்ணைமேல் இடப்பட்ட தவிசினுள் இருந்து என்க. அத்துறை - உண்ணுதலாகிய அத்துறை என்க. கரகம் : கெண்டிகை. ( 67 )
-
1479. இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர்
பளிங்குபோழ்ந் தருகுபொன் பதித்த பத்தியின்
விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத்
தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே.
விளக்கம் : இணுங்குதல் - பறித்தல். காய் - பாக்கு. திரை - வெற்றிலை. பவனம் - அந்நாட்டுக் கம்மியர்க்கு ஆகுபெயர். அடைப்பை - வெற்றிலை முதலியன இட்டுவைக்கும் பை. ஒரு பளிங்கையறுத்தப் பொன்னை விளிம்பிற் பதித்த அடைப்பையில் இணுங்கின காயும் வெற்றிலையும் பார்வைக்குச் சென்றன என்றும், யவனக் கைவினைபெற்ற முத்தழுத்திய பொன்னடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் முகவாசமும் ஈண்டித் தின்றற்குச் சென்றன என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பார். ஒன்றாக உரைப்பாருமுளரென்றார். ( 68 )
-
1480. பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ்
வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம்
வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே.
விளக்கம் : வெற்றிலையை முன்னிட்டுப் பின் பிளவை மெல்லுதல் வேண்டும் என்பது ஒரு விதி. கறித்து - மென்று; இக்காலத்தே கடித்து என வழங்குவர். மெல்லுங்காற் குண்டலம் அசைதல் இயல்பாதலுணர்க. தேசு - தேசிகம் எனத் திரிந்தது. ( 69 )
-
1481. பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல்
வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகி
லுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன்
கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே.
விளக்கம் : உலாம் : உவமப்பொருட்டு. கிளவி : கேமசரி. பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. அல்குல் முதலியன பூந்துகிலுள் இருப்பனவாகவும் என் கண்ணினும் மனத்தினும் இருந்தன, இஃதொரு புதுமை என்று வியந்தபடியாம்.இது முதல் கலைத்தொகை (சீவக - 1488) வரை சீவகன் கேமசரியை நினைத்து வருந்துதல் கூறப்படும். ( 70 )
-
1482. கடிகமழ் குழலினாற் கட்டி மெய்யெலா
நடுவொசி நோன்சிலைப் புருவத் தாற்புடைத்
தடுமலர் நெடுங்கணா லாவி போழ்ந்திடாக்
கொடியவ ளிளமுலை கொல்லுந் கொல்லுமே.
விளக்கம் : முலை தான் வருத்தலுடைமையின் தானும் வினைமுதலாம். புருவத்தாற் புடைத்துக் கண்ணால் ஆவிபோழ்ந்திடாத கொடியவள் தன் குழலாலே கட்ட முலைகொல்லும்என முடிப்பர் நச்சினார்க்கினியர். இவையெலாம் வருத்துகின்றனவே யாதலின் புருவத்தையுங் கண்ணையுந் தீங்கு செய்யாதனவாகக் குறிப்பிடுதலிற் போதிய பயனின்றாம். போழ்ந்திடா - போழ்ந்திட்டு : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ( 71 )
-
1483. கடியன கச்சினாற் கட்டப் பட்டன
கொடியன குங்குமங் கொட்டப் பட்டன
வடிநிலம் பரந்துமுத் தணிந்த வெம்முலை
யிடைநிலஞ் செகுப்பன வென்னை யென்செயா.
விளக்கம் : உலகில் தொழிலாற் கடியவர்கள் கட்டுண்ணப்படுவரென்றும், மனம் கொடியவர்கள் ஒன்றாற் புடையுண்ணப் படுவரென்றும் ஒரு பொருள் தோன்றிற்று என்பார் நச்சினார்க்கினியர்.தம்மைத் தாங்குவதாகிய இடையினையே செகுப்பன; ஏதிலனாகிய என்னை என் செயா! எதுவுஞ்செய்யும் என்பது கருத்து. ( 72 )
-
1484. கரியவுள் வெறியன கட்டப் பட்டன
புரிவொடு புறத்திடப் பட்ட பூங்குழல்
தெரியின்மற் றென்செயா செய்ய நீண்டன
பெரியகண் போலவும் பேது செய்யுமே.
விளக்கம் : செய்யனவும் நீண்டனவும் பெரியனவும் ஆகிய கண்கள் தம் நல்லியல்பிற்கு மாறாகத் தீங்கு செய்கின்றன; இங்ஙனமாகக் கரியனவும் வெறியனவும் புறத்தே தள்ளப்பட்டனவுமாகிய தீயவியல்புடைய ஐம்பால் அக்கண்போற் றீங்கு செய்தல் வியப்போ? ஆராயின் அவை எதுவும் அஞ்சாமற் செய்யும் என்பது கருத்து. இதன்கண் சிறப்புப் பொருளையே உவமையாக்கி இரண்டன் தீமையையும் விளக்குதல் உணர்க. கொடியனவாய், உள்ளே கள்ளின் மயக்குடையனவாய்க் கட்டுண்ணப்பட்டனவாய் எப்போதும் திருகுதலுடனே தம்மிடத்தினின்றும் கீழ்ப்போந்து கிடக்கும்படி புறத்திடப்பட்டனவாய் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. உள்வெறியன - உள்ளே ஒன்றுமில்லதனவாய் எனினும் ஆம். ( 73 )
-
1485. காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனுந்
தூதினாற் றுணிபொரு ளுணர்த்தித் தான்றமர்க்
கேதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்
கோதநீ ரமுதமு முலகும் விற்குமே.
விளக்கம் : காதன்மை : காதற்றன்மை. கண்ணென்னும் தூது என்றது தானோக்காக்காற் றன்னை நோக்கும் களவு நோக்கத்தை. இஃதவள் உடம்பாட்டைத் தனக்குணர்த்துதலின் தூது எனப்பட்டது. தமர் அறியாமைப் பொருட்டு என்னை ஏதின்மைபடவும் நோக்கும். நோக்கு என்க.
-
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. (குறள். 1099)
வேறு
-
1486. மிகுகொடா முத்தஞ் சூட்டி மீளிமை தீர்த்து மின்னு
நகுகொடா மணிக ணல்ல தெளித்துக்கொண் டெழுதி நன்பொன்
முகபடாம் வைப்ப வாட்செற் றழன்றுகண் கரிந்த முல்லைத்
தொகுகடாங் கோதை வெய்ய துணைமணி முலைக டாமே.
விளக்கம் : ஒழிந்தவை - இம்முலைகள் ஒழிந்த ஏனையுறுப்புகள். ஏனையுறுப்புக்களினும் மிக்கு வருத்துகின்றமையால் கொடா மிகு - மீளிமை என்றார். நகுகொடா - நகுதற்கு இடங்கொடாத எனினுமாம். சூட்டுதலாலும் எழுதுதலாலும் முகபடாம் வைத்தலாலும் மீளிமை தீர்த்து மறைத்தலான் வெளியே நின்று கொல்லமாட்டாமல் உள்ளேயிருந்தே அழன்று கண்கரிந்தன என்பது கருத்து. மீளிமை - கொங்கையின் வலி : பன்னீராண்டும் சென்று முலை முதிர்தலின் கண் கருகின என்றார். ( 75 )
-
1487. தேன்கறி கற்ற கூழைச் செண்பக மாலை வேற்க
ணூன்கறி கற்ற கால
னொண்மணித் தடக்கை வைவேல்
கூன்பிறை நுதலோர் கூற்றங் குவிமுலை நமன்கைப் பாசம்
யான்பிற னளியன் வாழ்வா னாசைப்பட் டிருக்கின் றேனே.
விளக்கம் : செண்பகமாலை என்றது கேமசரி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. வேற்கண் என்புழி அடை மொழி உவமங்குறியாமல் வாளா நின்றது. இனிக் குவிமுலை என்பதனைப் பெயராக்கிக் குவிமுலையின் கூழைச் செண்பகமாலை கைப்பாசம், கண் கை வேல் எனினுமாம். இருக்கின்றேனே : ஏ : தேற்றம். கூற்றம், நமன் என்பன சுட்டுப்பெயர். இனி, காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனுமாம். ( 76 )
வேறு
-
1488. திருவிற்குங் கற்பகத் தெரியன் மாலையா
ருருவிற்கோர் விளக்கமா மொண்பொற் பூங்கொடி
முருகற்கு மநங்கற்கு மெனக்கு மொய்சடை
யொருவற்கும் பகைத்தியா லொருத்தி வண்ணமே.
விளக்கம் : திருமகளின் அழகையும், முருகன் வேலையும், காமன் வில்லையும், சீவகன் அறிவையும், இறைவன் பிறையையும் வாங்கியதாற்பகை யென்றான். வேல் கண்ணுக்கும், வில் புருவத்திற்கும், பிறை நெற்றிக்கும் உவமையாயின. திருவிற்கோர் என்பதூஉம் பாடம். இனி பூங்கொடி ஒருத்தி திரு. முருகன், காமன், இறைவன் ஆகியோற்கு வடிவினாலேயே பகைத்தியாயினாள்; எனக்கு உயிர்க்கே பகைத்தியாயினாள் என்றுமாம். திருவிற்கும் கற்பகத்தெரியலாகிய மாலையணியும் இந்திராணி முதலிய வானவ மகளிர்க்கும் அழகிற்கொரு விளக்கமாக அமைந்த கேமசரி எனினும் பொருந்தும். பூங்கொடி : கேமசரி. இறைவன் - சிவபெருமான். பகைத்தி - பகைமை யுடைவள். ( 77 )
-
1489. கலைத்தொகை நலம்பல கடந்த காளைதா
னலத்தகை யவணல நினைப்ப நாய்கனு
மலைத்தொகை மதந்தவழ் யானை மன்னவ
னிலத்தவர்க் கறிவுற நெறியிற் செப்பினான்.
விளக்கம் : அரசன் செறிந்திருத்தலின் அவனுக்கு மணத்தினை அறிவித்தான். கேமசரி வருத்தம் கண்ணுற நல்வள (சீவக. 1472, 1474) என்பனவற்றிற் கூறினார். அரசனுந் தானும் நெருங்கிய கேண்மையுடையர் ஆதலின் அவனுக்கும் ஏனையோக்கும் அறிவித்தான் என்பது கருத்து. மன்னவன் என்புழி நான்கனுருபோடு உம்மையும் நிலத்தவர்க்கு என்புழி உம்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன. ( 78 )
-
1490. இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங்
கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்
கடிமண மியற்றினார் கடவு ணாளினால்
வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே.
விளக்கம் : இடியுமிழ் முழக்குப்போலவும் திரைமுழக்குப் போலவும் பல்லியம் ஆர்த்தெழ என்க. பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். கடவுள் நாள் - கடவுட்டன்மையுடைய நன்னாள். ( 79 )
-
1491. மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான்
கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை
யணிக்கிட னாயி வரிவை தன்னொடும்
பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே.
விளக்கம் : கணி - கணிவன், கதிர்த்தல் - ஒளிர்தல். காரிகை - அழகு. பிணித்து என்ற செய்தெனெச்சத்தை பிணிப்ப எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக. ( 80 )
-
1492. பூந்துகில் பொருதிரை பொம்மல் வெம்முலை
யேந்திய மணிவரை யிரக்க நீர்த்தரங்
காய்ந்தவன் றோளிணை நாக மாகவைத்
தீந்ததக் கடலவற் கமுத மென்பவே.
விளக்கம் : வரை - மந்தரம். அருள் நெகிழ்தலுண்மையின் நீரின் அசைவு என்றார். நாகம் - வாசுகி. கடல் - பாற்கடல். அவன் கடைதலின் என ஒரு சொல் வருவித்துக்கொள்க. இவற்றால் முயக்கமும் இதழ்பருகலும் கூறினார். அவன் காட்ட அவள் காண்டலின் அவற்கு என அவன்மேல் ஏற்றினார். ( 81 )
-
1493. சந்தனச் சேற்றிடைத் தாம வார்குழற்
பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின்
மைந்தன தார்குலைந் துடைய வாய்திறந்
தஞ்சிலம் பணியல்குற் கலையொ டார்த்தவே.
விளக்கம் : இச்செய்யுள் கேமசரியின் முயக்கங் கூறிற்று. தார் குழைந்துடைய என்பதற்குத் தூசிப்படை உடைய என்றும் ஒரு பொருள் தோன்றிற்று; யானை பாய்தலின் தூசிப்படை சேற்றிலே உடைந்தது என்றும், அதற்குச் சிலர் ஆர்த்தனரென்னும் ஒரு பொருள் தோன்றிற்று என்றும் நச்சினார்க்கினியர் நுண்ணிதிற் கூறினர். காமக்கடல், அழகிய உடையாகிய அலைமோதவும், கேமசரியின் முலையாகிய மலையிற் சீவகன் தோள்களாகிய பாம்புக் கயிறு பூட்டியிழுத்துக் கடையும்போது அவனுக்கு இன்பமாகிய அமுதத்தைக் கொடுத்தது என்க. தார் - தூசிப்படை. ( 82 )
வேறு
-
1494. கோதையுங் குழலும் பொங்கக் குவிமுலைக் குழங்கன் மாலைப்
போதுகப் பொருது பூணும் பொருகடன் முத்து மூழ்கக்
காதலுங் களிப்பு மிக்குக் கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத் தன்மைபெற் றவர்க ளொத்தார்.
விளக்கம் : முன்னர் (80) அக்கடல் அமுதம் ஈந்ததென்றார் ஈண்டும் அவ்வமுதினை நுகர்ந்து மூவாமையுஞ் சாவாமையும் பெற்ற அத்தேவர்களை ஒத்தார் என்றமை உணர்க. குழங்கல் : மணம். ( 83 )
-
1495. புனைமலர்த் தாரி னானும் போதணி கொம்ப னாளு
நனைமலர்க் காவு மந்தண் வாலியு நல்ல வாடிச்
சுனைமலர்க் குவளை குற்றுச் சூழ்மலர்க் கண்ணி சூட்டி
வினைநல நுகர்ந்து செல்வார் விதியினான் மிக்க நீரார்.
விளக்கம் : தாரினானும் கொம்பனாளும் ஆடியும் குற்றும் சூட்டியும் நுகர்ந்து செல்வார் என உம்மை விரித்தோதுக. இங்ஙனம் மாந்தர் நுகர்தற்குக்காரணம் முற்பிறப்பிலே செய்தநல் வினையே என்பார் விதியினான் மிக்கார் என்றும் வினைநலம் நுகர்ந்து செல்வார் என்றும் விதந்தோதினார். ( 84 )
-
1496. பொழிந்துகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்லக்
கழிந்தன விரண்டு திங்கள் காளையு மற்றோர் நாளாற்
பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி தன்னோ
டழிந்துவீ ழருவிக் குன்றி லாய்மலர்க் காவு புக்கான்.
விளக்கம் : உவகை அகத்தே நிரம்பியவழி மெய்ப்பாடாகப் புறத்தார்க்கம் புலப்படுதலுண்மையின் பொழிந்துகு காதல் என்றார். பூண்டு - மேற்கொண்டு. புல்லுகை - தழுவுதல். நாளால் - நாளில். சிறந்த பெண்மை நலத்தினும் பிழிந்தெடுத்துக்கொண்ட பெண்மை நலத்தையுடையாள் என்க. தோளி : கேமசரி. ( 85 )
-
1497. காஞ்சனக் கமுகு காய்பொற் கனிக்குலை வாழை சூழ்ந்து
பூஞ்சினை நாகந் தீம்பூ மரக்கருப் பூரச் சோலை
மாஞ்சினை மயில்க ளாடச் சண்பக மலர்கள் சிந்துந்
தீஞ்சுனை யருவிக் குன்றஞ் சீர்பெற வேறி னானே.
விளக்கம் : காஞ்சனம் - பொன்; கமுகங்காய்க்கு நிறம் பற்றி வந்தது. பொன்கனி - பொன்போலும் நிறமுடைய பழம். தீம்பூ மரம் : ஒருவகை மரம் (சீவக. 1267, 1901). ( 86 )
-
1498. தினைவிளை சாரற் செவ்வாய்ச் சிறுகிளி மாத ரோப்பப்
புனைவளைத் தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகா
நனைவினை கோதை நாணிப் பொன்னரி மாலை யோச்சக்
கனைகழற் குருசி னண்ணிக் கவர்கிளி யோப்பி னானே.
விளக்கம் : அப்புனைவளைத் தோளியின் சொல்லை என்க. கோதை : கேமசரி. குரிசில் : சீவகன். கவர்கிளி : வினைத்தொகை; தினைக் கதிரைக் கவர்கின்ற கிளி என்க. ஒப்புதல் - ஒட்டுதல். கேமசரி சொற்கேட்டுக் கிளி போகாதது கண்டு சீவகனே அக் கிளிகளை யோட்டினான் என்பது. ( 87 )
-
1499. கொந்தழல் வேற்க ணாலென்னாவிகூட் டுண்ட கொம்பே
செந்தழை யலங்க லேந்திச் சீறடி பரவ வந்தே
னுய்ந்தினிப் பணிசெய் வேனோ வுடம் பொழித் தேகு வேனோ
பைந்தழை யல்குற் பாவாய் பணியெனப் பரவி னானே.
விளக்கம் : துகிலும் மேகலையுஞ் சீர்பெறப் புனையுங் காலத்தும் பைந்தழை புனைதல் பழைமையின் குறப்புப்போலும். சீவகன் கிளியை ஒட்டப் பிரிந்தானாக, அவள் அப்பிரிவைப் பொறாது ஊடினாள். எனவே, புலவி தீர்க்கவேண்டியதாயிற்று. கொம்பு : ஆகுபெயர்; விளியேற்றது. நின்னுடைய வாயுடைய தென்னுடைய வாழ்வென்பான் பணி என்றான். ( 88 )
-
1500. வீணையுஞ் குழலும் பாலு மமுதமுங் கரும்புந் தேனும்
பாணியாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்ல ரென்னாப்
பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகி னானே.
விளக்கம் : இவன் இறந்து படுவேனோ என்றதனைக் கேட்டுக் குறுமுறுவல்கொண்டு ஒரு மொழி கொடுப்பவே. ஊடல் நீங்கியதாகலின், அச் சொல்லை மழலைத் தீஞ்சொல் என்று மகிழ்ந்தான். அம் மொழி கூறலாகாமையின் ஆசிரியர் கூறிற்றிலர் என்ப. முதல் - தன் உயிர். ஊதியம் - ஊடல். வீணையும் யாழும் என வேறு கொண்டுரைப்பதும் உண்டு என்பதைக், குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய (கம்ப. ஊர் தேடு.6) என்பதனாலும் அறிக. ( 89 )
-
1501. திங்களங் குழவி செவ்வா
னிடைக்கிடந் திமைப்ப தேபோற்
குங்கும மார்பிற் பூண்ட
மங்கையோ டிருந்த போழ்தோர்
வாளொளித் தடங்க ணீலம்
மணிவண்டு கண்டு சொன்னான்
கங்குறா னீங்க லுற்றுக்
கமழ்மல ரணிந்த தாரான்.
விளக்கம் : இதன்கண் சீவகன் கேமசரிக்குத் தான் பிரியக் கருதியிருப்பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றான். ( 90 )
-
1502. மணிவண்டிம் மாதர் கோதை
மதுவுண வந்த போழ்தங்
கிணைவண்டங் கிறந்து பாடின்
றிருக்குமே யிரங்க லின்றாய்த்
துணைவண்டு துஞ்சி னீயுந்
துஞ்சுவை யென்று நின்கட்
பணிகொண்ட தின்மை யாற்றான்
பரிவொடு மிருக்கு மன்றே.
விளக்கம் : துணைவண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்று என்றது என் பொருட்டே நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்னும் குறிப்புடையது. மணிவண்டு : அண்மைவிளி. இருக்குமே : ஏ : வினா. பணி யென்றது, மகளிர் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாதலை.( 91 )
-
1503. குழவியாய்ப் பிறந்து வெய்யோன்
குமரனாய் குறுகி யிப்பால்
விழைவுதீர் கிழவ னாகி
விழுக்கதி ருலந்து வீழ
மழலைவண் டுழல நக்க
மல்லிகை யலங்கல் சூட்டிக்
குழல்புரை கிளவி யோடுங்
கொழும்புகை யமளி சேர்ந்தான்.
விளக்கம் : மேலைச் செய்யுளில் இன்பநிலையாமையைக்கண்ட திருத்தக்கமுனிவர் இனம்பற்றித் தம் மனத்தே முகிழ்த்த யாக்கை நிலையாமையினை ஞாயிற்றின்பால் வைத்து உலகோர்க்கு நுண்ணிதின் உணர்த்துதல் உணர்க. கிளவியோடும் : உம் இசை நிறை.
( 92 )
-
1504. திருத்துயில் பெற்ற மார்பன்
றிருந்துதா ருழக்க வின்ப
வருத்தமுற் றசைந்த கோதை
வாளொளித் தடங்க ணீலம்
பொருத்தலும் பொன்ன னாளைப்
புறக்கணித் தெழுந்து போகிப்
பருச்சுடர்ப் பவழ நோன்றாழ்ப்
பன்மணிக் கதவு சேர்ந்தான்.
விளக்கம் : திருமகள் எப்பொழுதும் தங்கும் மார்பன் என்பார் திருத்துயில் மார்பன் என்றார். நிலம் பொருத்தல் என்றது இமை கூடுதலை. பொன் : திருமகள். ( 93 )
-
1505. அல்லியுட் பாவை யன்னா ளறிவுறா வகையி னொற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட் டிலங்கு பைம்பூட்
கொல்சின மடங்க லன்னான் கொழுநிதி மாட நீந்திப்
பல்கதிர்ப் பரிதி போலப் பாயிரு ளேகி னானே.
விளக்கம் : அல்லியுட்பாவை : திருமகள். அல்லி : தாமரை மலர்க்கு ஆகுபெயர். ஒற்றுதல் - தள்ளுதல். ( 94 )
-
1506. தாளுடைத் தடங்கொள் செவ்வித்
தாமரைப் போது போலும்
வாளுடை முகத்தி னாடன்
வருமுலைத் தடத்தின் வைகி
நாளினும் பெருகு கின்ற
நகைமதி யனைய காதற்
கேள்வனைக் கனவிற் காணாள்
கிளர்மணிப் பூணி னாளே.
விளக்கம் : இச்செய்யுட்கு நச்சினார்க்கினியர் கனாக் காண்கின்றவள் அவன் போகக் கண்டாள் என்று கூறியுள்ள குறிப்பு நன்கு விளங்கவில்லை. துயில்கின்றபொழுது நாள்தோறுங் கனவிலே தன்றோள் மேல் கேள்வனைக் காணுமியல்புடைய கேமசரி அன்று கனவின் கண் அவ்வாறு காணாதவளாயினள் என்பது நூலாசிரியர் கருத்தாதல் கூடும் என்று தோன்றுகின்றது. அவ்வாறு காணாதவள் எனவே கனவில் அவன் போகக் கண்டாள் என்பது குறிப்பாகும் என்று நச்சினார்க்கினியர் கொண்டனர் போலும். நகை - ஒளி. மதி - சந்திரன். மதி என்பது ஈண்டுப் பிறையையுணர்த்திற்று, பிறையானது நாளுக்குநாள் வளர்வது போல வளர்கின்ற காதல் என உவமைக்குப் பொருத்தம் கூறவேண்டியிருப்பதால். ( 95 )
-
1507. அரந்தினப் பிறந்த பைம்பொ
னரும்பிய முலையி னாளைக்
கரந்தவன் கங்கு னீங்கக்
கதிர்வளை யணங்கு மென்றோள்
வரந்தரு தெய்வ மன்னாள்
வைகிரு ளனந்த றேறிப்
பரந்தெலாத் திசையு நோக்கிப்
பையவே பரிவு கொண்டாள்.
விளக்கம் : ஈண்டும் தன்கேள்வனைக் கனவினும் காணப் பெறாமையானே விழித்து என்னலும் பொருந்தும். பொன் என்றது அராவப்பட்ட பொற்சுண்ணத்தை; இது தேமலுக்கு உவமை. கணவற்கு நினைத்தன கொடுத்தலின் வரந்தரு தெய்வம். ( 96 )
-
1508. திருமணி குயின்ற செம்பொற்
றிருந்துபூங் கொம்ப னாடன்
கருமணிப் பாவை யன்னான்
கரந்துழிக் காண்டல் செல்லா
ளெரிமணி விளக்க மாடத்
திருளறு காறு மோடி
யருமணி யிழந்தோர் நாக
மலமரு கின்ற தொத்தாள்.
விளக்கம் : விளக்கத்தால் மாடத்தில் இருள் அற்ற இடமளவும் என்க. எனவே ஒளிபரவிய அளவில் என்பதாயிற்று. ஓடி என்றது, அவள் மனநிலையைக் காட்டுகின்றது. மணி சீவகனுக்கு உவமை. அலமருதல் - மனச்சுழற்றி எய்துதல். ( 97 )
வேறு
-
1509. யாண்டை யாயைய வஞ்சினெ னாருயி
ரீண்டு டம்பொழித் தேக வலிக்குமா
னீண்ட தோளவ னேநிறை யானிலேன்
றீண்டு வந்தெனத் தேனின் மிழற்றினாள்.
விளக்கம் : முன்பும் ஒளிந்து விளையாடும் வழக்கமிருத்தலின், இப்போது அதுவாக எண்ணி, யாண்டையாய் என்றும், அஞ்சினேன் என்றும் கூறினாள். நீண்டதோள் : உத்தம இலக்கணம். தீண்டு வந்து என்பது , கண்டேன் சீதையை என்பதுபோல நின்றது. (98)
-
1510. கனிகொள் காமங் கலந்துயி ரொன்றலி
னினியர் மங்கைய ரென்பது கூறுவாய்
பனிகொண் மாமதி போற்பசப் பூரயான்
றனிய ளாவது தக்கது வோசொலாய்.
விளக்கம் : கனிகொள் காமம் - முதிர்ந்த காமம். எம்மியல்பினை நன்கு அறிந்துவைத்தும் இங்ஙனம் எம்மைத் தனிக்க விடுவது நினக்குத்தகுமோ என்றவாறு. ( 99 )
-
1511. கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற்
சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னென
வழலு மேனியு மாற்றலெ னையவோ
நிழலி னீப்பருங் காதலு நீத்தியோ.
விளக்கம் : ஐயவோ : ஓ : இரக்கம். நீத்தியோ : ஓ : வினா. ( 100 )
-
1512. திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ.
விளக்கம் : வல்லையோ : ஓ : வினா. யான் கரிந்து நைதற்கு ஏதுவாகிற செயலைச் செய்யத் துணிந்த நீ முன்னர் மடவாய் நுண்ணிடை வருந்தும் என்றது வஞ்சகமொழியே என்பது அறிந்தேன் என்றவாறு. வல்லையோ - வன்மையுடையையோ. ( 101 )
-
1513. தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை
கண்டு தேவர் கனிபவென் றேத்துவாய்
வண்டு கூறிய வண்ண மறிந்திலேன்
விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய்.
விளக்கம் : தேவர் என்பதற்கு அயனார் என்றும், அவர், உலகைப் படைக்கும் நாமே உலகை அழிக்கும் ஓருருவையும் படைத்தோமே என்று வருந்துவர் என்றும், தேவர் ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி என்றும், தெய்வமகளிர் என்று கொண்டு வாயையும் முலையையுங்கண்டு அவர்கள் வருந்துவார் எனினும் ஆம் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். தேவர் என்புழி, சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. வண்டு - வண்டிற்கு. பெண்ணாகலின் என்பேதைமையால் அதனையான் அறிந்திலேன் என்றிரங்கியவாறு. வண்டு கூறியவண்ணம் என்றது வண்டிற்குக் கூறுமாற்றால் குறிப்பாகப் பிரிவுணர்த்தியதனை. அறிந்திலேன் என்றது அறிவனேல் நின்னைப் பிரியவிட்டிரேன் என்பதுபட நின்றது. ( 102 )
வேறு
-
1514. முலைவைத் ததடத் திடைமுள் கலுறிற்
றலைவைத் துநிலத் தடிதை வருவாய்
சிலைவித் தகனே தெருளே னருளா
யுலைவித் தனையென் னுயிர்கா வலனே.
விளக்கம் : வேலியே பயிரை மேய்ந்தாற் போன்று உயிர்காவலனாகிய நீயே உலைவித்தனை என்னும் நயம் உணர்க. வைத்த நிலம் என்பது பாடமாயின் காலை வாங்கினால் அந் நிலத்தில் அடிச்சுவட்டைத் தடவுவாய் என்க. முள்கல் - முயங்குதல். முலை வைத்த தடம் : யாம் பிறந்த இடமும் சிறிது கிடக்கவேண்டுமென்று முலைதான் அருள் பண்ணிவைத்த தடம். இது சீவகன் கூறிய கூற்றை இவள்கொண்டு கூறியது. எஞ்சுற்றம் என்றிரங்கா தாகமெல்லாங் கவர்ந்திருந்து (சீவக. 2502) என்பர் மேலும். இருவரும் முன்னர் உறாதிருத்தல் இன்மையின், உறின் எனவே முன்பு ஊடல் தீர்த்துக் கூடநினைக்கின் என்பது பெற்றாம். நின் வணக்கம் எல்லாம் வில்வணக்கம் போலத் தீங்கு தருவன வாயிற்றென்பது தோன்ற சிலைவித்தகனே என்றாள். எவன் என்னும் வினா என் என நின்றது. ( 103 )
-
1515. கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையி
னிடனெத் துணையத் துணையும் மெழுதி
யுடனொத் துறைவா னுழைவா ரலனேன்
மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே.
விளக்கம் : எழுதி - எழுத. இனி, முலையெங்கும் தொய்யில் எழுதி உறைவான் என்றுமாம். முற்பட்ட அறியாமை - வண்டிற்குக் கூறியதை அறியாதிருந்தமை. ஒத்துளது: ஒரு சொல். கதிர்ம்முலை; விரிக்கும் வழி விரித்தல். இடன், மடன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி. ( 104 )
-
1516. பெறுமன் பினளென் பதுபே சினலா
லறுமன் பினளென் றறைவா ரிலையா
லிறுமென் பொடினைந் துநைவேற் கருளி
நறுமென் கமழ்தா ரவனே நணுகாய்.
விளக்கம் : பெறும் அன்பினள் அறும் அன்பினள் இத்தொடர்களை அன்பு பெற்றவள், அன்பு அற்றவள் என்று விகுதி பிரித்துக்கூட்டுக. நைவேன் + கு = நைவேற்கு இது தன்மையொருமை வினையாலணையும் பெயர். கு உருபு ஏற்றது. ( 105 )
-
1517. நுனசீ றடிநோ வநடந் துசெலே
லெனதா வியகத் துறைவா யெனுநீ
புனைதா ரவனே பொயுரைத் தனையால்
வினையே னொழியத் தனியே கினையே.
விளக்கம் : அடிநோவப் பொறாத நீ யான் இவ்வளவும் நோதலைப் பொறுப்பாயோ. பொறாயன்றே; எனவே, நீ கூறியது பொய்யே என்பது கருத்து. ( 106 )
-
1518. பருமுத் துறையும் பணைவெம் முலைநின்
றிருமுத் தகலந் திளையா தமையா
வெரிமொய்த் தனலு மிகல்வே லெரிபுண்
மருமத் தனலும் வகைசெய் தனையே.
விளக்கம் : பருமுத்து உறையும் பணைவெம்முலை என அவன் முன் கூறியதை அவள் இப்போது கொண்டு கூறுகிறாள். முத்து - முத்துவடம்: கண்ணீர், பணை - பருமை; வெம்மை - விருப்பம்; காமத்தீயால் வெதும்புதல். முன்னர் முயங்கிப் பிரிந்த பிரிவு புண்ணிற்கும், இப்போது முன்னின்று முயக்கங்கொடாத நிலை வேலிற்கும் உவமை. இத்துணையும் எதிர்பெய்து பரிதல் உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் (தொல். பொருளியல்- 9) என்னும் சூத்திர விதியால் முலையை இங்ஙனம் கூறினாள். ( 107 )
-
1519. புனமா மயிலே பொழிலே புனலே
வனமார் வழையே வரையே திரையே
யினமா மணிசூ ழெரிபூ ணவனைத்
துனயான் பெறுகோ தொழுதே னுரையீர்.
விளக்கம் : மயில் ஆயிரங் கண்ணுடைத்துப் பொழில் நிழலுடைத்து புனல் தண்மையுடைத்து வழை நிழலுடைத்து வரை தன்மையுடைத்து திரை தண்மையுடைத்து ஆதலால் அருட்பண்புடையீர் தொழு தேன் உரையீர் என்றாள் என்க. துன - துன்ன. (108)
-
1520. கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய்
நடுநா ளிரவின் னவைதான் மிகுமா
னெடுவெண் ணிலவின் னிமிர்தேர் பரியா
தடுமால் வழிநின் றறனே யருளாய்.
விளக்கம் : நிலவின் நிமிர்தேர் என்றார், வட்டத்தால் தேருருள்போலிருத்தலின். இரவின் நவை கணையின் நவையினுங் கொடிதாய் மிகும் என்க. தேர் : ஆகுபெயர். தேர்உருள்; இது திங்கள் வட்டத்திற்கு உவம ஆகுபெயர். திங்கள் உருவங் குளிர்ந்திருந்தும் உள்ளத்தில் அருளின்றி அடும் என்றவாறு. இனி இவ்வாறு அடுதல் அறனோ என்றும் இவ்வழி நின்று தலைவனே நீயும் அருள்கின்றிலை என்றும் கூறினள் எனினுமாம். ( 109 )
-
1521. கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந்
தயலே னறியா மையுரைத் ததெலா
மியலா ததுவோ வினியேற் கினியீ
ருயலா வதுகண் மலர்கா ளுரையீர்.
விளக்கம் : கிடந்து - கிடக்க : எச்சத்திரிபு; மெய்ம்மறக்கச் செய்து தன்னுடன் கூடியிராமையின், அயலேன் என்றாள். உரைத்ததனை அவன் செய்த தொழில் என்று கொள்க; பொன்னுரைத்தது என்றாற்போல. அது சொல்லிற்றெல்லாம் என்றாற் போலவும் நின்றது. இனியீர் இகழ்ச்சிக் குறிப்பு. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யென்று நும்மிடம் நான் இனியேனாக இருந்தேன் என்னுங்கருத்துடன், இனியேற்கு என்றாள். நும்மை அவன் புலால் நாறுகின்ற கய லெனப் புகழப் போக்கு உடன்பட்டீர், யான், கண்மலர்காள்! எனப் புகழாநின்றேன். உய்யும்வழி உரைப்பீர் என்னுங் கருத்துடன், கண்மலர்காள்! என்றாள். ( 110 )
-
1522. நெறிநீர் வளையு நிழனித் திலமும்
பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும்
வெறிதா ரவனெவ் வழியே கினனீ
ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள்.
விளக்கம் : என்னிடத்தினுங் காட்டில் நும்பாற் பேரன்புடையன் என்பாள் எழுதிப் புகழும் தாரவன் என்றும், அங்ஙனமாகலின் அவன் நுமக்குணர்த்தாமல் பிரியான் ஆதலின் நீர் அறிவீர் என்றும் கூறினள் என்க. ( 111 )
-
1523. இழுதார் சுடர்வே லிளையா னகலத்
துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத்
தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென்
றழுதா டடமா கவணங் கிழையே.
விளக்கம் : உழுதீர் விடையைத் தொடர்கிற்றிலீர் என்றும் ஒருபொருள் தோன்றிற்று. விடை, காளை : சீவகன்; உவம ஆகுபெயர். விடை - விடுதல் (என்று ஒரு பொருள்,) தொழு - மாட்டுக்கொட்டில். கண்ணீர் தடமாக என ஒருசொல் பெய்க. அணங்கிழை : அன்மொழி; கேமசரி. ஓரிடத்தும் பற்றின்றி யிருத்தலின் விடை; முறித்தற்காகாமையின் வயிரத்தொழு என்றாள். ( 112 )
-
1524. தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர்
வகைவா டிவருந் தியழு வதுகண்
டகையே லமர்தோ ழியழே லவரோ
பகையா பவரென் றனள்பான் மொழியே.
விளக்கம் : அவரோ : ஓ : எதிர்மறை. நிழல், பளிங்கிற்றோன்றிய நிழலென்றலுமாம். பான்மொழி : அன்மொழி; கேமசரி. தகை - அழகு, வகை - தான் வருந்துமாறு. அகைதல் - வருந்துதல். ( 113 )
-
1525. வெறிமா லைகள்வீழ்ந் துநிலம் புதையப்
பொறிமா லைபுனை நிழல்கா ணலளாய்
நெறிநா டியபோ யினணீ டினள்கண்
டெறிவால் வளைகொண் டுவரும் மினியே.
விளக்கம் : எறி வால் வளை என்பதற்கு அறுக்கப்படும் வெள்வளை என்றும் உரைக்கலாம். அவள் அவனைக் கண்டு வளை கொண்டுவருவாள் என்றும் எனவே அவனைத்தான் கொண்டு வரும் என்றாளாம் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். ( 114 )
-
1526. மடமா மயிலே குயிலே மழலை
நடைமா ணனமே நலமார் கிளியே
யுடனா டுமெனை யனையென் றுருகாத்
தொடையாழ் மழலை மொழிசோர்ந் தனளே.
விளக்கம் : ஐயனை என்பதற்குத் தேடுமின் என்னும் வினை வருவிக்க என்பர் நச்சினார்க்கினியர். மயில் சாயலானும் குயில் இசையானும் அன்னம் நடையானும் கிளி சொல்லானும் தன்னோடு உறவுடையனவாதலால் ஐயனை உடனே சென்று தேடுமின் என்று கூறிச் சோர்ந்தாள் எனினுமாம். இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை மாறுபட்டது எனினும் மிகவும் இனிமையுடையதாம். முதலடியில் மழலை என்பது இளமையை யுணர்த்தியது. கடையடியில் உள்ள மழலை என்பது திருந்தாத என்னும் பொருளையுணர்த்திற்று. உருகா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். உருகி என்று பொருள்படும். தொடை -தொடுக்கப்பட்டது நரம்பு. ( 115 )
வேறு
-
1527. மல்லுறை யலங்கன் மார்பன்
பிரிவெனு மெரியுள் வீழ்ந்து
கல்லுறை நாகு வேய்த்தோட்
கதிர்மணி முறுவற் செவ்வாய்
வில்லுறை புருவ மாதர்
வெந்தனள் கிடப்ப மின்றோ
யில்லுறை தெய்வ நோக்கி
யிரங்கிநின் றுரைக்கு மன்றே.
விளக்கம் : இதுமுதல் மூன்று செய்யுள் இல்லுறை தெய்வங் கூறிய இரக்க மொழிகள். மல் - ஒருவகைப் போர்த்தொழில். இஃது அத்தொழில் வன்மையைக் குறித்து நின்றது. நாகுவேய் - இளமையுடைய மூங்கில். கதிர் மணி என்றது ஈண்டு முத்தினை. வெந்தனள் : முற்றெச்சம். ( 116 )
-
1528. புண்ணவாம் புலவு வாட்கைப்
பொலன்கழற் புனைந்த பைந்தார்
கண்ணவாம் வனப்பி னானைக்
காமனே கண்ட போழ்தும்
பண்ணவாம் பவளச் செவ்வாய்ப்
படாமுலைப் பரவை யல்குற்
பெண்ணவா நிற்கு மென்றாற்
பிணையனாட் குய்த லுண்டோ.
விளக்கம் : பெண்ணவாய் என்பதூஉம் பாடம். காமனே : ஏ : பிரிநிலை. அக்காமன் பெண்மைத்தன்மை எய்தி இவனை நுகர்தற்கு விரும்புவன்; அத்தகைய பேரழகினோனை எய்திய இவள் பிரிவினை எங்ஙனம் ஆற்றுவள் என்று இரங்கியபடியாம். ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய் என்பது கம்பராமாயணம்: (தாடகை - 24). ( 117 )
-
1529. கடத்திடைக் கவளந் தேனெய்
கனியைத்தோய்த் தினிய துற்றத்
தடக்கையாற் கொடுத்துப் புல்லுந்
தவழ்மதக் களிறு நீங்கின்
மடப்பிடிக் குய்த லுண்டோ
வாலடிக் குஞ்சி சூட்டுங்
கொடைக்கையான் பிரிந்த பின்றைக்
கோதையாட் குய்த லுண்டோ.
விளக்கம் : கடம் - காடு. தேனெய் - பண்புத் தொகை. இனிய, பல வறிசொல். துற்றல் - உண்ணல். மதந்தவழ் களிறு என மாறுக. குஞ்சி - குடுமி, தலைமயிர். ஊடலை நீக்குவதற்குக் கணவன் மனைவியின் காலில் வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது இலக்கிய மரபு. ( 118 )
-
1530. முயங்கினான் சொன்ன வண்டாய்
முகிழ்முலைத் தெய்வஞ் சேர
வுயங்குவா ளுணர்ந்து கேள்வற்
கூனமும் பிரிவு மஞ்சி
யியங்குவா னின்ற வாவி
தாங்கின ளென்ப போலும்
வயங்குபொன் னீன்ற நீல
மாமணி முலையி னாளே.
விளக்கம் : என்ப, போலும் : அசைகள். அவன், துணைவண்டு துஞ்சில் நீயும் துஞ்சுவை என்றதனை நினைத்து ஆற்றினாள். அவள் நிலைகண்டு இரங்கிய தெய்வம், நின் இறந்துபாடு நின் கேள்வதற்கு ஊனமும் பிரிவுமாமென்று கூறுவதுபோல வண்டாய் வந்து தன் தெய்வத்தன்மையால் அவன் கூறியதை நினைப்பித்தது. ( 119 )
-
1531. வங்சவாய்க் காமன் சொன்ன
மணிநிற வண்டு காணீர்
துஞ்சுவேன் றுயரந் தீரத்
தொழுதகு தெய்வ மாவீர்
மஞ்சுதோய் செம்பொன் மாடத்
தென்மனை தன்னு ளென்றாள்
பஞ்சிமேன் மிதிக்கும் போதும்
பனிக்குஞ்சீ றடியி னாளே.
விளக்கம் : துணை வண்டையும் கருத்துட் கொண்டு, வண்டுகாள் என்றாள். நும்மால் இறந்துபாடு நீங்கினேன். இனி, இரங்காத நும்மைக் கண்டு, இரக்கமுந் தீரும்படி இல்லுறை தெய்வமாய் இருப்பீர் என்றாள்; இருக்குமே யிரங்கலின்றாய் (சீவக. 1502) என்றானாதலின், இது தெய்வத்தன்மையாற் கூறுவித்தது தெய்வம். ( 120 )
-
1532. நொந்தெடுக் கலாது வீங்கும்
வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர்
பந்தெடுக் கலாத நங்கை
பால்கடை வெண்ணெய்ப் பாவை
வெந்துடன் வெயிலுற் றாங்கு
மெலிந்துக விளங்கும் வெள்ளி
வந்துவா னிட்ட சுட்டி
வனப்பொடு முளைத்த தன்றே.
விளக்கம் : இனி, நுசுப்புப்போல் தேய்ந்து என்றுமாம். தேய்ந்த நுசுப்பாற் பந்தெடுக்கலாத நங்கையென அவளியல்பு கூறினார். தேய்ந்த ஓர் : தேய்ந்தோர் : தொகுத்தல் விகாரம். இனி தேய்ந்து எனப் பிரித்து, வருந்தும் என ஒரு சொல் வருவித்து முடிப்பர் நச்சினார்க்கினியர், இறந்துபாடு நீங்கி வருந்தினாள் என்க. ( 121 )
-
1533. எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப்
புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலே
யரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித்
திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்.
விளக்கம் : யாழ் நரம்பிசை போன்று அவட்கியல்பாக அமைந்துள்ள குரல் துன்பத்தால் மாறி அரிகுரல் ஆயிற்றென்பது கருத்து. அரிகுரல் - அரித்தெழும் குரல். அரிக்கூ டின்னியம் என்றார் மதுரைக் காஞ்சியினும், (612) ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. ( 122 )
-
1534. விழுத்திணைப் பிறந்து வெய்ய
வேட்கைவே ரரிந்து மெய்ந்நின்
றிழுக்கமொன் றானு மின்றி
யெய்திய தவத்தின் வந்து
வழுக்குத லின்றி விண்ணோன்
வச்சிர நுதியி னிட்ட
வெழுத்தனான் றந்த வின்ப
மின்னுநீ பெறுதி யென்றாள்.
விளக்கம் : விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கை, ஈண்டு ஆகுபெயராற் பிறப்பினை உணர்த்தி நின்றது. வச்சிரத்தின் நுனியிற் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாமை பற்றி வச்சிர நுதியின் இட்ட எழுத்தன்னான் என்றாள் எனினுமாம். முன்னும் தவப்பயனாக வே இவனை எய்தினை; அத் தவப்பயன் கெடா வியல்பிற்றாகலின் மீண்டும் நீ அவனை எய்துல் ஒருதலை என்பது கருத்து. (123 )
-
1535. பிறங்கின கெடுங்கள் யாவும்
புணர்ந்தவர் பிரிவர் பேசி
னிறங்கின வீழு மேலா
யோங்கிய வெண்ணில் யோனிப்
பிறந்தவர் சாவர் செத்தார்
பிறப்பவே யென்ன நோக்கிக்
கறங்கிசை வண்டு பாடுங்
கோதைநீ கவல லென்றாள்.
விளக்கம் : புணர்ந்தவர் பிரிவர் என்பதைப் பிரிந்தவர் புணர்வர் என மாற்றி இறுதியில் தந்து, அங்ஙனங் கெட்டாலும், பிரிந்தவர்கள் எல்லோரும் புணர்வரே யென்று பார்த்து நீ கவலாதே என்று முடிப்பர் நச்சினார்க்கினியர். மேலும் நீ இவ்வுலகியற்கையினை உணர்ந்து ஆற்றியிருத்தலும் வேண்டும் என்றிதனால் ஆற்றுவிக்கின்றனள் என்க. பிறங்கினகள் யாவும் என இயைக்க. கள் : விகுதிமேல் விகுதி. ( 124 )
-
1536. எரிதலைக் கொண்ட காமத்
தின்பநீர்ப் புள்ளி யற்றாற்
பிரிவின்கட் பிறந்த துன்பம்
பெருங்கட லனைய தொன்றா
லுருகிநைந் துடம்பு நீங்கி
னிம்மயோ டும்மை யின்றி
யிருதலைப் பயனு மெய்தா
ரென்றுயாங் கேட்டு மன்றே.
விளக்கம் : நீர்ப்புள்ளி இன்பத்தின் சிறுமைக்கும் பெருங்கடல் துன்பத்தின் பெருமைக்கும் உவமையாகக் கூறப்பட்டன. உருகு நைதல் காரணமாக இறந்துபடின் என்றவாறு. இருதலை - அவ்விம்மை மறுமையாகிய ஈரிடத்தும். கேட்டும் : தன்மைப் பன்மை வினைமுற்று. ஆதலின் வருந்தாதேகொள் என்பது குறிப்பு. ( 125 )
-
1537. மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப
மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு
மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா
யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள்.
விளக்கம் : மன்னும் - மிகவும் என்பர் நச்சினார்க்கினியர். நீர் மன்னும் மொக்குள் என மாறி நீரிடத்தே நிலைபெற்ற மொக்குள் எனினுமாம். அன்னது - அத்தகைய வன்மையுடையது. நிப்புதி தன் முதுமைக்கேற்றன கூறி ஆற்றுவித்தல் அறிந்தின்புறுக. இளி - யாழிடத்து ஒரு நரம்பு. ( 126 )
-
1538. பஞ்சிறை கொண்ட பைம்பொற்
கலைபுறஞ் சூழ்ந்து வைத்து
நஞ்சிறை கொண்ட நாகப்
படம்பழித் தகன்ற வல்குல்
வெஞ்சிறைப் பள்ளி யாக
விழுமுலைத் தடத்து வைகத்
தஞ்சிறைப் படுக்க லாதார்
தம்பரி வொழிக வென்றாள்.
விளக்கம் : இது கேமசரி தன்னிலே கூறி ஆற்றியது. தாய்க் கூற்றென்பாரு முளர். பஞ்சு : ஆகுபெயர்; ஆடை என்க. கலை - மேகலை என்னுமோரணி கலன். இறைகொண்ட - தங்கிய. இதனைக் கேமசரி கூற்றாகக் கொள்ளலே சிறப்பு. ( 127 )
-
1539. வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்
பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்
பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா
டூசுலாம் பரவை யல்குற் றூமணிப் பாவை யன்னாள்.
விளக்கம் : வண்டினுக்குரைத்த மாற்றம் என்றது, துணை வண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்றதனை (91). பாசம் - கயிறு. பாசம் என்றதற்கேற்ப, ஆக்கப்பட்ட ஆவி என்றதற்குக் கட்டப்பட்ட உயிர் என்னலே சிறப்பு. தூ - தூய. ( 128 )
-
1540. பையர விழுங்கப் பட்ட
பசுங்கதிர் மதிய மொத்து
மெய்யெரி துயரின் மூழ்க
விதிர்விதிர்த் துருகி நையு
மையிருங் குழலி னாடன்
மைந்தனை வலையிற் சூழ்ந்து
கையரிக் கொண்டுங் காணாள்
காளையுங் காலிற் சென்றான்.
விளக்கம் : குழலினாள் : கேமசரி. தன் மைந்தனை என்றது தன் கணவனை என்றவாறு. நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம் என மணிமேகலையில் (21 : 29) கணவனை மகன் எனலுங் காண்க. அரா : அர என ஆனத விகாரம். காலின் - காற்றுப்போ லென்றுமாம். ( 129 )
-
1541. காழகச் சேற்றுட் டீம்பால்
கதிர்மணிக் குடத்தி னேந்தி
வீழ்தரச் சொரிவ தேபோல்
விளங்கொளித் திங்கட் புத்தேள்
சூழிருட் டொழுதி மூழ்கத்
தீங்கதிர் சொரிந்து நல்லார்
மாழைகொண் முகத்திற் றோன்றி
வளைகடன் முளைத்த தன்றே.
விளக்கம் : காழகம் - கருமை. கருஞ்சேறு : இருளிற்கும் பால் நிலவிற்கும் உவமை. ஒளி வீழ்தலேயன்றி இருள் அகலாமையின் சேற்றிற் பெய்த பால் என உவமை கூறினர். புத்தேள் - கடவுள். தொழுதி - திரள். வளைகடல் : வினைத்தொகை. மாழை - பொன். விடியற் காலத்தெழுந்த நிலவு இருளைக்கெடுத்தல் ஆகாமையின் இங்ஙனம் கூறினார். ( 130 )
-
1542. ஏறனாற் கிருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு
வீறுயர் மதியந் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறிலாப் பருதி வட்டம் வருதிரை முளைத்த வாங்க
ணாறுசெ லொருவற் கண்ண லணிகல மருள லுற்றான்.
விளக்கம் : ஏறனான் : ஆண் சிங்கத்தை ஒத்த சீவகன். சீவகன் இருளில் செல்லக் கண்டிரங்கிய விண்ணோர் ஒரு கை விளக்கேந்தினாற்போன்றென்க. வீறு : வேறொன்றற் கில்லாத அழகு. திங்கள்போலத் தேய்தலும் வளர்தலும் மறைதலும் இல்லாமையின் மாறிலாப் பரிதிவட்டம் என்றார். பரிதி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். வருதிரை : கடல். வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஏறு + அனான் = ஏறனான். அன்னான் என்பது அனான் எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று. இல்லா என்பது இலா என நின்றதும் அது. ( 131 )
வேறு
-
1543. எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்
மனைவியர்தா மெனைவர் மக்க
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்
றெனைவர்நீ ருரைமி னென்றாற்
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்
மனைவியரு நால்வர் மக்க
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா
னொருவனென வுரைத்தான் சான்றோன்.
விளக்கம் : எனைவர் - எத்தனைபேர். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கமாதலின், ஒழுக்கமுடைமையை ஒப்பு என்று அஃதில்லாமையை ஒவ்வாமை என்றும் கூறினார். இவ்வூரேன் இப்பதிக்குப் போந்தேன் என்புழி ஊர் பதி என்பன உடல் என்னும் பொருளில் கூறப்பட்டன. உணர்வு என்றது தத்துவ உணர்ச்சியினை. இஃது அணிகலன்களைப் பெறுவோன் பெறுமுன் வினவியது.
( 132 )
-
1544. ஒப்பா னொருமகனே நால்வ
ரொருவயிற்றுட் பிறந்தா னென்ன
நக்கான் பெருஞ்சான்றோ னம்பிபோல்
யாருலகி லினியா ரென்ன
மிக்கா னுரைப்பதுவு மிக்கதே
போலுமால் வினவிக் கேட்பேன்
றக்காய் குறித்த துரையென்றான்
றானுரைப்பக் கேட்கின் றானே.
விளக்கம் : பிறந்தான் - என்ன பிறந்தான் என்று கூறினானாகக் கருதி நக்கான் என்க. பெருஞ்சான்றோன் என்றது குறிப்புமொழி - அறிவிலாதான் என்றவாறு. வினவிக் கேட்பேன் : ஒரு சொல். குறித்தது : நின் கூற்றாற் குறிக்கப்பட்ட பொருள். ( 133 )
-
1545. நற்றானஞ் சீல நடுங்காத்
தவமறிவர் சிறப்பிந் நான்கு
மற்றாங்குச் சொன்ன மனைவியரிந்
நால்வரவர் வயிற்றுட் டோன்றி
யுற்றா னொருமகனே மேற்கதிக்குக்
கொண்டுபோ முரவோன் றன்னைப்
பெற்றார் மகப்பெற்றா ரல்லாதார்
பிறர்மக்கள் பிறரே கண்டீர்.
விளக்கம் : நால்வரவர் என்புழி அவர் என்பது வாளா பகுதிப் பொருளாய் நின்றது. மேற் கதிக்குக் கொண்டுபோம் உரவோம் என்றமையால் அது நல்வினை என்பது பெற்றாம். உரவோன் - அறிவுடையோன்; ஆற்றலுடையோனுமாம். அல்லாதார் - அவ்வுரவோனைப் பெற மாட்டாதார். பிறர் : மகப்பெறாதார். மக்களும் பிறரே எனற்பால் உம்மை தொக்கது. ( 134 )
-
1546. படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து
கண்டவர்மெய் பனிப்ப நோற்றிட்
டுடனாக வைம்பொறியும் வென்றார்க்
குவந்தீத றான மாகுந்
திடனாகத் தீந்தேனுந் தெண்மட்டு
முயிர்க்குழா மீண்டி நிற்றற்
கிடனாகு மூனுமிவை துறத்தலே
சீலமென் றுரைத்தார் மிக்கோர்.
விளக்கம் : நாகம் தோலுரிக்கும்போது தன் அகத்துள்ள நஞ்சினையும் உமிழ்ந்துவிடும் என்பது பற்றி நச்சினார்க்கினியர், படநாகந்தோலுரித்தாற் போலே அகமும் புறமும் தூயவாகத் துறந்து, என நுண்ணிதின் உரை விரித்தனர். வாளரவு தோலும் விடமு நீத்தென்ன (12 : 98) என்றார் சூளாமணியாரும். ( 135 )
-
1547. ஓவா திரண்டுவவு மட்டமியும்
பட்டினிவிட் டொழுக்கங் காத்த
றாவாத் தவமென்றார் தண்மதிபோன்
முக்குடைக்கீழ்த் தாதை பாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம்
விளக்கிவற்றாற் புனைத னாளு
மேவா விவைபிறவும் பூசனையென்
றீண்டியநூல் கரைகண் டாரே.
விளக்கம் : இரண்டுவவு - அமாவாசையும், பூரணியும். அட்டமி - எட்டா நாள். உவவு - பதினான்கா நாள் என்பாருமுளர். உவா : குறியதன்கீழ் ஆகாரம் குறுகி உகரமேற்று உவவு என்றாயிற்று. கண்டார் பூசனை என்று ஏவா, தவம் என்றார் என இயைக்க. ( 136 )
-
1548. இந்நால்வர் துணைவியராக் காதன்
மகனிவனா வுடையார் போகிப்
பொன்னார மார்பிற் புரந்தரராய்ப்
பூமி முழுது மாண்டு
மன்னாகி முக்குடைக்கீழ் வாமன்
சிறப்பியற்றி வரம்பி லின்பம்
பின்னா விளைவித்துப் பிறவா
வுலகெய்தல் பேச லாமே.
விளக்கம் : வாமன் - அருக்கடவுள். வரம்பிலின்பம் : இஃது அதீதாவத்தை என்றும் அருகந்தாவத்தை என்றும் வழங்கப்படும். துணைவியரா, மகனிவனா, பின்னா என்னும் மூன்றிடத்தும் ஈற்றுக் ககரமெய்யும் அகரவுயிருங் கெட்டன. ( 137 )
-
1549. மட்டார்பூம் பிண்டி வளங்கெழு
முக்குடைக்கீழ் மாலே கண்டீர்
முட்டாத வின்பப் புதாத்திறக்குந்
தாளுடைய மூர்த்தி பாத
மெட்டானும் பத்தானு மில்லாதார்க்
கிவ்வுலகி லின்ப மேபோ
லொட்டாவே கண்டீர் வினையவனைத்
தேறாதார்க் குணர்ந்தீ ரன்றே.
விளக்கம் : பிண்டி - அசோகு. மால் - அருகன். முட்டாத - தடையில்லாத. புதா - கதவு. தாள் - தாழ்ப்பாள். புதாத்திறக்கும் தாளாகிய பாதமுடைய மூர்த்தி மாலே என்க. எட்டானும் பத்தானும் என்றது சிறிதேனும் என்னும் பொருள்பட நின்றது. இவற்றின் உள்ள ஆனும் உம்மும் அசைகள் என்பர் நச்சினார்க்கினியர். ( 138 )
-
1550. வேற்றுவ ரில்லா நுமரூர்க்கே
செல்லினும் வெகுண்டீர் போல
வாற்றுணாக் கொள்ளா தடிபுறத்து
வைப்பீரே யல்லிர் போலுங்
கூற்றங்கொண் டோடத் தமியே
கொடுநெறிக்கட் செல்லும் போழ்தி
னாற்றுணாக் கொள்ளீ ரழகலா
லறிவொன்று மிலிரே போலும்.
விளக்கம் : வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே என்றதனால் நுமரில்லா வேற்றுவர் ஊர்க்கே கூற்றங்கொண்டோட எனவும், கொடு நெறிக்கண் என்றதனால், நுமரூர்க்கு நன்னெறிக்கண் செல்லினும் எனவும் விரித்தோதுக. அறிவொன்றும் என்புழி ஒன்றும் என்பது சிறிதும் என்பதுபட நின்றது. வைப்பீரே யல்லீர், இலிரே என வினைமுடிவு செய்க : இன், ஏழனுருபாதல் புறனடையாற் கொள்க. ஏ : அசை. போலும் : உரை யசை. ( 139 )
-
1551. அளைவது காம மடுநறவு
நெய்யொழுகு மூனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீ
ரிவைமூன்றும் விடுமி னென்றாற்
றளையவிழ் கோதையார் தாமஞ்சேர்
வெம்முலைபோல் வீங்கிக் கண்சேந்
துறைய வுறுதி யுரைப்பாரை
யோஒபாவ முணரா ரேகாண்.
விளக்கம் : அளைவது - நுகர்வது. அடுநறவு - காய்ச்சுகின்ற கள்ளுமாம். பின்னாக என்பதன் ஈறுகெட்டது. ( 140 )
-
1552. இழுதன்ன வெண்ணிணத்த செந்தடிக்கே
யேட்டைப்பட் டிரும்பிற் போர்த்த
பழுதெண்ணும் வன்மனத்தா ரோட்டைமரச்
செவியர் கேளார் பால்போன்
றறொழுகியமு தூறுநல் லறத்தை
யோர்கிலரூன் செய்கோட் டக்குக்
கழுகுண்ண வள்ளூர மேசுமந்து
புள்ளிற்கே புறஞ்செய் கின்றார்.
விளக்கம் : இழுது - நெய். இது நிணத்திற்குவமை. செந்தடி - சிவந்த தசை. ஏட்டைப்படுதல் - இளைத்தல்; எண்மை என்னும் பண்படியாகப் பிறந்த சொல். பழுது - குற்றம். பழுதெண்ணும் மந்திரியின் (குறள். 639) ஊனாற் செய்த உடம்பிற்கு ஊனையே சுமந்து கழுகுக்கே புறத்தைச் செய்கின்றவர் வன்மனத்தராய்ச் செவியராய்க் கேளார்; தாமே அறிவதுஞ் செய்யார் என்க. செய்கின்றவர் தாமே அறிவதுஞ் செய்யார்; கேளார் என மாற்றினும் நன்றே. கோட்டக்குப் புறஞ்செய்கின்றார், புள்ளிற்கே புறஞ்செய்கின்றார் என இரண்டிடத்துங் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ஓட்டையென்றார் உட்கொளாமையின். வள்ளூரம் - ஊன். ( 141 )
-
1553. கையாற் பொதித்துணையே காட்டக்
கயற்கண்ணா ளதனைக் காட்டா
ளையா விளாம்பழமே யென்கின்றீ
ராங்கதற்குப் பருவ மன்றென்
செய்கோ வெனச்சிறந்தாள் போற்சிறவாக்
கட்டுரையாற் குறித்தவெல்லாம்
பொய்யே பொருளுரையா முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்.
விளக்கம் : உரையாடாவண்ணம் நாச்செற்று விக்குள்மேல் வந்தமையின் பொதித்துணையைக் கையாற் கார்ட்டினன் என்பது கருத்து. அதனை - அப்பொற்பொதியினை. பருவம் - உண்ணுதற்கேற்ற செவ்வி. சிறந்தாள் போல் என்றது சிறவாதவளாயிருந்தும் என்பது பட நின்றது. செய்கு : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. இவ்வாறு நீயிர் ஈட்டியவற்றைக் கொன்னே இழப்பதன் முன்னே கொடுத்துண்மின் என்றவாறு. ( 142 )
வேறு
-
1554. பனிமதி யின்கதிர் பருகு மாம்பல்போன்
முனிமதி முகத்தியர் முறுவ னம்பினார்
துனிவளர் கதிகளுட் டோன்றி நாடகங்
கனியநின் றாடுவர் கடையில் காலமே.
விளக்கம் : மதிமுனி முகத்தியர் என மாறுக. ஆம்பல் : ஒரு நீர்ப்பூ; இது நிலவில் மலருமியல்புடையதாகலின் மதியின் கதிர் பருகும் ஆம்பல் என்றார். முறுவல் என்றது மகளிர் இன்பத்திற்கு ஆகுபெயர். துனி - துன்பம். கதி - நகரகதி முதலியன. வெவ்வேறு யாக்கைகொண்டுழலுதலால் நாடகம் என்றார். மதியின் கதிரை விரும்பும் ஆம்பல்போல் முகத்தியர் முறுவலை விரும்பினோர் எனக் கோடலே நூலாசிரியர் கருத்தோடியையும் எனல் அடுத்த செய்யுளாலும் உணரலாம். ( 143 )
-
1555. நிழனிமிர் நெடுமதி நிகரி றீங்கதிர்ப்
பழனவெண் டாமரை பனிக்கு மாறுபோற்
குழனிமிர் கிளவியார் கோல மஞ்சினார்
தொழநிமிர்ந் தமரராய்த் துறக்க மாள்வரே.
விளக்கம் : நிழல் - ஒளி. பழனம் - கழனி. பனித்தல் - வருந்துதல். கோலம் அஞ்சினார் என்றது, அவர் இயல்பாகவே விரும்புதற்குரியரல்லர், அவர் தம் கோலமே விரும்பச்செய்வது, அதனை அஞ்சினோர் என்பதுபட நின்றது. ( 144 )
வேறு
-
1556. இன்னவா றுறுதி கூறி
யெரிமணி வயிர மார்ந்த
பொன்னவிர் கலங்க ளெல்லாம்
பொலிவொடு புகன்று நீட்டிச்
சென்மினீ ரென்று கூற
வலங்கொண்டு தொழுது சென்றான்
வின்மரீஇ நீண்ட தோளான்
வெயிற்கட நீந்த லுற்றான்.
விளக்கம் : இன்னவாறு - இவ்வாறு. உறுதி : உறுதிப்பொருள். தனக்கு ஞானாசிரியனாகிவிட்டபடியால் வலங்கொண்டு தொழுது சென்றான் என்பது கருத்து. கடம் - காடு ( 145 )
கேமசரியார் இலம்பகம் முற்றிற்று.
------------------
சீவக சிந்தாமணி
7. கனகமாலையார் இலம்பகம்
விசயன் சீவகனைத் தன் தந்தையிடம் அழைத்தேகினன். அவ் வரசன் சீவகனுடைய வித்தைச் சிறப்பை யுணர்ந்து தன் மக்களாகிய விசயன் முதலிய ஐவர்க்கும் சீவகனை ஆசிரியனாக்கினன். அவர்களும் சீவகன்பாற் பயின்று மேன்மை யெய்தினர். ஏமமாபுரத்து மன்னனாகிய அத்தடமித்தன் சீவகன் தன்னகரத்தினின்றும் பிரியாதிருக்கும்பொருட்டுத் தன் மகளாகிய கனகமாலையையும் அவனுக்குத் திருமணஞ் செய்வித்தனன். சீவகன் இவ்வாறு ஏமமாபுரத்தில் இன்புற்றிருந்தான்.
இனி, இராசமாபுரத்தே நந்தட்டன் முதலியோர் சீவகன் நிலையினை உணராராய்ப் பெரிதும் துன்புற்றனர். நாடெங்குந்தேடியும் காண்கிலர். ஒருநாள் நந்தட்டன் காந்தருவதத்தையின் பாற் சென்று சீவகனைப் பற்றி வினவினான். அவள் தன் வித்தை வன்மையால் சீவகன் ஏமமாபுரத்தில் கனகமாலையோடு இன்புற்றிருத்தலை நந்தட்டனுக்குக் கண்கூடாகக் காட்டினள். பின்னரும் அவள் தனது வித்தை வன்மையால் நந்தட்டனைச் சீவகன் இருக்குமிடத்தே சேரும்படி செய்தனள். சீவகன் நந்தட்டனைக் கண்டு மகிழ்ந்தான். அவனோடு அந் நகரத்தே பின்னரும் உறைந்தனன்,
இனி, சீவகனுடைய தோழன்மார் சீவகன் செய்தியைக் காந்தருவ தத்தையாலுணர்ந்து அவனிருக்கு மிடத்திற்கு மறவர்
பலரோடும் செல்லலாயினர். அவர்கள் செல்லுநெறியில் இருந்ததொரு தவப் பள்ளியின் மருங்கே தங்கினர். அத்தவப் பள்ளியே விசயை நோற்றிருக்கும் பள்ளியாகும். விசயை அவர்களை நீவிர்யாவர்? எவ்வூரீர்? யாண்டுச் செல்கின்றீர்? என வினவினள். அவட்கு விடை கூறிய தேவதத்தன், சீவகன் வரலாறும் கூறும்படி யாயிற்று. அவன் கட்டியங்காரன் சீவகனைக் கொல்லக் கருதி என்று சொல்லும்பொருட்டுச் சீவகனைக் கொல்ல என்ற வளவிலே விசயை மூர்ச்சையுற்று விழுந்தாள். இந் நிகழ்ச்சியால் தோழன்மார் இவரே சீவகனுடைய நற்றாய் என்றும் சீவகன் இறைமகன் என்றும் அறிந்து கொண்டனர். சீவகன் இறவாதிருத்தலை விசயைக்கு விளக்கிக் கூறினர். விசயை சீவகனை நினைந்து பலவாறாகப் புலம்பினாள். தோழன்மாரை நோக்கி அன்பரீர்! சீவகசாமியை என்பால் அழைத்து வம்மின், என்று இரந்தனள். தோழர்கள் அவளை வணங்கி அங்ஙனமே அழைத்து வருவதாக வுணர்த்தி அவளைத் தேற்றி விடை பெற்றுச் சென்றனர்.
சென்ற தோழர்கள் சீவகனிருக்கும் ஏமமாபுரத்தை அணுகி அவனைக் காண்டல் எங்ஙனம் என்று தம்முட் சூழ்ச்சிசெய்து அந் நகரத்து ஆனிரையைக் கவர்ந்துகொண்டனர். அஃதறிந்த அரசன் சினந்து அவ்வானிரையை மீட்கும்பொருட்டுப் படைகளை ஏவினான். அப் படைக்குத் தலைவராய்ச் சீவகனும் நந்தட்டனும் வந்தனர். அதுகண்ட பதுமுகன் நம் சூழ்ச்சி பலித்தது என்று மகிழ்ந்து, ஓர் அம்பில் நின்னடியேம் நின் திருவடியிலுறைதல் வேண்டிச் சச்சந்தன் மகனாகிய நின்னைக் காணவே வந்துள்ளேம் என்று எழுதி அதனைச் சீவகன் அடிகளிலே விழும்படி எய்தான். அக் கணையையும் அதன்கட் பொறித்த செய்தியையும் அறிந்த சீவகன் இங்ஙனம் அம்பேவியவன் பதுமுகனே ஆதல் வேண்டுமென்று துணிந்தனன்.பின்னர்ப் போர் நிகழாதபடி செய்து அவர்களைக் கண்டு அளவளாவினான். அரசன் திருமுன்னர் அழைத்தேகி இவரெல்லாம் என் ஆருயிர்த் தோழராவார் என்று அறிவுறுத்தினன். அரசனும் அவரை வரவேற்று மகிழ்ந்தான். பின்னர்ச் சீவகன் பதுமுகன் முதலியோரைத் தனியிடத்தே வைத்து யான் இறைமகனாதலை நீயிர் உணர்ந்ததெப்படி? என்று வினவினன். அவர்களும் தாம் விசயையைத் தண்டகாரணியத்துத் தவப்பள்ளியிற் கண்டமை கூறினர். அதுகேட்ட சீவகன் ஆற்றாமையாலழு தனன். என்னே! என்னே! என்னே! எம் அடிகளாரும் உளரோ! உளரோ! என்று வினவினன். அவர்பால் இப்பொழுதே செல்லுதல்வேண்டும் என்று விரைந்தனன். தடமித் தன்பால் விடை கேட்டனன். அவனும் சீவகன் இறைமகனாதலறிந்து உவகை கொண்டனன். அன்புடன் விடையும் ஈந்தான். சீவகன் கனகமாலையை அங்கேயே இருக்கச் செய்து தோழரோடும் மறவரோடும் விசயை தவப்பள்ளி நோக்கிச் சென்றான்.
-
1557. இரங்கு மேகலை யல்கு
லின்கனித் தொண்டையந் துவர்வா
யரங்கக் கூத்திக ணன்பின்
மனையவட் டுறந்துசெல் பவர்போற்
பரந்த தீம்புனன் மருதம்
பற்றுவிட் டினமயி லகவு
மரங்கொல் யானையின் மதநா
றருஞ்சுர மவன்செலற் கெழுந்தான்.
விளக்கம் : பழகினும் மயில் பாம்பையும், யானை பாகனையும் கொல்வன ஆதலின், பரத்தையர்க்கு மயிலும் யானையும் உடைய காடு உவமைப் பொருளாயிற்று. சுரம் - சுதஞ்சணன் கூறிய கானவர் குரம்பை சூழ்ந்த காடு.( 1 )
-
1558. கலவ மாமயி லெருத்திற்
கடிமல ரவிழ்ந்தன காயா
வுலக மன்னவன் றிருநா
ளொளிமுடி யணியந்துநின் றவர்போற்
பலவும் பூத்தன கோங்கம்
பைந்துகின் முடியணிந் தவர்பின்
னுலவு காஞ்சுகி யவர்போற்
பூத்தன மரவமங் கொருங்கே.
விளக்கம் : கலவம் - கலாபம், தோகை. எருத்தின் - கழுத்தைப் போன்று. கடி - மணம். கருநனைக் காயாகணமயில் அவிழவும் என்றார் சிறுபாணினும் (165). உலக மன்னன் என்றது பேரரசனை. முடியணிந்தவர் என்றமையால் அரசர் என்பது பெற்றாம். கோங்கம் பலவும் பூத்தன என மாறுக. காஞ்சுகி - மெய்ப்பைபுக்க காவன்மாக்கள் - இவரை மிலேச்சர் என்பர் நச்சினார்க்கினியர். (2)
-
1559. ஓங்கு மால்வரை வரையா
டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன்
றாங்கு சந்தனந் தளரத்
தழுவி வீழ்வன தகைசா
லாங்கண் மாலுல களப்பா
னாழி சங்கமொ டேந்தி
தேங்கொண் மார்பிடைத் திளைக்குஞ்
செம்பொ னாரமொத் துளவே.
விளக்கம் : விழும் தேன் அருவிகள் ஆரத்தை ஒத்தன; இறால்கள் சங்கையும் ஆழியையும் ஒத்தன; மலை திருமாலை ஒத்தது, ஆங்கண் அங்கண் என்பதன் விகாரம், தேன் கண்ணுக்கினிமை. வரை தாங்கின சந்தனமும் ஆரம்போன்றன எனினும் ஆம். ( 3 )
-
1560. வீழ்ந்து வெண்மழை தவழும்
விண்ணுறு பெருவரை பெரும்பாம்
பூழ்ந்து தோலுரிப் பனபோ
லொத்த மற்றவற் றருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவிற்
றதும்பின மதுகரம் பாடச்
சூழ்ந்து மாமயி லாடி
நாடகந் துளக்குறுத் தனவே.
விளக்கம் : வெண்மழை வீழ்ந்து தவழும் என மாறுக. மழை: ஆகுபெயர்; முகில். ஊழ்ந்து - கழன்று. வெண்முகில் தவழும் மலை தோலுரிக்கும் பாம்பிற்குவமை. அருவி முழக்கத்திற்கு மத்தள முழக்கம் உவமை. மயில்களுக்குக் கூத்தியரும், வண்டுகட்குப் பாணரும் உவமைகள். ( 4 )
-
1561. கருவி தேனெனத் தூங்குங்
கதிரணி யிறுங்கொடு தினைசூழ்
பொருவில் யானையின் பழுப்போற்
பொங்கு காய்க்குலை யவரை
யருவி யைவனங் கரும்பு
மடக்கருங் கவைக்கதிர் வரகு
முருவ வெட்பய றுழுந்து
மல்லவு மெல்லையின் றுளவே.
விளக்கம் : கருவித்தேன் பாடமாயின் தொகுதியையுடைய தேன் என்க. கருவி அல்லது கைத்தளம் என்பது ஒருவகைக் கேடகம். கருவியும் தேனடையும் இறுங்குக்கு உவமை. அவரைக் குலைக்கு யானைப்பழுவெலும்பு உவமை. மதமால் யானைப் பழுக்குலை அவரை (திருவிளை. நாட்டு - 29.) ( 5 )
-
1562. யானை வெண்மருப் புலக்கை யறையுர லைவன மிடித்த
தேனெய் வாசவற் குவவித் தீங்கனிவாழையின் பழனு
முனை யுண்டவருருகும் பசுந்தினைப் பிண்டியு மொருங்கே
மானி னோக்கியர் நோக்கி வழிதொறு மீவதவ் வழியே.
விளக்கம் : பாசவல் என்பது வாசவல் என விகாரப்பட்டது. பசுமை+அவல்; பாசவல், பசுமை - புதுமை. புதிய நெல்லாவது அறுத்த அண்மையிலுள்ள நெல். ஊனை : ஐ : அசை. ( 6 )
-
1563. குறிஞ்சி யெல்லையி னீங்கிக்
கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்
கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத்
தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே
னீர்பெய் தார்த்தன சுரும்பே.
விளக்கம் : முல்லைக் கொடி கொன்றையினும் குருந்தினும் படர்ந்தது. நடுவே நின்ற குருந்திற் சுரும்பு எழ, அஃது அசைந்து தேனைச் சொரிந்ததனாற் சுரும்பைப் பாவைக்குத் தந்தையாக்கினார். ( 7 )
-
1564. அரக்குண் பஞ்சிக டிரட்டி
யருமணி மரகதப் பலகைப்
பரப்பி யிட்டன போலக்
கோபங்கள் பயிர்மிசைப் பரவ
வுரைத்த மென்றயிர்ப் பித்தைக்
கோவலர் தீங்குழ லுலவ
நிரைக்கண் மாமணி கறங்க
நீணிலங் கடந்தன னெடியோன்.
விளக்கம் : அரக்கு - சாதிலிங்கம், பயிருக்கு மரகதப் பலகை உவமை. இந்திர கோபம் செம்பஞ்சிக்குவமை. இந்திரகோபம் கார் காலத்தே தோன்றும் ஒருவகைப் புழு. எனவே முல்லை நிலத்திற்குரிய கார்ப்பொழுதும் கூறினாராயிற்று. தயிர் உரைத்த மென்பித்தைக் கோவலர் என்க. பித்தை - ஆண் மயிர். உரைத்தல் - தடவிக்கோடல். கறங்குதல் - ஒலித்தல். நெடியோன் - ஈண்டுச் சீவகன்.
-
1565. வள்ளி வாரிய குழியின்
வளர்பொன்னும் வயிரமு மிமைக்குஞ்
சுள்ளி வேலியி னீங்கித்
துறக்கம்புக் கிடுமெனச் சூழ்ந்து
வெள்ளி வெண்டிரள் விசித்து
நிலத்தொடு தறிபுடைத் தவைபோற்
றுள்ளி வீழுய ரருவி
வனகிரி தோன்றிய தவணே.
விளக்கம் : பொன்னும் வயிரமும் இமைக்கும் வனகிரி, அருவிகளையுடைய வனகிரி என்க. வள்ளி - ஒருவகைக் கிழங்கு. வாரிய - அகழ்ந்த. வனகிரி, வானுறவளர்தலின் மேலும் வளர்ந்து துறக்கத்தே புகாதபடி தடைசெய்தற் பொருட்டு வெள்ளிக் கம்பிகளை அதன் தலையிலே பூட்டி நிலத்தொடு கட்டிவைத்தாற்போலத் தோன்றின அதன் உச்சியினின்று வீழும் வெள்ளிய அருவிகள் என்க. ( 9 )
-
1566. அண்ண றான்செலு முன்னா
லணிமலர்ப் பூம்பொழி லதனுள்
வண்ண மாச்சுனை மாநீர்
மணிதெளித் தனையது ததும்பித்
தண்ணென் றாமரை கழுநீர்
நீலத் தாதவி ழாம்ப
லெண்ணில் பன்மலர் கஞலி
யினவண்டு பாண்முரன் றுளதே.
விளக்கம் : வண்ணமாச்சுனை உளது எனக் கூட்டுக.அண்ணல் : சீவகன். முன்னால் என்பதன்கண் ஆல் அசை. தெளித்தல் - கரைத்தல். ததும்பி என்றது நிரம்பி என்றவாறு. கஞலி --நெருங்கி. பாண் முரன்றது என்புழி உவம உருபுதொக்கது. பாண் - பாணர். ( 10 )
வேறு
-
1567. கானத்தி னேகு கின்றான்
கடிபொழிற் கவின்கண் டெய்தித்
தானத்தி லிருந்த லோடுந்
தையலா ளொருத்தி தானே
வானத்தி னிழிந்து வந்த
வானவர் மகளு மொப்பா
ணானமும் பூவுஞ் சாந்து
நாறவந் தருகு நின்றாள்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் கானத்தின் ஏகுகின்றான் என்பதைப் பெயராக்கி, வனசரிதன் என்னும் பொருளைக் கொண்டும் தானம் என்பதை முனிவருறைவிடம் என்றும் கூறுவர். இவ்வாறு கொண்டு சீவகன் கடிபொழிலிற் சென்றிருந்த அளவிலே, தையலொருத்தி அத்தானத்தில் உறைவான் ஒரு வனசரிதன் கவினைக் கண்டு, தானே வந்து அவனருகே நின்றாள் என்று முடிபு கூறுவர். செய்யுளமைப்பை நோக்கின் இப் பொருள் நச்சினார்கினியரது படைப்பென்பது தானே போதரும். இவ்வாறு படைப்புப் பொருள் கூறுதற்கு அவர் கூறுங் காரணம்: இங்ஙனங் கூறாது சீவகன் கவினைக் கண்டு அவள் எய்தினாளென்று கூறின், மேல் இவற்கு இவள் வேட்கை விளை வித்தலின், இவன் நெஞ்சு தன் தன்மை திரிந்ததனை இவன் தேற்றினான் என்று கூறுவர். அங்ஙனம் கூறவே; மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாற் செய்து கொள்ளும் பாவங்களிற் சிறந்த மனத்தாற் செய்து கொள்ளும் பாவமும் சீவகற்கு எய்திற்றாம் ஆதலானும், உழுவலன்போடு தோன்றிய மகளிரிடத்தல்லது இவற்கு வேட்கை நிகழாதென்பது இத் தொடர் நிலைச் செய்யுட்குக் கருத்தாதலாலும் அது மாறுபடக் கூறிற்றாம் என்றுணர்க என்பதாம். இவருடைய இக் கருத்து நூலாசிரியர்க் கிருக்குமேல் இங்ஙனம் வேறு பொருள் பயக்க நூலியற்றரென்க. ( 11 )
-
1568. குறிஞ்சிப்பூங் கோதை போலுங்
குங்கும முலையி னாட
னிறைந்தபொற் கலாபந் தோன்ற
நெடுந்துகில் விளிம்பொன் றேந்திச்
செறிந்ததோர் மலரைக் கிள்ளித்
தெறித்திடாச் சிறிய நோக்கா
நறும்புகைத் தூது விட்டு
நகைமுகங் கோட்டி நின்றாள்.
விளக்கம் : குறிஞ்சிப் பூ குங்குமத்திற்குவமை. தோன்ற - சிறிதே உடை நெகிழ்தலாலே தெரிய. தெறித்திடா, நோக்கா இவை யிரண்டும் செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்கள்; இவையும், விட்டு, கோட்டி என்பனவும் அடுக்கி, நின்றாள் என முடிந்தன. ( 12 )
-
1569. அணிகல வரவத் தாலு
மமிழ்துறழ் நாற்றத் தாலும்
பணிவருஞ் சிங்க நோக்கிற்
பணையெருத் துறழ நோக்கி
மணிமலர் நாகஞ் சார்ந்து
வழையொடு மரவ நீழற்
றுணிவருஞ் சாய னின்றா
டோன்றறன் கண்ணிற் கண்டான்.
விளக்கம் : கண்ணின் எனவே, மனம் பொருத்த நோக்கிற்றிலன் என்க. துணிவருஞ்சாயல்; தெய்வமோ அல்லளோ என்று துணிதலரிய சாயல். ( 13 )
-
1570. கண்டவன் கண்ணி னோக்க
நடுங்கித்தன் காதிற் றாழ்ந்த
குண்டலஞ் சுடர வொல்கிக்
கொடிநடுக் குற்ற தொப்ப
நுண்டுகிற் போர்வை சோர
நுழைமழை மின்னி னிற்ப
வெண்டிசை மருங்கு நோக்கி
யியக்கிகொ லிவண்மற் றென்றான்.
விளக்கம் : அந்நோக்கத்தின்கண் காமக்குறிப்பின்மை கண்டு நடுங்கிச் சோர நிற்ப என்க. எண்டிசை மருங்கு நோக்கி என்றது இவளுடன் கூடவந்தாருளரோ என்று நோக்கி என்பதுபட நின்றது. ( 14 )
-
1571. எண்ணத்தி லியக்கி யென்றே சோ?யிருப்பமற் றெழுத லாகா
வண்ணப்பூங் கண்க ளம்பா சோ?வாணுதற் புருவம் வில்லா
வுண்ணிறை யுடைய வெய்வா னுருவச்சா தகத்துக் கேற்பப்
பெண்ணலங் கிடந்த பேதை சோ?பெண்ணலங் கனிய நின்றாள்.
விளக்கம் : எண்ணத்தில் - சீவகன் தன் கருத்தின்கண் என்க. ஓவியத்தில் எழுதவொண்ணாத கண்கள் என்க. அம்பா, வில்லா : இவை ஈற்றிற் ககர யுயிர்மெய் தொக்கு நின்றன. ( 15 )
-
1572 முறுவன்முன் சிறிய தோற்றா முகைநெறித் தனைய வுண்கட்
குறுநெறி பயின்ற கூந்தல் குறும்பல்கா லாவிக் கொள்ளாச்
சிறுநுதற் புருவ மேற்றாச்சோ? துகிற் றானை சோர
வறியுந ராவி போழு மநங்கனைங் கணையு மெய்தாள்.
விளக்கம் : அறியுநர் ஆவி போழும் அம்பு எனவே, இவன் நெஞ்சு தன் தன்மை சிறிது திரிகின்றமை பெற்றாம். ( 16 )
-
1573. வடுப்பிள வனைய கண்ணாள் வல்லவ னெழுதப் பட்ட
படத்திடைப் பாவை போன்றார் நோக்கின ளாகி நிற்ப
வடிப்பொலிந் தார்க்குஞ் செம்பொ னணிமணிக் கழலி னானம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்திது சிந்திக் கின்றான்.
பொருள் : வல்லவன் எழுதப்பட்ட படத்திடைப் பாவை போன்று - கைவல்லானால் எழுதப்பட்ட படத்திலே ஓவியப் பாவைதான் அழியுமளவும் ஒரு நோக்காய் நின்று அழிவதைப் போல; வடுப் பிளவு அனைய கண்ணாள் - மாவடுவின் பிளவு போன்ற கண்ணாள்; ஓர் நோக்கினள் ஆகி நிற்ப - இவனைக் கூடுவதாகிய ஒரே கருத்துடன் நிற்ப; அம் மடத்தகை குறிப்பு - அவ் விளநங்கையின் எண்ணத்தை; அடிப் பொலிந்து ஆர்க்கும் செம்பொன் அணி மணிக் கழலினான் நோக்கி - அடியிலே அழகுற்ற ஆரவாரிக்கும் செம்பொன்னான் ஆகிய மணிக்கழலணிந்த சீவகன் அறிந்து; மனத்து இது சிந்திக்கின்றான் - உள்ளத்திலே இதனை எண்ணுகின்றான்.
விளக்கம் : என்றது, தன் தன்மை திரிந்த நெஞ்சினைத் தேற்றுகின்றான் என்றவாறு. அது மேற் கூறுகின்றார்.வடு - மாவடு. வல்லவன் - ஓவியத்தொழில் வல்லோன்.ஓர்நோக்கு - கூடவேண்டும் என்னுமொரு நோக்கம். கழலினான் : சீவகன். மடத்தகை : அன்மொழித்தொகை; ஈண்டு அம் மடந்தை என்னு மாத்திரையாய் நின்றது. ( 17 )
-
1574. கடிமாலை சூடிக் கருப்பூர முக்கித்
தொடைமாலை மென்முலையார் தோடோய்ந்த மைந்தர்
கடைமாலை மற்றவரே கண்புதைப்பச் செல்லு
நடைமாலைத் திவ்வுலக நன்றரோ நெஞ்சே.
விளக்கம் : அரோ : அசை. மற்று. வினைமாற்று. அவர் என்றது சாதிபற்றி. முக்கி - தின்று. கடைமாலை - இறுதி நாள்களிலே. கிழப்பருவ நாள் மாந்தர்க்கு மாலைப்பொழுது போறலின் மாலை என்றார். கடை மாலை : பண்புத்தொகை. மாலைத்து - இயல்புடைத்து. நன்று என்றது இகழ்ச்சி. ( 18 )
-
1575. நாவி யகல மெழுதி நறுநுதலா
ராவி தளிர்ப்ப வவர்தோண்மேற் றுஞ்சினார்
தூவியொழி புள்ளிற் றோன்றித் துயருழப்பக்
காவிநெடுங் கண்புதைத் தாங்ககல்வர் நெஞ்சே.
விளக்கம் : இதனால் இருதலையும் ஒத்த அன்பின் திறம் கூறினார். நாவி - புழுகு. அகலம் - மார்பு. ஆவி - உயிர். துஞ்சுதல் - ஈண்டுத் தங்குதல் எம் பொருட்டு. தூவி - இறகு. ( 19 )
-
1576. இன்புகை யார்ந்த விழுதார்மென் பள்ளிமே
லன்புருகு நல்லா ரவர்தோண்மேற் றுஞ்சினார்
தம்புலன்கள் குன்றித் தளரத்தங் காதலா
ரன்புருகு கண்புதைத் தாங்க கல்வர் நெஞ்சே.
விளக்கம் : இதனாற் புலன் குறையும் என்றார். இவள் விரும்பப் பெற்றோமே யென்று கூடினார்க்குப் பின் வருவது கூறியவாறு.
( 20 )
-
1577.என்பினை நரம்பிற் பின்னி
யுதிரந்தோய்த் திறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து
மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி
யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன்
மயங்கினார் மருள வென்றான்.
விளக்கம் : என்பு எலும்பு. பின்னி - கட்டி. இறைச்சி - தசை. புன்புறம் - புல்லிய வெளிப்பகுதி. குரம்பை - கூடு. தச்சன் என்றது படைப்புக்கடவுளை. மயங்கினார் மருள என்றது இதன்கண் மயங்காத மெய்க்காட்சியாளர் அல்லாத ஏனைய மயக்கமுடையோரெல்லாம் மருளும்படி என்பதுபட நின்றது. ( 21 )
-
1578. வினைப்பெருந் தச்ச னல்லன்
மெய்ம்மைநா நோக்க லுற்றா
புலெனக்குற்றுக் கிடந்த தென்றாங்
கிருகணும் புதைத்து வைக்கு
நினைப்பினாற் பெரிய ரென்னா
னீந்தினார் கலைக ளென்னான்
மனத்தையுங் குழையச் செத்து
மாண்பினன் மாதோ வென்றான்.
விளக்கம் : மாது ஓ : அசைகள். நல்லன் - இகழ்ச்சி. மெய்ம்மை என்றது இயல்பினை. இருகண் அகக்கண்ணும் புறக்கண்ணும் நினைவு ஈண்டு அறிவின்மேனின்றது; ஆகுபெயர். கலைகள் நீந்தனார் என மாறுக. மனத்தையும் என்புழி உம்மை சிறப்பு. அருவமாகிய மனத்தையும் என்பது கருத்து. மான்பினன் - இகழ்ச்சி. ( 22 )
-
1579. என்றவ னிருப்ப மாத
ரென்வர விசைப்பி னல்லா
புலொன்றுமற் றுருகல் செல்லா
னென்றெடுத் தோது கின்றாண்
மன்றலந் தோழி மாருள்
வனத்திடைப் பண்ணை யாடக்
குன்றிடைக் குளிர்க்கு மின்போற்
குழாமழை முகட்டிற் செல்வான்.
விளக்கம் : இது முதல் மூன்று பாட்டுக்கள் ஒரு தொடர்.அவன் : சீவகன். உருகல் செல்லான்: ஒரு சொல். என்று எண்ணி எடுத்து ஓதுகின்றாள் என்க. பண்ணை - மகளிர் விளையாட்டு. மழை - முகில். ( 23 )
-
1580. மயிலின மிரிய வாங்கோர்
மடமயி றழுவிக் கொண்ட
வெயிலிளஞ் செல்வன் போல
விஞ்சைய னெற்கொண் டேகத்
துயிலிய கற்பி னாடன்
றுணைவிகண் டிடுவித் திட்டா
ளயிலியல் காட்டுள் வீழ்ந்தே
னநங்கமா வீணை யென்பேன்.
விளக்கம் : மயிலுவமை தோழியர் அஞ்சி ஓடியதற்கு. மயிலினம் தோழியர்ககுவமை. மடமயில் என்றது தனக்கே அவள் கூறிக்கொண்டவுவமை. வெயிலிளஞ்செல்வன் - காலை ஞாயிறு. இது விஞ்சையனுக்குவமை. துயிலிய : செய்யிய என்னும் வாய்பாட்டு வினை
-
1581. தாயிலாக் குழவி போலச்
சாதுய ரெய்து கின்றேன்
வேயுலாந் தோளி னார்தம்
விழுத்துணைக் கேள்வ நிற்கண்
டாயினேன் றுறக்கம் பெற்றே
னளித்தரு ளாது விட்டாற்
றீயினு ளமிர்தம் பெய்தாங்
கென்னுயிர் செகுப்ப லென்றாள்.
விளக்கம் : உலாம் : உவமைச் சொல். அவன் தோற்றம் துறவி போல இன்மையின், தோளினார் துணைவ என்றாள்.சாதுயர் - சாங்காலத்துண்டாகும் துயர்போன்ற துயர். வேய் - மூங்கில். துறக்கம் பெற்றேனாயினேன் என மாறுக. தீ - காமத்திற்குவமை. காமத்துன்பத்தானே இறந்துபடுதல் ஒருதலை என்பது கருத்து. ( 25 )
-
1582. மணியெழு வனைய தோளும்
வரையென வகன்ற மார்புந்
தணிவருங் கயத்துப் பூத்த
தாமரை யானைய கண்ணும்
பணிவரும் பருதி யன்ன
முகமுமென் றயர்ந்து காமப்
பிணியெழுந் தவலிக் கின்ற
பேதைநீ கேளி தென்றான்.
விளக்கம் : மணி என்பது தொடங்கி முகமும் என்னுந் துணையும் சீவகன் அவள் கூற்றைக்கொண்டு கூறியபடியாம். மணிஎழு - மணியிழைத்த தூண். பருதி - ஞாயிறு. பேதை : விளி. இது கேள் என மாறுக. ( 26 )
-
1583. போதொடு நான மூழ்கிப்
பூம்புகை தவழ்ந்து முல்லைக்
கோதைகண் படுக்குங் கூந்தல்
குரைவளி பித்தோ டையே
யேதஞ்செய் மலங்க ணெய்த்தோ
ரிறைச்சியென் பீருண் மூளை
கோதஞ்செய் குடர்கள் புன்றோ
னரம்பொடு வழும்பி தென்றான்.
விளக்கம் : பூ முதலியவற்றாற் கூந்தல் நன்றாயிற்று என்றான். எழுவும் வரையும் தாமரையும் பருதியும் என்று தன் உறுப்புக்களைப் பாராட்டினாட்கு இவை அன்னவல்ல; மெய்ம்மை நோக்கின் வளியும், பித்தும், ஐயும், இயைந்த மலமும், குருதியும், இறைச்சியும், என்பும், மூளையும், குடரும், தோலும், நரம்பு மேகாண் என்று தெளிந்த படியாம். கூந்தல், பன்மொழித்தொடரிற் பிறந்த அன்மொழித தோகை. ( 27 )
-
1584. விழுக்கொடு வெண்ணஞ் சல்லா
வுகிர்மயி ருமிழ்கட் பீளைப்
புழுப்பயில் குரம்பை பொல்லாத்
தடிதடித் கீழ்ந்த போழ்தில்
விழித்தியார் நோக்கு கிற்பார்
பிள்ளையார் கண்ணுட் காக்கை
கொழிப்பாரும் பொன்னிற் றோன்றுங்
கொள்கைத்தாற் கொடியே யென்றான்.
விளக்கம் : கரிக் குருவியார் கண்ணுக்குக் காக்கை பொன் ஒத்துத் தோன்றும் என்பது ஒரு பழமொழி. விழுக்கும் வெண்ணஞ்சும் ஊன்வகை. வெண்ணஞ்சு - நிணமுமாம். பிள்ளையார் - கரிக்குருவி. வெண்ணஞ்சு என்பதும் பாடம். ( 28 )
-
1585.உருவமென் றுரைத்தி யாயி
னிறைந்ததோற் றுருத்தி தன்னைப்
புருவமுங் கண்ணு மூக்கும்
புலப்பட வெழுதி வைத்தாற்
கருதுவ தங்கொன் றுண்டோ
காப்பியக் கவிகள் காம
வெரியெழ விகற்பித் திட்டா
ரிறைச்சிப்போ ரிதனை யென்றான்.
விளக்கம் : இவளுக்குத் தெளிவுண்டாகுமென்று இவற்றைக் கூறினான். தன் நெஞ்சுக்கும் இவளுக்கும் தெளிவுண்டாக இத்துணையும் கூறும் அறிவுடைமையை யெல்லாம் சீவகனுக் கேற்றாமல் வனசரிதனுக்குத் தகவுபடுத்துதல் எங்ஙனம் பொருந்தும்? அழகிய பெண்ணுருவை நோக்கியும் பெற்றியில் நின்றிடின் பேடியர் அன்றோ? நெகிழும் நெஞ்சைத் தன் வயப்படுத்துதல் சீவகனுக்கு எப்போதும் இழுக்காகாது ( 29 )
வேறு
-
1586 காதன் மாமன் மடமகளே கருங்குழன் மேல்வண் டிருப்பினு
மேத முற்று முரியு நுசுப்பென் றுன்னியல் பேத்துவே
னோதம் போல வுடன்றுடன்று நைய நீயொண் டாமரைக்
கோதை பேறால்வா யொளித்தொழிதல் கொம்பே குண னாகுமே.
விளக்கம் : இதுமுதல் ஏழு செய்யுள் பவதத்தன் கூற்று. ஏதமுற்று - துன்பமுற்று. நுசுப்பு - இடை, ஓதம் - கடல், தாமரைக்கோதை - திருமகள். கொம்பு - அனங்கமாலை. குணனாகுமே என்புழி ஏகாரம் எதிர்மறை. கொம்பு, கொம்புபோல்வாளை யுணர்த்துதலால் உவமையாகு பெயராம். கோதை - பெண். தாமரைக் கோதை - தாமரைப் பூவில் வாழும் பெண். ( 30 )
-
1587. வண்ணத் திங்கண் மதிமுகத்த
வாளோ கருங்க யல்களோ
வுண்ணுங் கூற்றோ வொளிவேலோ
போதோ வுணர்க லேனாற்
பண்ணின் றீஞ்சொலாய் படாமுலைப்
பாவாய் கொடியே பாங்கி
ணுண்ணுந் தேனே யமிர்தே
யென்னின் னுயிரே யெங்கணாயோ.
விளக்கம் : என் என்பது வினா என்பர் நச்சினார்க்கினியர், எங்கணாயோ!: ஓ! : வியப்பு. ( 31 ) மதிமுகத்த - வினைத்தொகை. மதியாநின்ற முகத்திலுள்ளன என்க. உயிரையுண்ணும் கூற்றோ என்க.
-
1588.இலவம் போதே ரெழிற்றகைய
சீறடிக ளஞ்சி யொல்கிப்
புலவன் சித்தி ரித்த
பொற்சிலம்பு நகப்பூ நிலத்துமே
லுலவும் போழ்து மென்னாவி
மலர்மேன் மிதித்தொ துங்குவாய்
கலவ மஞ்ஞை யனையாய்
கட்காத லொழிகல் லேனால்.
விளக்கம் : இலவம்போது ஏர்எழில் என்புழி ஏர் உவமவுருபு. புலவன் - ஈண்டுக் கம்மியப் புலமையுடைய பொற்கொல்லன். சிலம்பொலி சிரிப்பொலி போறலின பொற்சிலம்பு நக என்றார். பூநிலம் - மலர் பரப்பிய நிலம். கலவ மஞ்ஞை - தோகை மயிர். ( 32 )
-
1589. பணிசெ யாயத்துப் பந்தாடு
கின்றாயைக் கண்டு மாழ்கிப்
பிணிசெய் நோயேன் யான்கிடப்
பப்பிறர் வாயது கேட்டலுந்
துணிக போது மென விடுத்தாய்
போந்தேன் றுயரு ழப்பநீ
மணிசெய் மேகலை யாய்மாற்
றந்தாராய் மறைந்தொ ழிதியோ.
விளக்கம் : ஆயம் - மகளிர் குழு. மாழ்கி - மயங்கி, பிணிசெய் நோய் - பிணித்தலைச் செய்யும் நோய். அது - அந்த நிலைமையினை. உரைத்தாய் என்பதும் பாடம். ( 33 )
-
1590. இயக்கி நின்னோ டிணையொக்கு
மென்று நலஞ்செ குப்பான்
மயக்கிக் கொண்டு போய்வைத்தா
யென்மா தரைத்தந் தருளுநீ
நயப்ப வெல்லாந் தருவலெனத்
தொழுது நல்லி யானைதன்
வயப்பிடி கெடுத்து மாழாந்த
தொப்ப மதிம யங்கினான்.
விளக்கம் : தாராய் : முற்றெச்சம். ஓ : வியப்பு இயக்கி - விளி. இணைஒக்கும் - ஒப்பிடுதற்கு ஒப்பள். செகுப்பான் : வினையெச்சம். நயப்ப : பலவறிசொல். தருவல் : தன்மை ஒருமை வினைமுற்று. ( 34 )
-
1591. மல்லற் றெல்வ ளத்து
மத்திமநன் னாட்டுவண் டாமரை
புல்லும் பேரூர்ப் புகழ்த்தத்தன்
காதற் சினதத் தைக்குஞ்
செல்வநா மற்குஞ் சித்திரமா
மாலைக் குஞ்சுற் றத்தார்க்கு
மல்லல் செய்தே னவட் சென்றா
லென்னுரைக்கே னென்செய் கேனே.
விளக்கம் : மல்லல் - வளம். வளம் - செல்வம். தாமரை புல்லும், பேரூர் - பதுமபுரம் என்னும் பேரையுடைய ஊர். புகழ்த்தத்தன் - கீர்த்திதத்தன். இவன் பவதத்தன் தந்தை. சினதத்தை பவத்தத்தன் தாய். செல்வ நாமன் - சீமான். இவன் பவதத்தன் மாமன். சித்திரமா மாலை - பவதத்தன் மாமி. அல்லல் செய்தேன் என்றது நின்பிரிவாலே அவரெல்லாம் பெரிதும் அல்லலுறாநின்றனர் என்றவாறு. ( 35 )
-
1592. உண்ணு நீர்வேட் டசைந்தே
னெனவுரைப்பக் காட்டு ணாடி
நண்ணிப் பொய்கை தலைப்பட்டு
நற்றா மரையி லையினுட்
பண்ணி நீர்கொண்டு வந்தேன்
படாமு லைப்பா வாயென்
றண்ண லாற்றா தழுதழுது
வெந்துருகி நைகின் றானே.
விளக்கம் : அண்ணல் : இகழ்ச்சிக் குறிப்பு. உரைப்ப - நீ கூறுதலாலே என்க. தலைப்பட்டு - கண்டு. தாமரையிலையைப்பண்ணி அதனுள் நீர் கொண்டு வந்தேன் என்க. பண்ணுதல் - குடையாகக் கோலுதல் ( 36 )
-
1593. குழைகொள் வாண்முகத்துக் கோல்வளையைக்
காணான் குழைந்தழு கின்ற
வழகன் சொல்லுமணி செய்கோதை
காமமுங் கண்டுங் கேட்டு
முழவுத் தோளான் முறுவ
லித்தீங் கேயிரு நீயென்
றிழையச் சொல்லி யிளையா
னிளையானை யெய்தி னானே.
விளக்கம் : தன்மேற் காமுற்றவளை நன்னெறிப்படுத்த விரும்பிய சீவகன் அவள் மனம் பொருந்த இன்மொழி கூறிவந்தான், நயம்பட வுரைத்த லின் நயமுணர்ந்தானாகையால். நச்சினார்க்கினியர் தாம் படைத்த வனசரிதனை, இரு என இழையச் சொல்லிச் சீவகன் சென்றான் என்பர். முன்னர் 1567 ஆஞ் செய்யுளில் தானம் என்பதனை முனிவருறைவிடமாக்கி அங்கேயிருந்தான் சீவகன் என்றும், கானத்தினேகுகின்றான் ஆகிய வனசரிதன் கவினை அநங்கமாலை கண்டு காமுற்றுக் காமத்தை மிகுவிக்கும் மொழிகளைக் கூறிக் குறிப்புக்களைக் காட்டி நின்றதையும் அவன் அவளுக்கு நன்னெறி புகன்றதையும் பவதத்தன் அவளைத் தேடிவந்ததையும் கண்டு பவதத்தனுக்கு நன்னெறி புகட்ட வந்தான் என்று இதுகாறும் உரையை அமைத்தார். ஆனால், இதுவரை வனசரிதனையும் சீவகனையும் ஓரிடத்தில் இருத்திவனசரிதன் சீவகனை விருந்தினனாக ஏற்றதாக ஓரிடத்திலும் உரைத்திலர். இச் செய்யுளுக்கு விளக்கங் கூறுமுகத்தான் அவற்றை அமைக்கின்றார். அவர் கூறுவது:-
தோளான் - இவர்கள் செய்தியைக் கண்டிருந்த சீவகன் இழையச்சொல்லி என்றது - தாமுறைவிடத்தே வந்தார்க்குத் தாம் நுகர்வனவற்றைக் கொடுத்துப் பேணி விடுத்தல் வனசரிதர்க் கியல்பாகலின், சீவகன் போக்கொருப்பட்டமை கண்டு. அவ் வனசரிதனும், யான் நுகர்வனவற்றை நீயும் நுகர்ந்து வழிவரல் வருத்தந் தீர்ந்து ஏகுவாயாக என்றாற்கு, அவனும் தனக்கு அவ் வருத்த மின்மையை அவன் மனம் பொருந்தச்சொல்லி என்றவாறு. ஈங்கேயிரு என்றது - எப்போதும் இப்படியே மனத்தைச் சென்ற இடத்தாற் செல்லவிடாதே (குளற். 422) விலக்கியிருக்க என்றவாறு. ஆங்கு உவம உருபு ஆயினமையின் ஈங்கு என்பதும் உவம உருபாம் புறனடையால்; இவ்விடத்தே இரு என்று உபசாரமுமாம். சீவகன் அவளை இங்கே இரு என்று பொருந்தக் கூறல் அவற்கு இயையாமை உணர்க.இவ்வாறு தாம் படைத்துக்கொண்ட வனசரிதனுக்கு இச் செய்யுளில் இடமளிக்கின்றார். ( 37 )
-
1594. என்னை கேளீ ரென்னுற்றீ
ரென்ன பெயாபு ரென்றாற்குப்
பொன்னங் குன்றிற் பொலிந்ததோ
ணம்பி யொருபொற் பூங்கொடி
யென்னு நீராளை யீங்கே
கெடுத்தே னென்பா வத்தாற்
பன்னூற் கேள்வி யுடையேன்யான்
பவதத்த னென்பே னென்றான்.
விளக்கம் : கேளீர் என்உற்றீர் என்னை? என மாறுக. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு. பொன்னங்குன்று என்புழி. அம் சாரியையுமாம். நம்பி : விளி. நீராள் - தன்மையுடையாள், என் பாவத்தால் ஈங்கே கெடுத்தேன் என மாறுக. ( 38 )
வேறு
-
1595. கைப்பொருள் கொடுத்துங் கற்றல்
கற்றபின் கண்ணு மாகு
மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின்
மெலிவிற்கோர் துணையு மாகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்
புகழுமாந் துணைவி யாக்கு
மிப்பொரு ளெய்தி நின்றீ
ரிரங்குவ தென்னை யென்றான்.
விளக்கம் : புகழும் ஆம் துணைவியாக்கும் என்பதைப் புகழாம் துணைவியாக்கும் என்று கொண்டு, கீர்த்தி மகளை யுண்டாக்கும் என்றும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். கற்றல் : அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் இற்றெனக்கிளத்தல் (தொல் - கிளவி. 19) என்பது போல். அல்லீறு எதிர்மறை வியங்கோளுக்கும் வரும். மகனெனல் - மக்கட்பதடி யெனல் என்னுங் குறளிற் காண்க. ( 39 )
-
1596. அன்புநூ லாக வின்சொ லலர்தொடுந் தமைந்த காத
லின்பஞ்செய் காமச் சாந்திற் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினு நங்கை மார்க்குப்
பின்செலும் பிறார்க ணுள்ளம் பிணையனார்க் கடியதன்றே.
விளக்கம் : பகல் - வெளியுமாம் என்பர் நச்சினார்க்கினியர். இனிய சொல்லாகிய அலர் என்க. அலர் - மலர். காதல் சாந்திற் கைபுனைந்து ஏற்றகாமமாலை என மாறுக. பகற்சூட்டி என்புழி உயர்வு சிறப்பும்மை செய்யுள் விகாரத்தாற்றெக்கது. நங்கைமார், இகழ்ச்சி. பிணையனார்க்கு என்றது அவர்க்கு என்னும் சுட்டுப்பெயர்மாத்திரையாய் நின்றது. காதல் இன்பத்தைச் செய்யும் காமமாகிய சாந்தினால் ஒப்பனை செய்து எனப்பொருள் கொள்வது சிறந்தது. அன்பு நூலால் இன்சொல் மலராற் றொடுத்தமாலை என்பது தானே தோன்றுதலால். ( 40 )
-
1597.பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
வுண்ணிறை யுடைய வல்ல
வொராயிர மனத்த வாகு
மெண்ணிப்பத் தங்கை யிட்டா
லிந்திரன் மகளு மாங்கே
வெண்ணெய்க்குன் றெரியுற் றாற்போன்
மெலிந்துபின் னிற்கு மன்றே.
விளக்கம் : இழிவு தோன்ற அஃறிணை வாய்பாட்டாற் கூறினான். பீடு ஈண்டு மனத்திண்மையின் மேனின்றது. பிறப்பு - ஈண்டு நற்குடிப் பிறப்பு என்பது படநின்றது. நிறை - நெஞ்சத்தை ஒரு நிலைக்கண் நிறுத்தும் வன்மை. ஓராயிரம் என்றது மிகுதிக்கோர் எண் குறித்தபடியாம். பத்தென்றது சிறுமைக்கோர் எண் குறித்தவாறு. இந்திரன் மகளும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. எரி - நெருப்பு. ( 41 )
-
1598. சாமெனிற் சாத னோத
றன்னவன் றணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார்
கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார்
சோந்தவன் செல்ல றீர்ப்பார்.
விளக்கம் : சொல்லார் : முற்றெச்சம். வாழ்வார் : வினையாலணையும் பெயர், எழுவாயாய் நின்றது. காமனை : ஐ : அசை. இவர்கள் கற்புடை மகளிர். ( 42 )
-
1599. அன்னணின் றோழி யையா
வளென்னைக் கண்ட கண்ணாற்
பின்னைத்தான் பிறரை நோக்காப்
பெருமட மாது தன்னை
யென்னையா னிழந்து வாழு
மாறென விரங்கி னானுக்
கன்னளோ வென்று நக்கா
னணிமணி முழவுத் தோளான்.
விளக்கம் : அன்னளோ என்றது யான் கூறியவற்றாலும் தெளிவு நிகழாமல் இவனை வருந்துந் தன்மையளோ என்றவாறு. நகை, பிறர் அறியாமைபற்றி நிகழ்ந்தது. இனி யாம் இவன் இடுக்கணுக்கு உதவி யானோம் என்று மனம் மகிழ்ந்தான் என்றுமாம். ( 43 )
வேறு
-
1600. இனையல்வேண் டாவிம் மந்திரத்தை
யோதிநீ யொருவில் லேவள
வனைய வெல்லை சென்றா
லியக்கி கொணர்ந் தருளுநீ
புனைசெய் கோல்வளை யைக்கைப்
படுதியென் றாங்கவன் போதலு
மனைய மாதரைக் கண்டாங்
கடிபுல்லி வீழ்ந்த ரற்றினான்.
விளக்கம் : மந்திரம் : மகளிரை மயக்குவதாகிய மந்திரம். தான் அநங்கமாலையைக் கண்டதைக் கூறிற்றிலன், தன்னையும் ஐயுற்றுத் தீங்கு புரிவான் என்று கருதி. ( 44 )
-
1601. பட்ட வெல்லாம் பரியா
துரைத்தா னவளுங் கேட்டாள்
விட்டா ளார்வ மவன்க
ணிவன்மேன் மைந்துறவினான்
மட்டார் கோதை மனைதுறந்தாண்
மைந்தனு மங்கை மேலே
யொட்டி விள்ளா வார்வத்த
னாகி யுருவ மோதினான்.
விளக்கம் : அம் மந்திரம் அவள் நெஞ்சை இவ்வாறு பிணிப்பித்த தென்று உணர்க. அவன்கண் ஆர்வம் என்பதற்கு வனசரிதன் மேற் சென்ற ஆர்வம் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர் ( 45 )
வேறு
-
1602. மெழுகு செய்படம் வீழ்முகின் மத்தகத்
தொழுகும் வெள்ளரு வித்திர ளோடைசூழ்ந்
திழுகு பொன்மதத் தின்வரைக் குஞ்சரந்
தொழுது வேய்முதற் றூசங்கொண் டேறினான்.
விளக்கம் : அருகன் கோயில் அம் மலையில் இருப்பதால் தொழுதான். யானை ஏறுவாரும் தொழுதல் இயல்பு. ( 46 )
-
1603. நிரைத்த தீவினை நீங்க நெடுங்கணார்
வரைக்க ணேறலின் வாலரிப் பொற்சிலம்
புரைத்து மின்னிருண் மேற்கிடந் தாலுமொத்
தரைத்த லத்தக மார்ந்ததொர் பாலெலாம்.
விளக்கம் : அரைத்த அலத்தகம் : அகரம் தொகுத்தல் விகாரம்.நெடுங்கணார் என்றது மகளிர் என்பது படநின்றது. வால் - தூய. அரி - பரல். உரைத்து - உரைக்கப்பட்டு. மின் பொன்னுரைக்கும் இருள் மலைக்கும் உவமைகள். அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. ( 47 )
-
1604. சாந்துங் கோதையுந் தண்ணறுஞ் சுண்ணமு
மாய்ந்த பூம்புகை யும்மவி யுஞ்சுமந்
தேந்து பொன்விளக் கேந்தி யிடம்பெறா
மாந்தர் சும்மை மலிந்ததொர் பாலெலாம்.
விளக்கம் : சாந்து - சந்தனம். சுண்ணம் - மணப்பொடி. பூம்புகை ஈண்டு நறுமணப்புகை. அவி - கடவுட்கிடும் பலிப்பொருள். ஏந்து - உயர்ந்த. சும்மை - ஆரவாரம். ( 48 )
-
1605. துறந்த மன்னவர் தூமுடி தோள்வளை
நிறங்கொ ளாரம்பைம் பூணிழற் குண்டலம்
பிறங்கு வெங்கதிர் மின்னொடு பின்னிவீழ்ந்
துறங்கு கின்றன போன்றவொர் பாலெலாம்.
விளக்கம் : துறந்த அரசர் - துறந்தபொழுது களைந்திட்ட முடி. முதலியன என்பது கருத்து . ஆரம் - முத்துமாலை. நிழல் - ஒளி. பிறங்குதல் - ஒளிவிடுதல். ( 49 )
-
1606. கருவித் தேன்கலை கையுறக் கீண்டுடன்
மருவிப் பைங்கறி வாரிப் பழந்தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்துரா
யருவி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
விளக்கம் : கருவி - கைத்தளமென்னும் ஒரு போர்க்கருவி. இது தேனடைக்குவமை. கருவி - தொகுதியுமாம். கலை - ஆண் குரங்கு. ( 50 )
-
1607. வெங்க திர்க்கட வுள்வியன் றேர்வரைத்
தங்கு சந்தனக் கோட்டிடைப் பட்டெனப்
பொங்கு மான்குளம் பிற்குடை பொற்றுகண்
மங்கு லாய்த்திசை யாவையு மல்கின்றே
விளக்கம் : வெங்கதிர்க் கடவுள் - ஞாயிறு. வரை - மலை. கோடு - கொம்பு. பொங்குமான் - தாவுங்குதிரை. மங்குல் - இருள். மல்கின்று - மல்கிற்று; நிறைந்தது. ( 51 )
-
1608. சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்
நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச்
சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு
முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான்.
விளக்கம் : நாறிணர்க் கோங்கம் என இயைப்பர் நச்சினார்க்கினியர். முற்றெடுத்து என்பதற்கு மிடறுள்ள அளவும் எடுத்து என்றும் ஆம். ( 52)
-
1609. முனிமை முகடாய மூவா முதல்வன்
றனிமைத் தலைமை தனதுதா னென்ப
தனிமைத் தலைமை தனதுதா னென்றாற்
பனிமலர்தூய் நின்று பழிச்சாவா றென்னே.
விளக்கம் : முனிமை - குணப் பண்பு. முனிமை - முனிவர் தன்மை. முகடு - உச்சி. ஈண்டு மேன்மை மேனின்றது. தனிமை - ஒப்பின்மை. பழிச்சுதல் - ஏத்துதல். ( 53 )
-
1610. மலரேந்து சேவடிய மாலென்ப மாலா
லலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுவா
னலரேந்தி யஞ்சலிசெய் தஞ்சப் படுமே
லிலரே மலரெனினு மேத்தாவா றென்னே.
விளக்கம் : பூமேனடந்தான் என்பதுபற்றி மலரேந்து சேவடியமால் என்ப என்றான். மால் ஈண்டு அருகன். மாலால் என்புழி மால் இந்திரன். அஞ்சலி செய்தல் - தொழுதல். மலர் இலர் எனினும் எனமாறுக. ( 54 )
-
1611. களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
வளிசே ரறவாழி யண்ணலிவ னென்ப
ரளிசே ரறவாழி யண்ண லிவனேல்
விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே.
விளக்கம் : அரனும் அரியும் அயனும் இவனே என்பது கருத்து. செய்யுள்: தேவபாணிக் கொச்சக ஒருபோகு. காமனையும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. அறவாழி அண்ணல் அருகனுக்கு ஒரு பெயர். அறவாழி அந்தணன் என்பர் திருவள்ளுவனாரும். விளியா - அழியாத. ( 55 )
வேறு
-
1612. இன்னண மேத்தி யிறைவ னடிதொழு
தன்ன முறங்கு மணிவரை மேனின்று
பொன்னங் கழலா னிழிந்து பொழிமழை
மின்னி னடந்து மிகுசுரஞ் சென்றான்.
விளக்கம் : மழை மின்னின் என்பது தூரகமனம் வல்லன் என்பதை உணர்த்துகிறது என்பர் நச்சினார்க்கினியர்.இறைவன் - அருகக்கடவுள். கழலான் - சீவகன., மின் விரைந்து செல்லுதற்குவமை. ( 56 )
-
1613. மாலைக் கதிர்வேன் மலங்க மணிமலர்க்
கோலை விடுக ணுருகு கொடியிடை
யேலங் கமழ்குழ லேழை யவரன்ன
வாலைக் கரும்பி னகநா டணைந்தான்.
விளக்கம் : அகநாடு - மருதநாடு. அகநாடு புக்கவர் அருப்பம் வெளவி (மதுரைக்.149) என்றார். வேல் தன் கண்ணுக்குத் தோற்று மலங்கலின் பகைபெறாது மலர்க்கு ஓலைவிடுதற்குக் காரணமான பேரழுகு படைத்ததன்கண் என்க. ஏலம் - மயிர்ச்சாந்து. ஏழையவர் அன்ன நாடு, ஆலைக் கரும்பின் அகநாடு எனத் தனித்தனி கூட்டுக. கண்டுகேட் டுண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலவின்பமும் தருதலால் நாட்டிற்கு மகளிர் உவமை என்க. ( 57 )
வேறு
-
1614. வாழைச்சறு சாடிமட் டயின்று மள்ளர்தாங்
கழைக்கரும் பெறிந்துகண் ணுடைக்கு மெந்திர
மழைக்குர லெனமயி லகவ வார்செந்நெற்
புழைக்கடைப் புனலலைத் தொழுகும் பொற்பிற்றே.
விளக்கம் : எந்திரம், ஒழுகும் என்று இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற் கேற்றின இடவாகுபெயர். வழைச்சு - இளந்தன்மை. மட்டு - கள். கழைக்கரும்பு - கரும்பினுள் ஒருவகை. கண் - கணு. கரும்பாலை முழக்கத்தை மயில்முகில் முழக்க மெனக் கருதி அகவும் என்பது கருத்து. ( 58 )
-
1615. தாமரை மலர்தலை யடுத்துத் தண்கமழ்
தூமலர்க் குவளைகா லணைத்துத் தோலடிக்
காமரு பெடைதழீஇ யன்னங் கண்படுந்
தேமலர்த் தடந்தழீஇத் திசைக்கண் மல்கின்றே.
விளக்கம் : தலை அடுத்து, கால் அணைத்து என வரும் வினைச்சொற்களால் அணையாக என்னும் சொல் வருவிக்கப்படும். தோலடிபெடைக்கும் சேவற்கும் பொதுவினின்றது. ( 59 )
-
1616. கண்பயி லிளங்கமு கெருத்திற் காய்பாபுஇக்
கொண்டிள மந்திக ளெறியக் கோட்டிடைத்
திண்கனி முசுக்கலை சிதறுந் தேம்பொழின்
மண்டமர் கடந்தவன் மகிழ்வொ டேகினான்.
விளக்கம் : இஃது அந் நாட்டின் நகரைச் சூழ்ந்த பொழில். கண் - கணுவுமாம். பெரீஇக்கொண்டு - எடுத்துக்கொண்டு. பரிந்து என்பது பெரீஇ என அளபெடையாய் நின்றது. கடந்தவன் : சீவகன். ( 60 )
-
1617. களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி நாட்டிடை
யொளிறுவே னரபதி நகர மொய்யெனப்
பிளிறுவா ரிடிமுர சார்ப்பப் பெய்கழல்
வெளிறிலாக் கேள்வியான் விருப்பொ டெய்தினான்.
விளக்கம் : மாய்த்தல் - மறைத்தல். களிறும் எனற்பாலதாகிய சிறப்பும்மை தொக்கது. ஒளிறுதல் - விளங்குதல். ( 61 )
-
1618. புறநகர் மணமக னொருவன் போதர்வா
னிறைமகன் வினாயினா னென்ன பேரவே
துறைவளர் நாட்டொடு நகரஞ் சொல்லென
வறிகவென் றலரிவாய் கமழக் கூறினான்.
விளக்கம் : புறநகர் - நகர்ப்புறம் என்பதன் முன்பின்னாக மாறித்தொக்க தொகை. மணக்கோலத்தோடு வந்த ஒருவனை என்பது கருத்து. போதருவான் - போதர்வான் என உகரந்தொக்கு நின்றது. இறைமகன் என்றது சீவகனை. அலரிவாய் கமழக் கூறினான் என்பது முகத்தான் அமர்ந்து இனிது நோக்கிக் கூறினான் என அவன் அன்புடைமையை உணர்த்தி நின்றது. ( 62 )
-
1619. மத்திம தேசமா நாடு மற்றிநாட்
டெத்திசை நிதியமு மிறைகொண் டில்லவர்க்
குய்த்துமூர் கொடுப்பவ ரேம மாபுர
மித்திசைக் கையநீ புதியை போன்மென.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். போன்ம் : போலும் என்பதன் திரிபு. ஈற்றுமிசை உகரம் கெட்டது (தொல் - வினை. 41.)நாடு என்புழிச் சுட்டுச்சொல் தொக்கது. நாடு மத்திமதேசமாம் என மாறுக. இறைகொள்ளல் - தங்கிக்கிடத்தல். இறைகொண்டு என்பதனை இறைகொள எனச் செயவெனெச்சமாகக் கொள்க. இல்லவர் - வறியார். உய்த்தும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. ஊர் ஏமமாபுரம் என ஒட்டுக. ( 63 )
-
1620. அன்னதே யென்றலி னடிசிற் காலமா
லென்னொடு பேசினாய் தவிர்மற் றீங்கெனப்
பொன்னகர்ப் புக்கபி னறிவல் போகென்றான்
வின்மாபுஇ வாங்கிய வீங்கு தோளினான்.
விளக்கம் : அறிவல் : மறுத்தற் பொருளதாய் விடை பயந்தது. அன்னதே என்றது ஆம் யான் புதியனே என்றபடி. அடிசிற்காலம் - உண்ணுங்காலம். என்னொடு பேசினாய் என்பது நீ புகாக்காலைப் புக்கெதிர்ப் பட்டனையாகலின் நின்னை விருந்தினனாக ஏற்றுக்கோடல் என் கடமையாம் என்பதுபட நின்றது. போகு - போவேன் எனினுமாம். தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. ( 64 )
-
1621. புணர்மருப்பி யானையின் புயல்கொண் மும்மத
மணமகள் கதுப்பென நாறு மாநகர்த்
துணைமலர்க் கண்ணியுஞ் செம்பொன் மாலையு
மிணைமலர்த் தாரினா னிடறி யேகினான்.
விளக்கம் : இடறி : நிகழ்காலம் உணர்த்தியது. புணர்மருப்பு : வினைத்தொகை. கதுப்பு - கூந்தல். துணைமலர் : வினைத்தொகை. கண்ணி - ஒருவகை மாலை. ( 65 )
-
1622. வண்டுகொப் புளித்துணு மாலை மார்பனைக்
கண்டுவப் பளித்தவர் கடைக்க ணேக்கற
மண்டபப் பளிக்கறை மருங்கொர் மாநிழல்
கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கையே.
விளக்கம் : உவப்பளித்தவர் - மகிழ்ச்சியளிக்கப்பட்ட மகளிர். ஏக்கறுதல் - ஆசையாற்றாழ்தல். மண்டபமாகிய பளிக்கறை எனினுமாம். மா - மாமரம் சீவகன் தெருவினூடே சென்று ஒரு பொய்கைக்கரையின் கண் மரநிழலிலிருந்தான் என்பது கருத்து. ( 66 )
வேறு
-
1623. வண்சிறைப் பவளச் செவ்வாய்ப்
பெடையன்ன மடமை கூரத்
தண்கய நீருட் கண்ட
தன்னிழல் பிறிதென் றெண்ணிக்
கண்டனங் கள்வ மற்றுன்
காதலி தன்னை நீர்க்கீழ்ப்
பண்டைய மல்லம் வேண்டா
படுக்வென் றூடிற் றன்றே.
விளக்கம் : மடமை - அறியாமை. கூர்தல் - மிகுதல். பிறிது - மற்றொரு பெடை. படுத்தல் - அகப்படுத்தல். இச் செய்யுளோடு,
மண்ணு மணியன்ன ஒண்ணிறத் தெண்ணீர்த்
தண்ணிழற் கண்டே என்னிழல் என்னும்
நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக
வேகவூடல் அவள் வயின் (1 : 40 - 318 - 40)
எனவரும் பெருங்கதையினை ஒப்புக் காண்க. ( 67 )
-
1624. செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலி னகலச் சேவ
லயிர்ப்பதெ னின்னை யல்லா லறியலே னன்றி மூக்கி
னுயிர்ப்பதுன் பணியி னாலே யூடனீ யென்று பல்காற்
பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்துபாண் செய்த தன்றே.
விளக்கம் : செயிர்ப்பு - குற்றம். சிவந்து - வெகுண்டு. அயிர்த்தல் - ஐயுறுதல். மூக்கின் உயிர்ப்பது - மூக்காலே மூச்சு விடுதலும். சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. ஊடல் - ஊடாதேகொள். ( 68 )
-
1625. கலையுணர் மகளிர் நெஞ்சிற்
காமத்திற் கனிந்த வூட
னிலையுணர் மைந்தர் நீக்கி
நெறியினாற் புணர்ந்த தொப்ப
வலர்மிசைப் பெடையி னூட
லன்புகொள் சேவ னீக்கிக்
குலவிய புணர்ச்சி நோக்கிக்
குன்றனான் சிந்திக் கின்றான்.
விளக்கம் : கலை : மகளிர்க்குரியவாக மணிமேகலையில் (2 : 18 - 32). கூறிய கலைகள்; கலவிக்குரிய கரணமும் ஆம்.அன்னங்களின் செயல்கள் சீவகனுக்கு இந் நினைவுகளை உண்டாக்கின என்பது கருத்து. ( 69 )
-
1626. தன்னையான் முகத்தை நோக்கிற்
றான்முலை முகத்தை நோக்கும்
பின்னையான் பலவும் பேசிற்
றானொன்று மிழற்றும் பைம்பூட்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
பொங்கிள முலையி னாளென்
முன்னையாள் போன்று தத்தை
முகத்துளே தோன்று கின்றாள்.
விளக்கம் : அவாம் - விரும்பும் : ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டது (தொல் - வினை - 41) முன்னையாள் போன்று என்பதற்கு முன்னர் ஊடினாள் போலவே என்றும் ஆம். குணமாலையால் தத்தைக்கு ஊடல் தீர்த்ததை நினைத்தான் என்பர் நச்சினார்க்கினியர். ஊடலும் கூடலும் எப்போதும் நிகழ்பவாதலின் அதனையே கூறினாரெனல் பொருந்தாது. ( 70 )
-
1627. பரிவுற் றாற்பய னின்றியும் பாவைமார்
முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவாற்
பிரிவிற் றோன்றிய பேரன் பெனப்படு
மெரியின் மூழ்கி யிறந்து படுங்கொலோ.
விளக்கம் : அன்புற்றால், இவ்வாறு பிறமகளிரிடமும் இருப்பான் என்று கருதுதல் பரிவு. பாவைமார் எனப் பொதுவாகக் கூறியவன் தத்தையை எண்ணி, இறந்துபடுமோ? என்றான். கொல் : ஐயம்.பாவைமார் - உவமவாகுபெயர். பரிவு - அன்பு. முரிவு - வருத்தம். மூர்ச்சனை - நெட்டுயிர்ப்பு. ( 71 )
-
1628. வாளி யம்பன வாட்டங் கண்ணிதன்
றோளு மென்முலைப் பாரமுந் தொன்னல
நாளு நாளினு நைந்துநைந் துள்சுடப்
பூளை மெல்லணை மேற்புற ளுங்கொலோ.
விளக்கம் : வாளியம்பு - அலகம்பு. பூளை மெல்லணை என்றது பூளைப்பூ முதலியவற்றாற் சமைத்த அணை என்றவாறு. முன்பு என்றோளாகிய அணைமேல் துயின்றாள். இப்பொழுது தீயாகிய அணையிலே புரளுமோ என்றான் என்க. ( 72 )
-
1629. உருகி வாடியென் னுற்றது கொல்லெனக்
கருகி வாடிய காமரு கோதை
னிருக ணீரு மிடைமுலை பாய்ந்துகக்
குருகு பாய்தட மாகவ ழுங்கொலோ.
விளக்கம் : கருங்கால் வெண் குருகு மேயும், பெருங்குள மாயிற்றென் இடைமுலை நிறைந்தே ( குறுந் - 325) என்றார் பிறரும். காமருகோதை - காந்தருவதத்தை. குருகு - நாரை. தடம் - குளம கொல் : ஐயமுணர்த்தியது. ஓர் : அசை. ( 73 )
-
1630. வண்டு வாழ்பயில் கோதை மணமுதற்
கண்ட ஞான்றுதன் கண்ணெனுங் கைகளா
னொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்
றுண்டெ னாவி யுருக்கி யிடுவதே.
விளக்கம் : இந்நோக்கம் அவளுடைய இயற்கை நோக்கமே அன்றித் தலைநாள் தோன்றியவாறும் தோன்றிய தன்மையுங் கூறிற்று. கோதை என்பது கோதையையுடையாள் என்று காந்தருவதத்தையை யுணர்த்தியது. கோதை - கூந்தல்; பயில் கோதை; வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழி. நொண்டு கொண்டு - முகந்து கொண்டு. ( 74 )
-
1631. காத லாளுட லுள்ளுயிர் கைவிடி
னேத மென்னுயி ரய்தி யிறக்குமற்
றாத லாலழி வொன்றில ளல்லதூஉ
மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ.
விளக்கம் : தன் பிரிவால் அவள் வருந்தி யிறந்து படுவாளோ என்று ஐயுற்றவன் தாம் காதலால் ஓருயிரும் ஈருடலுமாக ஒன்றியிருத்தலை நினைந்து தானிறவாமையின் அவளும் இறந்திராள் என்று சிறிது ஐயம் நீங்கினான். மற்றும் விஞ்சை வல்லவளாதலின் பன்னிருதிங்கள் மறைவையும் பிறவற்றையும் உணர்ந்து ஆற்றுவளென்றெண்ணினான். அல்லதூஉம் என்றது, முன் வருந்துவளோ என்றதனையும் உணர்த்தியது. அவட்கு வருத்த மில்லாமையை அவள், பின்னர் வரவிடும் ஓலையானும், இவன் சென்ற காலத்துக் குணமாலையிடத்தே போம் என்றதனானும் உணர்க. ( 75 )
-
1632. காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா
வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமாற்
றாது துற்றுபு தங்கிய வண்டனார்க்
கேத மிற்றென வெண்ணுமென் னெஞ்சரோ.
விளக்கம் : கற்றவும் என்ற உயர்வு சிறப்பும்மை துன்பம் நீங்குதற்குக் கற்ற கல்வி யென்பதனை உணர்த்தியது. பவதத்தனுடைய காதல் வருத்தம் நீங்க அறிவுரை கூறியவன் தான் காதலால் வருந்துவதை யெண்ணிக், கற்றவுங் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலும் என்றான். மற்றும் சச்சந்தனை யெண்ணியும் இது கூறினான் என்க. இனி, இற்றென என் நெஞ்செண்ணும். இது வண்டனார்க்கு ஏதம் என்றுமாம்; இற்று என்றது முற்கூறிய வருத்தத்தை. வண்டன்னார் - உத்தமர். இனி, வண்டன்னார் தபோதனர்; பிரமராசனராதலின், அப் பெயராயிற்று. அவர்க்கே வருத்தம் இல்லாததென்று எண்ணும் என்றுமாம். இன்று - இற்றென விகாரம்; - இவ்வாறு நச்சினார்க்கினியர் அகலங் கூறுவர். ( 76 )
-
1633. நறவெங் கோதையர் நன்னலங் காதலான்
மறவெங் காமத்து வந்துற்ற தீவினைப்
பறவைத் தோ?நர கத்துப் பதைக்குங்கா
லறிவ னல்லதங் கார்சர ணாகுவார்.
விளக்கம் : நறா - நற என ஈற்றாகாரம் குறுகிநின்றது. மறவெங்காமம் பாவத்தையுடைய வெவ்விய காமம். பறவைத்தேர் - பறத்தற்றொழிலையுடைய தேர். அறிவன் - அருகன். சரண் - புகலிடம். ( 77 )
-
1634. வேட்கை யூர்தர விம்முற வெய்திய
மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை
காட்சிக் கின்பொய்கைக் காமார் நலனுண்டு
மீட்டு மங்கிருந் தான்விடை யேறனான்.
விளக்கம் : வருத்தத்திற்குக் காரணமாகின்ற இடத்து இருத்தல் அருமை தோன்ற, மீட்டும் என்றார். ( 78 )
வேறு
-
1635. நேரார் நேரு நீணிதி துஞ்சுந் நிறைகோயி
லாரா வெம்போ ராய்தட மித்த னரசற்கு
நாரார் கற்பின் னாகிள வேய்த்தோ ணளினைக்குஞ்
சீராற் றோன்றிச் செல்வமொ டெல்லாந் திருத்தக்கான்.
விளக்கம் : அடுத்த செய்யுளும் இதுவும் ஒரு தொடர்.
நேரார் - பகைவர். நேர்தல் - திறையாகத் தருதல். நிதிதுஞ்சுங் கோயில். நிறைகோயில் எனத் தனித்தனி கூட்டுக. ஆய்தடமித்தன் : வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார்-அன்பு. வினைத்தொகை. தடமித்தன் என்னும் அரசற்கும் என்க. நார் - அன்பு. நாகிளமை : ஒருபொருட் பன்மொழி. நளினை - தடமித்தன் மனைவி. ( 79 )
-
1636. விண்டார்த் தேய்க்கும் வெம்பரி
மான்றேர் விசயன்னென்
றுண்டா நின்றான் றன்புக
ழூழி யுலகேத்த
வண்டார் சோலை வார்மண
நாறப் புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையைக்
கல்விக் கடலானே.
விளக்கம் : புகுகின்றான், கண்டான் : முற்றெச்சங்கள். விண்டார் - பகைவர். உண்டாக என்பது உண்டா என ஈறு தொக்கு நின்றது. ஊழி உலகு ஏத்த உண்டாநின்றான் என மாறுக. காளை - சீவகன். கல்விக்கடலான் காளை என மாறுக. ( 80 )
-
1637. இந்நாட் டிவ்வூ ரிவ்விட
மெய்தா ரிவண்வாழ்வா
ரெந்நாட் டெவ்வூ ரெப்பெய
ராய்நீ யுரையென்றாற்
கந்நாட் டவ்வூ ரப்பெய
ரல்லாப் பெயர்சொன்னான்
பொய்ந்நாட் டேனும் பொய்யல
வாற்றாற் புகழ்வெய் யோன்.
விளக்கம் : இவ்வாறு கூறியதனால் மறைந்தொழுகுதல் பெற்றாம்.இந்நாட்டிவ்வூர் இவ்விடம் இவண் வாழ்வார் எய்தார் என்னும் அளவும் விசயன் உட்கோள். எனவே, ஆகவே இவன் இவ்விடத்தான் அல்லன் என்று நினைத்து என்பது எச்சப்பொருள். பொய்ந்நாட்டு - பொய்யாக நாட்டிக்கொள்ளப்பட்டது. ( 81 )
-
1638. வாமான் றிண்டேர் வள்ளலு முள்ளம் மிகைகொண்டெங்
கோமாற் குய்ப்பன் கொள்பயன் மிக்கான் கொலைவேலா
னேமா றில்லா விந்திர னேயும் மிவனொவ்வான்
போமா றாய்வென் பொற்பொடு கூடும் வகையென்றான்.
விளக்கம் : வாமான் - குதிரை. வள்ளல் - ஈண்டு விசயன். உள்ளம் - அறிவு. கோமான் : தடமித்தன். ஏ - எய்யுந்தொழில். உய்ப்பன் - செலுத்துவேன். ( 82 )
-
1639. பூங்கழ லானைப் புண்ணிய நம்பி முகநோக்கி
யீங்கிது நின்னா டிப்பதி நின்னூ ரிதுநின்னில்
வீங்கிய திண்டோள் வெல்புக ழாய்நின் கிளையென்றாற்
காங்கது வெல்லா மண்ணலு நேர்ந்தாங் கமைகென்றான்.
விளக்கம் : பூங்கழலான் : சீவகன். இவனை எதிர்ப்படுதலின் விசயனைப் புண்ணிய நம்பி என்றார். ஈங்கு - இங்ஙனம் நட்புக்கொண்ட விடத்து என்பதுபட நின்றது. இது நின்னாடு - இந்நாடு நின்னாடு. பதி - ஊர். இது நின்னில் என்க. யாங்களெல்லாம் நின்கிளை என வருவித் தோதுக. அதுவெல்லாம் - எல்லாம் எஞ்சாப் பொருண்மைத்து கடலெல்லாம் வற்றிற்று என்புழிப்போல. ( 83 )
வேறு
-
1640. மன்னவன் சிறுவ னாங்கோர் மாங்கனி யுண்ண லுற்று
மின்னவிர் கணையிற் பல்காற் பிழைப்பெய்து மீண்டு நிற்பப்
பொன்னவிர் கழலி னானப் பொருசிலை கணையின் வாங்கி
யின்னமிர் தூறு கின்ற விருங்கனி யறவெய் திட்டான்.
விளக்கம் : மன்னவன் சிறுவன் : விசயன். உண்ணல் உற்று - உண்ண விரும்பி. பிழைப்ப வெய்து எனற்பாலது பிழைப்பெய்து என நின்றது. கழலினான் : சீவகன். சிலை - வில். இருங்கனி - பெரிய பழம். ( 84 )
-
1641. எய்தவக் கணையு மாவி
னிருங்கனி யதுவும் பூமிக்
கெய்தவச் சிலையி னெல்லை
யணுகலு மேந்த னோக்கி
யெய்தவவ் விடத்து நின்றே
யெய்தவத் தடக்கை கொண்டாற்
கெய்தச்சென் றைய னாரத்
தழுவிக்கொண் டிதனைச் சொன்னான்.
விளக்கம் : சிலையினெல்லை என்பது ஓரளவும் ஆகும். ஏந்தல் : சீவகன். ஐயன் : விசயன். ( 85 )
-
1642. வண்சிலை கொண்ட வாறும்
வார்கணை தொடுத்த வாறுங்
கண்கணை வைத்த வாறுங்
கற்செய்தோ ளிருந்த வாறுந்
திண்சரம் விட்ட வாறுஞ்
சென்றகோல் போந்த வாறுங்
கண்டெலாம் வியந்து நோக்கி
வில்லுடைக் கடவு ளென்றான்.
விளக்கம் : விற்பிடித்தது, கணைதொடுத்தது, இலக்கு வைத்தது அப்போது தோள் இருந்த நிலை இவையெல்லாம் வியந்துநோக்கி என்க.(86 )
-
1643. மராமர மேழு மெய்த வாங்குவிற் றடக்கை வல்வி
லிராமனை வல்ல னென்ப திசையலாற் கண்ட தில்லை
யுராமன மிவன்க ணின்றி யுவக்குமா செய்வ லென்று
குராமலர்க் காவி னீங்கிக் கோயிலே கோண்டு புக்கான்.
விளக்கம் : இராமன் ஏழு மராமரங்களை ஒரே கணையா லறுத்ததனை இராமாயணத்திற் காணலாம். இசை - சொல். கண்டதில்லை என்றது இவன் அத் தொழிலில் வல்லனாதலைக் கண்ணாற் கண்டேன் என்பது பட நின்றது. உராமனம் இவன்கணின்றி என்றது நீங்காத மனமே இவன்கண் உண்டாகும்படி என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது கோயில் - அரண்மனை. ( 87 )
-
1644. வழிவரல் வருத்த மோம்பி
வயிரப்பூ ணணிந்த மார்ப
னழிகவுள் யானை வேந்தற்
கவன்றிற மறியச் சொன்னான்
மொழியெதிர் விரும்பி மன்னன்
மூரிவிற் றடக்கை யாற்குக்
கழிபெரு முகமன் கூறிக்
காதலங் காளை யென்றான்.
விளக்கம் : வழிவருதலானே உண்டான வருத்தம் என்க. வருத்தம் ஓம்புதலாவது - வருத்தத்தைத் தீர்த்தல். மார்பன் : விசயன். வேந்தற்கு - தடமித்தனுக்கு. அவன் என்றது சீவகனை. மூரிவில் - பெரிய வில் காதலம் : தன்மைப்பன்மை வினைமுற்று. காளை : விளி ( 88 )
-
1645. கிலுத்தங்கூர்ப் பரங்க ளென்னு
மிரண்டினுட் கிலுத்தஞ் சார்ந்து
நலத்தகு விரல்க ளைந்தி
னிம்பர்மூ விரலி னீளஞ்
சிலைத்தழும்பி யானைத் தோலி
னூற்றுரை சிறுமீ னொத்த
விலக்கணக் கிடக்கை கண்டே
யேவினுக் கரச னென்றான்.
விளக்கம் : யானைத் தோல் காழ்ப்பேறின படியையும், அதிலே நூற்றை யுரைத்தது வெண்மைக்கும், சிறுமீன் தழும்பிற்கும் உவமை. ( 89 )
-
1646. அண்ணலஞ் சிலைவ லாரு
ளமோகமா வாசா னிற்பின்
விண்ணகு வெள்ளி வெற்பின்
விஞ்சைய ருலகி னல்லான்
மண்ணகத் தில்லை யென்பார்
வாயினை மடங்க வந்தான்
புண்ணகத் துறையும் வேலா
னெனப்புகழ்ந் தரசன் சொன்னான்.
விளக்கம் : அமோகம் - தப்பாமை, மாஆசான் - பேராசிரியன், ஆசானின் : இன் : ஐந்தனுருபு நான்கன் பொருளில் வந்த உருபு மயக்கம். வாயினை : இன், ஐ : அசைகள். ( 90 )
-
1647. விற்றிற னம்பி தேற்றான்
விருந்தின னிவனு மன்றி
மற்றுமோர் நால்வ ருள்ளார்
மாண்பினால் வளர்ந்த தில்லை
கொற்றநீ கொடுக்கல் வேண்டுங்
குறையெனக் குருசி னேர்ந்தா
னற்றைநா ளாதி யாக
வவர்களும் பயிலு கின்றார்.
விளக்கம் : நம்பி என்றது விசயனை; மற்றும் ஓர் நால்வர் என்றது இவனுடன் பிறந்தோர் நால்வரையும் என்க. மாண்பு - கல்வி மாட்சி, கொற்றம் - வெற்றி; ஈண்டுக் கல்விக்கு ஆகுபெயர். குருசில் : சீவகன். அவர்களும் - அவ் வைந்து மக்களும் ( 91 )
வேறு
-
1648. கழலிற் செந்தா மரையடிகள்
புல்லித்தங் காதல் கூர
நிழலி னீங்கார் நினைத்தன
நினைப்பி னமைவா னாக்கி
யழலிற் சாரா தகலா
தொழுக வொருநா ளவன்போகிப்
பொழிலின் மிக்க தனிற்புக்கான்
மணமகளிர் போற்பொ லிந்ததே.
விளக்கம் : இனிக் கழலென்பதனைக் கழலையுடைய தலைவன் காலாக்கி, அக் காலொடு தலைமகளிர் புணர்ந்து உடன்போகும் என்பாரும் உளர் - இது பதிற்றுப்பத்தின் பழையவுரை. ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் - விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் (பதிற் - 30) என்றார் பிறரும். அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி என்னும் நன்னூற்பாயிரம் ஒப்பு நோக்கத்தக்கது. ( 92 )
-
1649. பாசிப் பாசத்துப் பைம்பொ
னிரைத்தாலி பூத்த வேங்கை
மாசில்வெண் டுகிலை நீர்தோய்த்து
மேற்போர்த்த வண்ண மேபோற்
காசின்மட் டொழுகப் பூத்த
வழிஞ்சில்கண் ணார்கவின் கொண்டன
பேசிற் செந்தலைய வெண்கறைய
புன்கம் பொரிய ணிந்தவே.
விளக்கம் : வேங்கை தாலிபோலப் பூத்தன. அழிஞ்சில் நீர்தோய்த்த வெண்டுகிலை மேலே போர்த்தாற் போன்று பூத்தன. புன்கு பொரிபோற் பூத்தன என்க. ( 93 )
-
1650. கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய
வோடு தேர்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங்
கூடு கோழிக் கொழுமுள் ளரும்பின வங்கோ சிக
வாடை பூத்தன பாதிரி வெண்க டம்புபந் தணிந்தவே.
விளக்கம் : வகுளம் - மகிழமரம். வகுளம் தேருருள்போலப் பூத்தன. சண்பகம் கோழிமுள்போல அரும்பின, பாதிரி கோசிக ஆடைபோலப் பூத்தன, வெண்கடம்பு பந்துபோலப் பூத்தன என்க. கோசிக ஆடை - பட்டாடை. ( 94 )
-
1651. வெருகு வேட்பச் சிரிப்பனபோன்
முகைத்த முல்லை வெய்யவா
ளரவு பைத்தா வித்தன்ன
வங்காந்த ளவிழ்ந்த லர்ந்தன
குரவங் கொண்ட குறும்பூழ்போற்
கொழுங்கான் முகைசு மந்தன
குருதிக் கூரெயிறு கூத்தியர்கட்
கொண்ட கொடித்த ளவமே.
விளக்கம் : வெருகு - காட்டுப்பூனை. முல்லை வெருகு சிரிப்பனபோல் முகைத்தன. காந்தள் அரவு பைத்து. ஆவித்தனபோல் அலர்ந்தன. குரவம் பூழ்க்கால் போல் அரும்பின. தளவம் கூத்தியர் எயிறுபோல் அரும்பின என்க. அரும்புகள் மேனோக்கி நிற்றற்குவமையாகக் கையிலே பிடித்த குறும்பூழின்கால் என்பார் கொண்ட குறும்பூம்க்கால் என்றார். 1649 முதல் இச் செய்யுள் முடியக் கூறிய உவமை நலம் உணர்ந்து மகிழற்பாற்று. ( 95 )
-
1652. சொன்ன நன்மலரு மல்லனவும்
வீழ்பல வின்சூழ் சுளைகளு
நன்மை நூலி னயந்தோன்ற
நன்பொன் விரலி னுதியினாற்
பன்மணியு முத்தும் பவளமும்
பைம்பொன்னுங் கோத்தா லொப்ப
வென்ன வமரரு மருளத்
தொடுத்தா னினமா லையே.
விளக்கம் : வகைமாலை : மாலைகளில் ஒன்று.அல்லன - ஈண்டுக் கூறப்படாத மலர்கள். வீழ்பலவின் சுளை - விரும்புதற்குரிய சுளை. சூழ்சுளை - சூழ்ந்திருக்கும் சுளை, இனித்தின்போர் விரும்பிச் சூழ்தற்குக் காரணமான சுளை எனினுமாம். என்ன அமரரும் - எத்தகைய தேவரும். ( 96 )
-
1653. ஊனுண் சிங்கக் குழவி
யெயிற்றே ரொளியெ யிற்றினான்
றேனுண் போதிற் பிணையலும்
பந்தும் புனைந்து தேமார்ந்த
நானந் தோய்த்து நனைகலவை
நாறு மதந்தெ ளித்தபின்
பானுண் டீஞ்சொல் லாளோர்
படுவிவண் டார்ப்பவந் திறைஞ்சினாள்.
விளக்கம் : பலாச் சுளை கலந்த மாலை ஓலைப் பாசுர மாலையாகும். இதனைப் பிறர் ஐயுறாதவாறு மற்றவற்றையுங் கட்டினான். குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை (தொல் - மரபு - 19) என்றதனுள், கொடை என்றதனாற் சிங்கக் குழவியுங் கொள்க. ( 97 )
-
1654. நெடிய வாட்கண்கள் வாயா
விமைப்பெ னுஞ்சொல் லின்மற்றெங்
கொடியிற் கொத்த விவையென்றா
ணம்பியுங் கொள்க வென்றான்
வடுவும் வேலு மலருங்
கயலும் வனப்ப ழித்தகண்
ணடியஞ் சிலம்பி னாட்குய்த்
திறைஞ்சிக் காட்ட வவள்கொண்டாள்.
விளக்கம் : படுவி குறிப்பறிந்து கொடுத்தாள் வாயா - வாய்ஆக. இமைப்பு - இமைத்தல். அப்படுவி குறிப்பான் இவை கனகமாலைக்கு ஏற்றன வென்றுணர்த்தினாள் என்பது கருத்து.கொடி : கனகமாலை. நம்பி : சீவகன். வடு - மாம்பிஞ்சு. மலர் - தாமரை மலர். சிலம்பினாள் : கனகமாலை படுவியின் குறிப்பறிந்து கொடுத்தான் என்பது கருத்து. அவளும் எனல் வேண்டிய உம்மைதொக்கது. ( 98 )
-
1655. கொண்டு கோதை மலரெழுத்து
மெல்விரலின் மேற்றாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள்
வருமுலைகள் பாய வண்டார்
விண்டு தேன்று ளிப்ப
வேற்றடங்கண் டாமாடு நாடகங்
கண்டு வாழா தவர்வாழ்க்கை
யெல்லாஞ் சவரர் வாழ்க்கையே.
விளக்கம் : நாடகம் - அவர்கள் கவரும் தன்மை. கவர வாழ்தலே வாழ்வு என்றான்.கோதை கொண்டு என மாறுக. மலராலேயே எழுத்துருவம்படப் புனைந்தமையின் மலரெழுத்து என்றார். குழலாள்; கனகமாலை வருமுலை; வினைத்தொகை. கண்தாம் என்புழித்தாம் அசை. சவரர் - வேடர். சவரர் வாழ்க்கை என்றது வேடர் வாழ்க்கை போன்று பயனிலா வாழ்க்கையே என்றவாறு. ( 99 )
-
1656. ஆம்ப னாறு மரக்கார்
பவழ வாயா ரமுதன்னார்
பாம்பு பைத்தாங் கனைய
பவழப் படவர வல்குலார்
தாம்ப லருமருட் டவகி
றவழுந் தண்பூ வணைக்
காம்பின் மென்றோள் கவின்வளர
வைகல் கலப்பென் பவே.
விளக்கம் : என்ப : பலர்பால் வினைமுற்று. பவழவாயார் என்புழி அடைமொழி உவமை குறியாமனின்றது. படவரவல்குலார் என்புழியும் அங்ஙனமே அடைமொழி உவமங் குறியாமல் பெயர் மாத்திரையாய் நின்றது. பாம்பு பைத்தாங்கு மருட்ட என நச்சினார்க்கினியர் கூட்டிக்கூறும் பொருள் சிறப்புடையதாகத் தோன்றவில்லை.( 100 )
-
1657. ஆகந் தானோர் மணிப்பலகை யாக முலைக ணாயாகப்
போகக் கேற்ற புனைபவழ வல்குல் கழக மாக
வேக வின்பக் காமக் கவறாட லியைவ தன்றே
லாக நோற்றிட் டடங்க லாண்மைக் கழகென் பவே.
விளக்கம் : குழலாள் நோக்குவாளாயினாள்; அவ்வாறு நோக்கும் போது மாலையிலிருந்த மலரெழுத்துக்களை இவ்வாறு வாசித்தாள். நச்சினார்க்கினியர், நோக்கும் குழலாள் என முதற்செய்யுளில் அமைத்து வாசித்தாள் என மூன்றாஞ்செய்யுளில் முடிப்பர். அவர் 99 -101 ஆகிய மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கி முடிக்கும் முடிபு:- மாலையை வாங்கிக்கொண்டு தாங்கி, வாசிக்குங் குழலாள், அரக்காம்பல் போல நாறும் பவழவாயார். அமுதன்னார், அல்குலாராகிய மகளிர்தாம் பலரும் ஆடும் நாடகங் கண்டு வாழாதார் வாழும் வாழ்வெல்லாம் - நன்கு நுகராத - வேடர் வாழ்வாயிருக்கும். அவரைக் கலக்குமிடத்து வேற்றடங் கண்கள் தாம் பாம்பு பைத்தாங்கு மருட்ட, தேன்துளிக்கும்படி முலைகள்பாய, அவர் தோள் கவின் வளர அணையிலே தங்குதல் கலப்பென்று கூறுவர். அங்ஙனம் கலந்து ஆகம் பலகையாக, அவர் முலைகள், நாயாக, அல்குல் கழகமாக, கவறாடல் கூடாதாயின், இவை மேலுண்டாகத் தவஞ் செய்தடங்குதல் ஆண்மைக்கு அழகு என்று கூறுவர் என்று வாசித்தாள் என்க ( 101 )
-
1658. பின்னி விட்ட பிடித்தடக்கை
யிரண்டு போன்று திரண்டழகார்
கன்னிக் கலிங்க மகிலார்ந்து
கவவிக் கிடந்த குறங்கினாண்
மின்னுக் குழையும் பொற்றோடு
மிளிர வெருத்த மிடங்கோட்டி
யென்னு மிமையா ணினைத்திருந்தா
ளியக்கி யிருந்த வெழிலொத்தாள்.
விளக்கம் : இயக்கியும் தனக்கு மேலான இறைவனை எண்ணி இமையாது இருப்பாள் என்றுணர்க. கணவன் தீண்டாத ஆடை என்பார் கன்னிக் கலிங்கம் என்றார். கலிங்கம் - ஆடை. குறங்கு - துடை, என்னும் - சிறிதும். இமையா திருந்தமைக்கு இயக்கி உவமை. ( 102 )
-
1659. கொடுவெஞ் சிலையைக் கொளையமைத்துக்
கொதிநீர்ப் பகழி கொளவாங்கிக்
கடுவெங் குறவ னெயப்பட்ட
கன்னிப் பிணையி னிலைகலங்கித்
தொடிதோ ணடப்பத் தோடேம்பத்
துணைவெம் முலைகள் பசப்பூர
நெடுமாத் தோகை மென்சாய
னெஞ்சிற் கிவ்வா றுரைக்கின்றாள்.
விளக்கம் : நிலை கலங்குதல் - ஈண்டு இறந்துபாடு நீங்குதல். மாலையைத் தன் பணிப்பெண் கொண்டு வருதலின், அவற்கு நிகழ்ந்த வேட்கை தன்னிடத்தே என்று கருதி இறந்துபாடு நீங்கினாள். பிணைபோல் என்றால், மேல் வருத்தமின்றி இறந்துபாடு தோன்றும். ( 103 )
-
1660. ஒன்றே யெயிற்ற தொருபெரும்பே
யுலகம் விழுங்க வங்காந்து
நின்றாற் போல நிழலுமிழ்ந்து
நெடுவெண் டிங்க ளெயிறிலங்க
வின்றே குருதி வானவா
யங்காந் தென்னை விழுங்குவா
னன்றே வந்த திம்மாலை
யளியே னாவி யாதாங்கொல்.
விளக்கம் : ஒன்றே : ஏ : அசை. வந்தது : விரைவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாக வந்த வழுவமைதி ஓரெயிற்றது எனற்பாலது ஒன்றே எயிற்றது எனப் புணர்ச்சி பெறாமனின்றது. ஒற்றைப் பல்லையுடைய பெரும்பேய் பிறையையுடைய மாலைப்பொழுதிற்குவமை. நிழல் - ஒளி. வானவாய் : பண்புத் தொகை; விழுங்குவான் : வினையெச்சம். ( 104 )
-
1661. வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள்
வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாண்
முருந்தின் காறுங் கூழையை
முனிவார் நின்னை யென்முனிவார்
பொருந்திற் றன்றா லிதுவென்னாய்
பொன்று மளித்திவ் வுயிரென்னாய்
திருந்து சோலைக் கருங்குயிலே
சிலம்ப விருந்து கூவுதியால்.
விளக்கம் : இது சினத்தினால் வந்த திணைமயக்கம். வருந்தியீன்றாள் என்றது தாய்க்குயிலை. வளர்த்தாள் என்றது காக்கையை. குயில் காக்கைக் கூட்டில் அதன் முட்டைகளோடு முட்டையிட்டு வைத்துப் போய்விடக் காக்கை அதனைத் தன் முட்டை யென்றே அடைகாத்துக் கிடக்கும். குஞ்சு வெளிப்பட்ட பின்னர் அதன் குரலான் வேற்றுமை யுணர்ந்து கடிந்து விரட்டிவிடும். இந் நிகழ்ச்சியை ஈண்டுத் தேவர் இங்ஙனம் செய்யுளில் புனைந்தளிக்கின்றார். ( 105 )
-
1662. பெருவெண் டிங்கண் மாலகப்பூ
மலைந்து பெட்ப நகுகின்ற
துருவு கொண்ட குரலன்றி
லுயிர்மே லாம்ப லுலாய்நிமிரு
மொருபெண் பாலென் யானாக
வுலக மெல்லாம் பாகையாகி
யெரிகொன் றீன்ற விலைப்பலிபோ
லிருத்தி யாலென் னின்னுயிரே.
விளக்கம் : இஃது நீ இருக்கும் அளவு அன்று; நின் நினைவு என் என்றாள் என்க. அகப்பூ - மன மலர். உலகம் : இடவாகு பெயர். பகை ஆகி - பகையாக : எச்சத்திரிபு. பின்னும் இலை போலிருத்தலின் ஈன்ற என்றார். இது தொழிலுவமம். ஏ : எதிர்மறை. ( 106 )
-
1663. வேமென் னெஞ்ச மெய்வெதும்பும்
விடுக்கு மாவி வெய்துயிர்க்கும்
பூமென் குழலார் புறநோக்கி
நகுவார் நகுவ தாயினேன்
றாம மார்பன் றான் புனைந்த
தண்ணென் மாலை புணையாக
யாமக் கடலை நீந்துவேன்
யாரு மில்லாத் தமியேனே.
விளக்கம் : அவன் கையாற் புனைதலின் அது கொண்டு நீந்தலாமோ என நினைத்து, அதனை மறுத்தாள். ( 107 )
-
1664. செம்பொற் கடம்பன் செவ்வேலுங்
காமன் சிலையிற் றொடுத்தலர்ந்த
வம்பும் வென்ற வரிநெடுங்க
ணம்மா மதிவாண் முகத்தினாள்
வம்பு பூத்து முருகுலாய்த்
தேன்கொப் புளித்து நின்றதோர்
கொம்பு வெந்தீ யிடைப்பட்ட
தொத்தாள் விரைசெய் கோதையே.
விளக்கம் : கடம்பன் - முருகன், அலர்ந்த அம்பு - மலர்ந்த மலரம்பு - முகத்தினாள் ஆகிய கோதை என இயைக்க. வம்புபூத்து - புதிதாக மலர்ந்து என்க, முருகு - மணம். விரைசெய் - மணத்தைத் தரும். கோதை - கூந்தல்; இஃது உடையாளை யுணர்த்தியது. காமனுக்குத் தாமரை மலரும் நீல மலரும் அம்பு ஆதலின் அம்பும் வென்ற கண் என்றார். ( 108 )
வேறு
-
1665. மணிநிற மாமை சாயல்
வளையொடு வண்டு மூசு
மணிநிறப் போர்வை யாய
வரும்பெற னாணும் விற்றுப்
பணிநலம் புதிய துண்டான்
பன்மலர் மாலை கொண்டேன்
பிணிநிறப் புறஞ்சொ லென்னும்
பெருமிஞி றார்ப்ப வென்றாள்.
விளக்கம் : மாமை - நிறம், சாயல் - மென்மை/ தன்மை மறைத்துக் கோடற்குக் காரணமாதல் பற்றி நாணத்தைப் போர்வை என்றாள். நாணமே மகளிர் அழகை மிகுவித்தலின் அணிநிறப் போர்வையாய நாணம் என்றாள். வண்டுமூசும் பன்மலர்மாலை என இயைத்துக் கொள்க. ( 109 )
-
1666. காதலான் காதல் போல
வகன்று நீண் டலர்ந்தவாட்கட்
போதுலாங் கோதை மாதர்
புனைந்தலர் தொடுத்த மாலை
யாதலா லலர தாகா
தொழியுமே யழுங்க லென்று
மாதுலா மழலைச் செவ்வாய்
மடக்கிளி மொழிந்த தன்றே.
விளக்கம் : அதனால் ஆறுதல் கொண்டாள். அலர் - பழிச் சொல். காதலான் என்றது சீவகனை. மாதர் - விளி, இஃதலராயிற்றே என்று வருந்திய கனகமாலைக்குக் கிளி சிலேடைவகையால் அலராற்றெடுத்த மாலை கொண்ட நின்பால் அலருண்டாகாமற் பின் என்னுண்டாம் என அசதியாடி நகைச்சுவை பிறப்பித்து அவளை ஆற்றியது என்றபடியாம். ( 110
வேறு
-
1667. என்னை யுள்ளம் பிணித்தென்
னலங்க வர்ந்தவீர்ந் தாரினான்
றன்னை யானும் பிணிப்பே
னெனத்தன் மணிச்செப் பினுண்
மன்னு மாலை கொடுத்தவனுக்
குய்த்தீ யெனத்தொ ழுதுகொண்
டன்ன மென்னா வொதுங்கிச்
சிலம்பரற் றச்சென் றணுகினாள்.
விளக்கம் : என் உள்ளத்தை என வேற்றுமையுருபினை உள்ளத்தோ டொட்டுக. ஈர்ந்தாரினான் - சீவகன், உய்த்து ஈ எனக் கண்ணழித்துக் கொள்க. ஒதுங்கி - நடந்து. ( 111 )
-
1668. அணுகி முன்னின்ற வநங்க
விலாசினி யங்கை கூப்பிப்
பிணைய னீட்டப் பெருந்தகை
யஃதே லான்முக நோக்கலுந்
துணையி றோகை யென்னங்
கைக்குத் தொங்கறொடுப் பாயுநீ
மணிசெய் மென்றோண் மருந்துநீ
யாருயிரு நீயே லென்றாள்.
விளக்கம் : பெருந்தகை - அன்மொழி; சீவகன். ஏலான் - முற்றெச்சம், துணை - ஒப்பு. தோகையாகிய என் நங்கைக்கு என்க. தொங்கல் - மாலை. தோள் மருந்து - தோள் மெலிவு தீர்க்கும் மருந்து, ஏல் - ஏற்றுக்கொள். ( 112 )
வேறு
-
1669. மன்னர் கோயி லுறைவார்
பொறிசெ றித்த மாண்பினரே
யென்ன வஞ்சி னாயென்
றவனைநக் காட்கஃ தன்றுகோதா
யின்ன கொள்கை யேற்கேலா
தென்ன விலங்கெ யிற்றினா
ளன்ன மன்ன நடையினா
டான்வ ருந்து மெனநேர்ந்தான்.
விளக்கம் : மன்னர் கோயில் உறைவார் பொறிசெறித்த மாண்பினர் என்றது யான் பொறியடங்கியிருப்பதே நேரிது என்றவாறு. அஃது என்றது அவ்வச்சம் என்றவாறு. இன்ன கொள்கையேற்கு என்றது அரசன் மக்கட்கு ஆசிரியனாம் மேற்கோளினை யுடையேனுக்கு என்றவாறு. எயிற்றினாள் - அநங்கவிலாசினி. நடையினாள் - கன கமாலை ( 113 )
-
1670. குலிக மார்ந்த கொழுந்தா
மரையன்ன வண்கை நீட்டி
யொலிய லேற்றா னிஃதூழ்
வினையாலுள் ளஞ்சுடு மாலென்ன
விலைகொள் பைம்பூ ணிளமுலையாள்
போகிக் கனக மாலை
மெலிய வெம்பி நைகின்றா
ளுய்யும் வகைதொ டங்கினாள்.
விளக்கம் : குலிகம் - சாதிலிங்கம்; இது அதன் சிவப்பை உணர்த்தியது. ஆர்ந்த - நிறைந்த. குலிகம், சிவப்பு என்றும் பொருள்தரும். ஒலியல் - மாலை. ஊழ்வினை ஈண்டு உழுவலன்பு என்னும் பொருட்டாய் நின்றது : ஆகுபெயர். சுடுமால் என்புழி ஆல், அசை, இளமுலையாள் - அநங்கவிலாசினி. நைகின்றாளாகிய கனகமாலை என்க. நைகின்றாள்; வினையாலணையும் பெயர். ( 114 )
-
1671. நீர்செய் காந்த மணிகூந்த ளம்பா வைநீண் டழகியவோ?
செய் சாந்திற் கழுநீர் விரைகம ழும்பூக்கள் கோத்த
வார்செய் தண்டா மரைவளைய மைவரை யின்வெள் ளருவிநீர்
சீர்செய் கோமகளைச் சேர்த்தினாள் சீதஞ் செய்யா தொழிந்தனவே.
விளக்கம் : கூந்தளம் பாவை : ஒரு வகை மலர். நீர்செய்காந்தமணி - சந்திரகாந்தக்கல். ஏர் - அழகு. விரை - மணம். கோமகள் - கனகமாலை. (115 )
-
1672. பவ்வத் தங்கட் பிறந்து
பனிபெயர்க் குந்தண் ணூற்றதாகி
யெவ்வ மன்னர் படவுலகம்
விற்கு மரும ணியினைச்
செவ்வ னூலிற் சித்திரிக்கப்
பட்டதனைச் சேர்த்திப் பின்னு
மவ்வ னாறுங் குழலாட்கு
மற்று மிவைக ணாடினாள்.
விளக்கம் : பவ்வம் - கடல், ஊறு - ஐம்புலனுள் ஒன்று, மன்னர் எவ்வம்பட என்க. எவ்வம் - துன்பம், செவ்வன் - நேரியதாகிய, மவ்வல் - முல்லை. ( 116 )
-
1673. களிசெய் கோசிக நீர்விழக்
கடிமாலை மேற்றொ டர்ந்துகீழ்
நளிசெய் தண்பூஞ் சலஞ்சயன
மாக்கி நன்னீர் பிலிற்றும்வாய்க்
குளிர்கொள் சாந்தாற்றி பொன்னால
வட்டங்கொண் டேந்தி வீசச்
சளிகொள் சந்தின் கொழுஞ்சாந்த
மாக முழுது மெழுகினாள்.
விளக்கம் : களி - கஞ்சி, கோசிகம் - ஒருவகைப்பட்டு, நளி - செறிவு பூஞ்சலம் - மலரிட்ட நீர், சயனம் - படுக்கை, சாந்தாற்றி - சிற்றால வட்டம், சளி - குளிர்ச்சி, சந்து - சந்தனமரம். ( 117 )
-
1674. கொம்மைவெம் முலையிற் சாந்தங்
குளிர்செயா தாவி வாட்ட
வம்மென் மாலை முகங்கரிய
நீர்துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன்
றொடுத்த விளங்கு மாலை
பொம்ம லோதிக்குத் தானே
துணையாம் புணையா யிற்றே.
விளக்கம் : கொம்மை - பருமையுமாம்; வட்டமுமாம். ஆவி - உயிர் துளும்ப என்றது கொதித்தெழ என்றவாறு. வீரன் - சீவகன், பொம்மல் ஓதி - கனகமாலை. புணையாயிற்று என்றதனால் அத்துன்பக்கடலை நீந்துதற்கு என்க. ( 118 )
-
1675. வாச நீலங் கழுநீர் குவளை படைசாற் றிவந்
தோச னைக்க ணுடையு நெடுங்கட் கனக மாலை
தாசிதூ தாகத் தாமம் புணையாகச் செல்லு நாளுட்
காசில் கல்விக் கடலைக் கரைகண்டார் காளை மாரே.
விளக்கம் : படைசாற்றி வருதல் - போர்க்கு அறைகூவி வருதல். யோசனை - ஓசனை என நின்றது. தாசி - பணிப்பெண்; ஈண்டு அநங்க விலாசினி. காசு - குற்றம். காளைமார் என்றது தடமித்தன் மக்களாகிய விசயன் முதலியோரை. ( 119 )
வேறு
-
1676. பொருசரஞ் சலாகை வெய்ய புகன்றனர் துரக்கு மாறும்
வருகணை விலக்கு மாறும் வாளமர் நீந்து மாறுங்
கருவியுட் கரக்கு மாறுங் கணைபுறங் காணு மாறும்
விரியமற் றவர்க்குக் காட்ட வீற்றிருந் தவருங் கற்றார்.
விளக்கம் : எனவே, தொடையும் விலக்கும் செலவும் சேமமும் தவிர்த்து வினைசெயலும் என ஐவினையாம் வடநூலார் பஞ்ச கிருத்தியம் என்பர். இவை தலைமை பற்றி வில்லையே கூறின வேனும் படைக்கலங்கட் கெல்லாம் பொது. இச் செய்யுளையும் அடுத்த செய்யுளையும், பொருவில் நாழிகை பூணுமாறும், செருவாளாட்டும் சேடகப் பிண்டியும் சாரியை விலக்கும் வேல்திரி வகையும், இடுக்கட்போதில் ஏமப் பூமியுள், வகுத்தவாயில் வகைவகை இவையென, ஒட்டும் பாய்த்துளும் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானை மருப்பிடைத் திரிவும்...பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி என வரும் பெருங்கதையையும் (1-37, 31-43) ஒப்புக் காண்க. ( 120 )
-
1677. வேலுடைத் தடக்கை யார்கள்
வேழமேற் சென்ற போழ்திற்
காலிடைக் கரக்கு மாறுங்
கையிடைத் திரியு மாறும்
வாலிடை மறியு மாறு
மருப்பிடைக் குளிக்கு மாறு
நூலிடைக் கிடந்த வாறே
நுனித்தவன் கொடுப்பக் கொண்டார்.
விளக்கம் : இது யானையுடன் தனித்துப் போர் செய்யும் முறை. ( 121 )
-
1678. கொடிநெடுந் தேரின் போருங் குஞ்சரங் குறித்த போருங்
கடுநடைப் புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி
யிடனறிந் திலங்கும் வைவா ளிருஞ்சிலை குந்த மூன்று
முடனறிந் தும்ப ரார்க்கு முரைப்பருந் தகைய ரானார்.
விளக்கம் : தேரின் போர் - தேர்கொண்டு செய்யும் போர். குஞ்சரம் - யானை. கரப்பற என்றது நன்கு விளக்கமாக என்றவாறு. வைவாள் - கூரிய வாள். இருஞ்சிலை - பெரிய வில். குந்தம் - எறிகோல். உம்பரார் - தேவர். ( 122 )
-
1679. தானையு ளன்றி நின்ற
தனியிட மொற்றி மன்னர்
தானைமேற் சென்ற போழ்தும்
வென்றியிற் றளர்த லின்றித்
தானையை யுடைக்கும் வெம்போர்த்
தருக்கினார் மைந்த ரென்று
தானைசூழ் மன்னற் குய்த்தார்
மன்னனுந் தருக வென்றான்.
விளக்கம் : தானை - படை, ஒற்றி - மறைவின் அறிந்து, தனியனாயினும் தானையோடாயினும் புகவும் போக்கும் பொச்சாப்பின்றி என்றார் கதையினும், (1-37 : 41-2.) மைந்தர் விசயன் முதலியோர் ( 123 )
-
1680. மழையொடு சூழ்ந்து கொண்ட
வான்றுகள் சிலையி னீக்கிக்
குழைமுக நெற்றி நக்கக்
கோலவிற் பகழி வாங்கி
யிழைபக விமைப்பி னெய்திட்
டெறிந்துமின் றிரிவ வேபோல்
விழைவுறு குமரர் புக்குச்
சாரியை வியத்த ரானார்.
விளக்கம் : சூழ்ந்து கொண்ட மழையையும் தூளியையும் வில்லாலே நீக்குதல் - சர கூடங் கட்டி அதனாலே விலக்கிக் காட்டுதல். அத்திரங்கற்ற தன்மையையும் பயன்கொண்ட தன்மையையும் இத் தொடர்நிலைச் செய்யுளுட் கூறாமையின் நெருப்பும் நீருமாகிய அத்திரங்களை விட்டானென்றல் பொருந்தாது. விசயன் காண்டவ வனம் எரித்ததூஉம் சரகூடங் கட்டி யென்றுணர்க - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதால் இங்ஙனம் முன்னர் பொருள் கொண்டன ரெனக் கொள்ளவேண்டும். மழை கூறவே புய முட்டியும் துகள் கூறவே சிரோமுட்டியும், குழை நெற்றி நக்க வாங்கி யெனவே சுந்தர முட்டியும் கூறினார். மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் நேருமே எய்தலாம்! இதுவும் நச்சினார்க்கினியர் விளக்கம் (கந்தரம் - கழுத்து) ( 124 )
-
1681. விசயனே விசயன் விற்போர்க்
கதம்பனே முருகன் வேற்போர்த்
திசையெலாம் வணக்கும் வாட்போர்க்
கந்தணன் செம்பொ னாம
னசைவிலான் யானைத் தேர்ப்போர்க்
கசலனே யசல கீர்த்தி
வசையிலான் புரவிச் சேனென்
றியாவரும் புகழப் பட்டார்.
விளக்கம் : விசயனே விசயன் என்புழி முன்னின்ற விசயன் அருச்சுனனையும் பின்னது தடமித்தன் மகனாகிய விசயனையும் குறிக்கும். கதம்பன், (செம்பொனாமன்) கனகன் அசலகீர்த்தி சேனன் என்னு மிந் நால்வரும் விசயன் - தம்பிமார்கள். சேனன் - சேன் என நின்றது. அந்தணன் - பரசுராமன், அசலன் - சச்சந்தன் படைத்தலைவன், வசையிலான் என்றது நகுலனை. ( 125 )
-
1682. காவலன் மக்க ளாக்கங்
கண்டுகண் குளிர்ந்து நோக்கி
யேவலா னரச னொன்றோ
விருபிறப் பாள னல்லார்க்
காவதன் றின்ன மாட்சி
யவனையா னிகளம் பெய்து
காவல்செய் திடுவல் வல்லே
காளையைக் கொணர்மி னென்றான்.
விளக்கம் : மகட் கொடையை நிகளம் என்றான். காற் கட்டு என்னும் வழக்குண்மையின். ஒன்று என்பது அல்லது என்னும் பொருட்டு. ( 126 )
-
1683. கல்வியுங் கொடிது போலுங்
காவலன் காளை தன்னை
யொல்லலன் சிறைசெய் கின்றா
னென்றவன் கருதிற் றோரார்
பல்சனம் பாபிந்து நிற்பப்
பார்த்திப குமரன் சோர்ந்தான்
வில்வலாற் கொண்டு வேந்தன்
வேறிருந் திதனைச் சொன்னான்.
விளக்கம் : சிறை செய்கின்றான் ஆதலால் கல்வியும் கொடிது போலும் என மாறுக. ஒல்லலன் - பொறாதவன், கருதிற்று - கருதியது. சனம் - மக்கள். பார்த்திப குமரன் - இறைமகன்; ஈண்டுச் சீவகன். வேந்தன் - தடமித்தன். (127 )
-
1684. புண்முழு திறைஞ்சுங் கோட்டுப்
பொருகளி றனைய தோன்றன்
மண்முழு தன்றி வானும்
வந்துகை கூடத் தந்தாய்
கண்முழு துடம்பிற் பெற்றேன்
காளைகைம் மாறு காணேன்
பண்முழு துடற்றுந் தீஞ்சொற்
பாவைநின் பால ளென்றான்.
விளக்கம் : இவர்க்கு நீ கொற்றம் கொடுத்தலின், மண் முழுதும் கை கூடுதல் அன்றி, மறுமையில் வானும் வந்து கைகூடும்படி ஞானநெறியைத் தந்தாய்; நல்வினை செய்தாருடம்பிற் கண்முழுதும் யான் பெற்றேன் என்றது, இவர் போர்த் தொழில் காணப்பெறுதலின் ஊனக்கண்ணும், இவரை நன்னெறியைச் சேர்வித்தலின் ஞானக் கண்ணும் பெற்றேன் என்றவாறு.இனி வியந்து கூறுகின்றவன் மண்ணும் விண்ணும் கைகூடத் தந்தாய்; யானும் உடம்பெல்லாம் கண்பெற்றேன் என்றுமாம்; இந்திரனானேன்என்றுமாம் - இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுகின்றார். ( 128 )
-
1685. முடிகெழு மன்னன் சொல்ல
மொய்கொள்வேற் குருசி றேற்றான்
வடிவமை மனனொன் றாக
வாக்கொன்றா மறுத்த லோடுந்
தடிசுவைத் தொளிறும் வேலான்
றன்கையான் முன்கை பற்றி
யிடிமுர சனைய சொல்லா
லிற்றென விளம்பு கின்றான்.
விளக்கம் : வடியமை என்பது பாடமாயின், ஆராய்ச்சி அமைந்த என்க.வடிவு அமை மனம் - கனகமாலை உருவம் பதியப்பெற்ற மனம். தடி - தசை, வேலான் - தடமித்தன், இற்று - இத்தன்மைத்து. ( 129 )
-
1686. பூவியல் கோயில் கொண்ட
பொன்னனா ளனைய நங்கை
காவியங் கண்ணி வந்து
பிறத்தலுங் கண்க ளீண்டி
மூவிய றிரித லின்றிச்
சாதக முறையிற் செய்தா
ரேவியல் சிலையி னாய்க்கே
யுரியளென் றுரைப்ப நேர்ந்தான்.
விளக்கம் : மூவியல் : சிரோதயம், பூபதனம், தெரியுங் காலம், மூவியலை உதயா ரூடக்கவிப் புக்கள் என்பர் நச்சினார்க்கினியர். கலைகளும் வடிவு முதலியனவும் உடையவன் ஒருவன் என்றலின் இவனே யாயிற்று. ( 130 )
-
1687. வாருலா முலையி னாட்கும்
வரிசிலைத் தடக்கை யாற்குஞ்
சீருலாங் கோலஞ் செய்தார்
செப்பினார் வதுவை நன்னாட்
பாரெலா மறிய நின்று
படாமுர சார்ப்பத் தீவேட்
டேருலாங் கோதை யின்பத்
திளநலம் பருகு கின்றான்.
விளக்கம் : முலையினாள் - கனகமாலை, தடக்கையான் - சீவகன், வதுவை - திருமணவிழா, பார்; ஆகுபெயர். ஏர்-அழகு, கோதை - கனகமாலை, இளநலம் - இளமையழகு. ( 131 )
-
1688. மோட்டிளங் குரும்பை யன்ன
முலைக்கடாக் களிறு முத்தஞ்
சூட்டிய வோடை பொங்க
நாணெனுந் தோட்டி மாற்றி
யாட்டிய சாந்த மென்னு
முகபடா மழித்து வெம்போ
ரோட்டற வோட்டிப் பைந்தா
ருழக்கியிட் டுவந்த வன்றே.
விளக்கம் : கொடிய போரை இனிக் கேடில்லை யென்னும்படி கெடுத்துத் தூசியை உழக்கி யென்றும் கொள்க. ( 132 )
-
1689. ஒண்மணிக் குழைவில் வீச
வொளிர்ந்துபொன் னோலை மின்ன
வண்ணமே கலைக ளார்ப்ப
வான்சிலம் பொலிப்ப முத்துங்
கண்ணியும் பசும்பொ னாணுங்
கதிர்முலை புடைப்பக் காம
ரண்ணலங் குமரன் றன்னொ
டாயிழை யாடி னாளே.
விளக்கம் : குமரனோடு ஆயிழை ஆடினாள் எனவே, ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தாய் இருவரும் ஆடினார் என்பது பட நின்றது. எனவே, அவன் வண்ண மேகலை ஆர்ப்பச் சிலம்பு ஒலிப்ப ஆடினானென்றும் அவள் வீச மின்னப் புடைப்ப ஆடினாளென்றுங் கொள்க, இவன் காட்டக் கண்டாளென வேண்டுதலின். ( 133 )
-
1690. மூசுதேன் வாரி யல்குற்
பட்டபின் முலைக ளென்னு
மாசறு கந்தின் மென்றோண்
மணித்தொடர்க் கொளுத்தி வாட்க
ணாசறு வயிரத் தோட்டி
நுதலணிந் தமுதச் செவ்வாய்
காசறு கவள மாகக்
களிறுகோட் பட்ட தன்றே.
விளக்கம் : களிறு வாரியிற்பட்டபின் கந்தின் தொடர்கொளுத்தி கோட்டி நுதலணிந்து கவளம் கொடுப்பக் கோட்பட்டது என்க. களிறு - சீவகனுக் குவமை வாரி - யானை அடக்குமிடம்; இஃதல்குற்குவமை. கந்து - யானை கட்டுந்தறி; இது முலைக்குவமை. தொடர் - சங்கிலி; இது தோட்குவமை. தோட்டி - அங்குசம்; இது கண்ணுக்குவமை. செவ்வாய் என்றது வாலெயிறூறிய நீரினை : ஆகுபெயர். கவளம் யானைக்கிடும் உணவு. ( 134 )
-
1691. ஒப்பிணை தனக்கி லாதா னுறுவரை யகல மூழ்கிச்
செப்பிணை யனைய செங்கேழ் வனமுலை பொருதுசேப்பக்
கற்பக மரத்தைப் புல்லிக் கைவிடா தொழிந்து காமத்
துப்புர வுமிழுங் காம வல்லியின் றோற்ற மொத்தாள்.
விளக்கம் : கற்பக மரத்திற்குத் துப்புரவு நல்கும் காமவல்லி : இல் பொருளுவமை.அகலம் - மார்பு, செங்கேழ் - சிவப்புநிறம், வனமுலை - அழகிய முலை, சேப்ப - சிவப்ப, துப்புரவு - நுகர்பொருள். காமவவல்லி - கற்பகத்தின்மேற் படருமொரு பொன்னிறமுடைய கொடி. ( 135 )
-
1692. காய்வுறு வேட்கை தன்னாற்
கங்குலும் பகலும் விள்ளான்
வேய்வெறுத் தமைந்த தோளாள்
விழுத்திரை யமுத மென்று
சேய்நலங் கடந்த செல்வன்
றிருநலந் தெளித்திட் டாற்ற
வாய்விடாள் பருகி யிட்டாண்
மடக்கிள்ளை மருட்டுஞ் சொல்லாள்.
விளக்கம் : விள்ளான் - நீங்காதவனாகி, வேய்தான் ஒவ்வாமையான் வெறுத்துமாறின தோள் என்க. விழுத்திரை என்றது திருப்பாற்கடலை. சேய் : முருகன், பருகியிட்டாள் : ஒருசொல்; பருகினாள் என்க. ( 136 )
-
1693. திரையிடைக் கொண்ட வின்னீ ரமுதுயிர் பெற்ற தென்னு
முரையுடைக் கோதை மாத ரொளிநல நுகர்ந்து நாளும்
வரையுடை மார்ப னங்கண் வைகின னென்ப மாதோ
கரைகட லனைய தானைக் காவலன் காத லானே.
விளக்கம் : வரையகல் மார்பன் என்றும் பாடம். உயிர் சீவகன், அமுது : கனகமாலை. திரை - பாற்கடல். திரையளிப்பக் கொண்ட அமுதென்க. இனிய நீர்மையுடைய அமுது என்க. உரை - புகழ், மாதர் : கனகமாலை, மார்பன் : சீவகன், மாது, ஓ. அசைகள். கரைகடல் : வினைத்தொகை.( 137 )
-
1694. வாளினான் மிடைந்த கண்ணாள்
வருமுலைத் தடத்துள் வைகித்
தோளினான் மிடைந்து புல்லித்
தொண்டைவா யமுத மாந்திக்
காளைசெல் கின்ற நாளுட்
கட்டியங் காரன் மூதூர்
மீளிவேற் குருசிற் குற்றார்க்
குற்றது விளம்ப லுற்றேன்.
விளக்கம் : மிடைந்த கண் - மிடையப்பட்ட கண். கண்ணாள் : கனகமாலை. வருமுலை : வினைத்தொகை. மிடையப் புல்லி என்க. தொண்டை - கொவ்வைக்கனி. மாந்தி - பருகி. காளை : சீவகன். மூதூர் - ஈண்டு. இராசமாபுரம். மீளிவேல் - தலைமைத் தன்மையுடைய வேல். உடையான்றன்மை உடைமைமேனின்றது. ( 138 )
-
1695. வெண்மதி யிழந்த மீன்போல்
விடலைக்குத் தம்பி மாழாந்
தொண்மதிச் சூழ்ச்சி மிக்கா
னுள்ளுழி யுணர்தல் செல்லான்
புண்மதித் துடைந்த போது
பொழிந்துமட் டொழுகு நன்னாட்
டுண்மதி வருந்த நாடி
யொளிநக ரெய்தி னானே.
விளக்கம் : நகர் - குணமாலையின் வீடு என்பர் நச்சினார்க்கினியர். விடலைக்குத் தம்பி என்றது நந்தட்டனை. மாழாத்தல் - மயங்குதல். சூழ்ச்சி மிக்கான் : சீவகன். புள், ஈண்டு வண்டு. மதித்தல் - குடைதல். மட்டு - தேன். மதி உள்வருந்த என்க. ( 139 )
-
1696. வெள்ளிவெண் மலைக்கு வேந்த
னொருமகள் வேற்கட் பாவை
யொள்ளிழை யவளைக் கேட்பா
னுறுவலி செல்லு மாங்கண்
வள்ளிதழ்க் கோதை தானே
யிட்டதோர் வண்ணந் தன்னைக்
கொள்ளத்தான் முரல லுற்றுக்
கோலமை வீணை கொண்டாள்.
விளக்கம் : வெள்ளி வெண்மலை என்புழி வெண்மை இயல்படை. வேந்தன்; கலுழவேகன். ஒரு மகளும் வேற்கட்பாவையும் ஒள்ளிழையவளும் ஆகிய காந்தருவதத்தை என்க. கேட்பான் - கேட்டற்கு. உறுவலி: அன்மொழித் தொகை. வண்ணம் - பாடல். கோல் - நரம்பு ( 140 )
-
1697. ஆடகச் செம்பொ னாணி யானெய்வார்ந் தனைய திண்கோன்
மாடக நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கிச்
சூடக மணிந்த முன்கைத் தொகுவிரல் சேப்ப வெற்றித்
தோடலர் கோதை கீதந் துணிவினிற் பாடுகின்றாள்.
விளக்கம் : ஆடகச் செம்பொன் நால்வகைப் பொன்னில் ஒன்று. திண்கோல் - திண்ணிய நரம்பு. மாடகம் - முறுக்காணி. நொண்டு கொண்டு : ஒரு சொல்; முகந்துகொண்டென்க. சூடகம் - ஒருவகை வளையல். தொகுவிரல் : வினைத்தொகை. கோதை : காந்தருவதத்தை; துணிவு - தெளிவு.( 141 )
வேறு
-
1698. இறுமருங்குல் போதணியி னென்றினைந்து கையி
னறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனிவளையுந் தோடுறப்பக்
கண்ணோவா முத்துறைப்பத் தோழி கழிவேனோ.
விளக்கம் : ஓ : வினா.போது அணியின் மருங்குல் இறும் என்று மலர் சிந்துவார் என மாறுக. சிந்துவார் என்றது சீவகனை நண்ணார்: முற்றெச்சம். இது முதல் மூன்று செய்யுளும் தலைவி தன் ஆற்றாமையைத் தோழிக்குக் கூறல் என்னும் அகத்துறை பற்றிய செய்யுள். முத்து கண்ணீர்க்கு ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல். இவற்றைத் தாழிசைக் கொச்சக ஒருபோகென்பர் நச்சினார்க்கினியர். ( 142 )
-
1699. பூமாலை சூடிற் பொறையாற்றா நுண்மருங்கு
லேமாரா தென்றினைவா ரெண்ணார் துறந்தா
ரெண்ணார் துறப்ப வினவளையுந் தோடுறப்ப
மணணார்வேற் கண்டுயிலா தோழி மருள்வேனோ.
விளக்கம் : ஏம் - இன்பம். ஏமாராது, என்றது முறிந்துபடும் என்னும் பொருள் குறித்தது. மண் - மஞ்சனமாடுதல். ( 143 )
-
1700. வண்டூத வம்மருங்கு னோமென்று பூமாலை
கொண்டோச்சுங் காதலார் கூடார் துறந்தார்
கூடா ரவர்துறப்பக் கோல்வளையுந் தோடுறப்பத்
தோடார்பூங் கண்டுயிலா தோழி துயர்வேனோ.
விளக்கம் : அம் மருங்குல் - அழகிய இடை. வண்டூதவே நோமிது இவற்றை அணியின் இறுதல் ஒருதலை என்று பூமாலை ஓச்சும் காதலார் என்பது கருத்து. இவை அகத்திணைப் பாடலாதற்குச் சுட்டி ஒருவர் பெயர் கூறாது புனைந்தனள் என்க. ( 144 )
வேறு
-
1701. ஊன்றகர்த் தனைய போன்று
மூடெரி முளைப்ப போன்றுந்
தோன்றுபூ விலவத் தங்கட்
டொகையணி லனைய பைங்காய்
கான்றமென் பஞ்சி யார்ந்த
மெல்லணை யாழ்கை நீக்கித்
தேன்றயங் கிணர்பெய் கோதை
சிந்தையி னீட்டி னாளே.
விளக்கம் : தகர்க்கப்பட்ட ஊன்போன்றும் எரி பலவாய் முளைப்பன போன்றும் தோன்றும் பூவையுடைய இலவத்திடத்து அணிலனைய காய்கான்ற பஞ்சென்க என்பர் நச்சினார்க்கினியர். ஊனும் நெருப்பும் இலவம் பூவிற்குவமை. அதன்காய்க்கு அணில் உவமை. சிந்தை - வருத்தம். நீடினாள் என்பது நீட்டினாள் என விரிந்தது; விகாரம். ( 145 )
வேறு
-
1702. நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண்மனங் கவற்றிய காமர் தொண்டைவா
யண்ணலை நினைந்துவெய் துயிர்ப்ப வாய்நலம்
வண்ணத்தின் மழுங்கிவாட் கண்ணி வாடினாள்.
விளக்கம் : நோக்குநர் கண்மனம் கவற்றிய அண்ணல் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். கண்ணையும் மனத்தையும் கவற்றிய என்க. காமர் - காமம் மருவுதற்குக் காரணமான என்க. காமர் - அழகுமாம். வாட்கண்ணி : காந்தருவதத்தை. ( 146 )
-
1703. மின்றவழ் மணிவரை மாலை மார்பனை
பொன்றவ ழிளமுலை பொருது புல்லுநா
ளென்றுகொ லெனநினைந் திருந்த செவ்வியுட்
சென்றனன் சீவகற் கிளைய செல்வனே.
விளக்கம் : பொருது - பொர. மார்பன் : சீவகன். புல்லுநாள் - தவழுதற்கியலும் நாள், என்று கொல் என்புழிக் கொல் என்பது ஐயப்பொருள்மேனின்றது. செவ்வி - பொழுது. செல்வன் : நந்தட்டன். ( 147 )
வேறு
-
1704. ஐவிலி னகல நின்றாங்
கடிதொழு திறைஞ்சி னாற்கு
மைவிலை பெற்ற கண்ணாண்
மைந்தனை மருண்டு நோக்கிக்
கைவிலுங் கணையு மில்லாக்
காமன்போந் திருக்க வென்ன
மொய்வெல்லுங் குருதி வேலான்
மூவிற்க ணிறைஞ்சி நின்றான்.
விளக்கம் : வேலான் போந்திருக்க என்று தத்தை கூற காமன் போந்து நின்றான் என்பர் நச்சினார்க்கினியர். அண்ணன் மனைவி காமனே என்று விளிப்பது தகுதி அன்றென எண்ணினார் போலும். எனினும், அவரே, பிள்ளையை உவந்து கூறுமாறே கூறினாளென அவள் கூற்றாக்கலுமாம் என்பர். இறைஞ்சினாற்குக் கூற என இயைக்க. ( 148 )
-
1705. திங்கள்வாண் முகமு நோக்கான்
றிருமுலைத் தடமு நோக்கா
னங்கதிர்க் கலாப மின்னு
மணியல்குற் பரப்பு நோக்கான்
செங்கயற் கண்ணி னாடன்
சீறடிச் சிலம்பு நோக்கி
யெங்குளா ரடிக ளென்னா
வின்னண மியம்பி னானே.
விளக்கம் : முகச் சோர்வையும் முலைப்பசப்பையும் ஆடை மாசுண்டதையும் நோக்கியிருப்பானெனிற் கணவன் பிரிவால் அவள் வருந்தியிருக்கின்ற நிலையை அறிவான். சிலம் பொன்றையுமே நோக்கியதால், அவன் பிரியவும் அணிசுமந்திருக்கின்றனள் என்று வருந்தி வினவுகிறான். உம்மைகள் வருத்த மிகுதியை உணர்த்தின. ( 149 )
-
1706. பொறிகுலாய்க் கிடந்த மார்பிற்
புண்ணியன் பொன்றி னானேல்
வெறிகுலாய்க் கிடந்த மாலை
வெள்வளை முத்த நீக்கி
நெறியினா னோற்ற லொன்றோ
நீளெரி புகுத லொன்றோ
வறியலென் கொழுநன் மாய்ந்தா
லணிசுமந் திருப்ப தென்றான்.
விளக்கம் : பொறி - ஈண்டு உத்தமவிலக்கணத்திற்குரிய மூன்று கோடுகள். புண்ணியன் என்றது சீவகனை. பொன்றுதல் - இறத்தல். இச் செய்யுளோடு காதலர் இறப்பின் கனையெரிபொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது, இன்னுயிர் ஈவர் ஈயாராயின், நன்னீர்ப் பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரிபுகாராயின், அன்பரோடு, உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர் எனவரும் மணிமேகலை (2 : 42-8) நினைவு கூரற்பாலது. ( 150 )
-
1707. காய்தழல் கவரப் பட்ட
கற்பக மரத்திற் கன்றி
யாய்கழற் குருசில் வாடி
யற்புத்தீ யழலு ணிற்ப
வாய்மொழிந் துரைக்க லுற்றாள்
வனைகுழற் கற்றை வண்டார்த்
தோய்பிழி துளிக்குங் கண்ணிச்
சுரும்புசூழ் கொம்ப னாளே.
விளக்கம் : வாய் மொழிந்து - முற்பட அவன் மறைந்து வேற்றுருக் கொண்டிருக்கின்றபடியைக் கூறிவிட்டு - என்பர் நச்சினார்க்கினியர். ( 151 )
-
1708. மதுமுகத் தலர்ந்த கோதை
மாற்றமைந் தற்கு ரைப்பாள்
கொதிமுகக் குருதி வைவேற்
குருசிலோ நம்மை யுள்ளான்.
விதிமுக மணங்க ளெய்தி
வீற்றிருந் தின்ப முய்ப்ப
மதிமுக மறியு நாமே
வாடுவ தென்னை யென்றாள்.
விளக்கம் : நாம் எனத் தன்னை உயர்த்திக் கூறினாள். கோதை : காந்தருவதத்தை. குருசில் : சீவகன். உள்ளான் - நினையாதவனாய். விதி - ஊழ், மதிமுகம் - தூரியவிடத்தே நிகழ்வனவற்றை அறிதற்குரிய வித்தை. இதனை ஆபோகினியென்றும் கூறுப. இதனால் சீவகன் உயிருடன் இருத்தன் முதலிய செய்திகளும் உணர்த்தினாளாயிற்று. ( 152 )
-
1709. வேண்டிய தெமக்கு நேரின்
வில்வலாய் நுமைய னாரைக்
காண்டியென் றுரைப்பக் காளை
யெழுமையு மடிமை நேர
மாண்டதோர் விஞ்சை யோதி
மதிமுகந் தைவந் திட்டா
ணீண்டது பெரிது மன்றி
நினைத்துழி விளக்கிற் றன்றே.
விளக்கம் : இனி, நீண்ட தென்றது இவனுக்கு மிகவும் அரிய காட்சியை. அரிதன்றாக விளக்கிற் றென்றுமாம். பெருமை - அருமை. ( 153 )
-
1710. பொற்புடை யமளி யங்கட்
பூவணைப் பள்ளி மேலாற்
கற்பக மாலை வேய்ந்து
கருங்குழற் கைசெய் வானை
முற்படக் கண்டு நோக்கி
முறுவல்கொண் முகத்த னாகி
விற்படை நிமிர்ந்த தோளான்
றொழுதுமெய் குளிர்ந்து நின்றான்.
விளக்கம் : மனத்தாலே நோக்கி என்றது அவன் வேற்றுருக் கொண்டுள்ளதனை. கற்பகம் : அரசர் தம் ஆணையால் இவ்வுலகிற் கொணர்ந்த கற்பகம் வானவர் சாபத்தால் தன்னிலை அன்றிப் பூவளவே உண்டாயிற்றென்பர். மந்தாரம் கவிரம் என்பனவும் அவ்வாறாம். இனி, உத்தர குருவில் உள்ள கற்பகம் ஈண்டுக் கொணர்ந்தார் என்றுமாம். அல்லது கற்பகம் என்பது கனகமாலையின் ஒரு பெயருமாம். ( 154 )
வேறு
-
1711. செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலு
மைய னெஞ்சொடு வண்டிமிர் தாரினான்
பொய்ய தன்மையிற் பூங்கழ லானடிக்
கெய்து கேனரு ளாயென் றிறைஞ்சினான்.
விளக்கம் : அடிக்கு : உருபு மயக்கம். தேமொழி : காந்தருவதத்தை. மையல் - மயக்கம். கண்டமையானே புதிதாகக் கிளர்ச்சியெய்திய மையல் நெஞ்சம் என்க. தாரினான் : நந்தட்டன். பூங்கழலான் என்றது சீவகனை. எய்துகேன் : தன்மை ஒருமை எதிர்கால வினைமுற்று. ( 155 )
-
1712. மதுக்கை மாலையும் வண்டிமிர் சாந்தமும்
புதுக்கச் சார்ந்தபொன் வாளுஞ் சுரிகையுங்
கதுப்பி னானமுங் காமர் கலங்களும்
பதிக்கட் டம்மெனப் பாவையு மேவினாள்.
விளக்கம் : இமிர் - முரலுதற்குக் காரணமான. கச்சு - ஒருவகை ஆடை. சுரிகை - உடைவாள். கதுப்பு-மயிர், இன் நானம் - இனிய புழுகு. காமர் - விருப்பம், கலம் - அணிகலம், பதி என்றது யானிருக்குமிவ்விடத்தே என்பதுபட நின்றது. தம் - தருவீராக. பாவை : காந்தருவதத்தை. ( 156 )
-
1713. மணியின் மேல்புறம் போர்த்தன்ன மாக்கதிர்
துணிய வீசுந் துளங்கொளி மேனியன்
பணியிற் பல்கலந் தாங்குபு சென்றபி
னணிசெய் கோதையங் காமினி யோதினாள்.
விளக்கம் : பல்கலம் எனவே படைக்கலங்களும் அடங்கின, பணியின் என்றது சீவகன் கொண்டு நிற்கிற நிறமும் வடிவும் அவனைக் காணுமளவும் இவனுக்கு நிற்க வென்று நிருமித்தனை. இங்ஙனம் நிருமித்த தென்னெனின், நந்தட்டனுடைய உண்மை வடிவுடனே கொண்டுபோய் அரசன் கோயிலில், ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பினுள்ளே (நெடுநல். 107) வைத்தாற் சீவகன் அறிதற்கு முன்னே தீங்கு நேரும் என்று கருதியும், அரசன் கோயிலுக்கு வெளியே விட்டாற் சீவகன் என்னும் பெயர் ஆண்டு வழங்காமையின், இவன் சீவகனுடைய புனைபெயர் அறிந்து கோயிலுட் சேறல் அரிதென்று கருதியும் என்க. அஃது, அந்நாட்டவ்வூரப் பெயரல்லாப் பெயர் சொன்னான் (சீவக -1637) என்பதனாலுணர்க. இதனானே சுதஞ்சணனை நீங்கிய பின்பு தன்னை மறைத்தற்கு வடிவும் பெயரும் வேறாகவே நிகழ்த்துகின்றானென்பதூஉம் பெற்றாம். வடிவு மறையாவிடத்து நாடும் ஊரும் மறைத்ததனாற் பயனின்றாம். இவ் விலகம்பகங்களிற் சீவகனென்றது நூலாசிரியர் கூற்று. இனி, இவ்வாறன்றி, அரசர் குலத்திலும் வணிகர் குலத்திலும் பிறந்தவர்கட்குச் சிறிது வடிவொப்பன்றி ஒரு வடிவே என்று மேற்கூறல் பொருந்தாது. ஒரு வடிவே என்பது ஆசிரியர் கருத்தாயின் ஈண்டன்றிப் பிறாண்டும் இருவர்க்கும் ஒரு வடிவே என்று கூறுவர். அது கூறாமையானும் சீவகனுக்கு மாற்று வடிவும் அம் மாற்று வடிவே நந்தட்டனுக்கும் தத்தையால் நல்கப்பட்டதென்றும் கொள்வதே ஆசிரியர் கருத்து. ( 157 )
-
1714. சாந்தி னான்மெழு கித்தட மாமல
ராய்ந்த தாமங்க ணாற்றி யகிற்புகை
யேந்தி யிட்டிளை யாரொடு நீங்கினாள்
காந்தி வண்டுணுங் கற்பகக் கோதையே.
விளக்கம் : தடம் - குளம். தாமம் - மாலை, நாற்றி - தூக்கி, ஏந்தியிட்டு : ஒருசொல். காந்தி - பசித்து. வயிறு காந்துகிறதென்னும் வழக்குண்மை உணர்க. கோதை : காந்தருவதத்தை. ( 158 )
-
1715. தூமம் மார்ந்த துகிலணைப் பள்ளிமேற்
காமன் றம்பியிற் காளை கிடந்தபி
னேம மாபுரத் திட்டதொர் மாதெய்வ
நாம நல்லொளி நந்தனை யென்பவே.
விளக்கம் : தத்தை ஓர் அறையிலே தரையைச் சந்தனத்தால் மெழுகிச் சுற்றிலும் மாலைகளைத் தூக்கித் துகிலொன்றைத் தரையின் மேல் விரித்து அதன்மேல் நந்தட்டனைத் துயில வைத்துச் சென்றனள். தெய்வம் அவனைக் கொண்டு சேர்த்தது. அச்சங் கூர்தலும் நிருமித்த வடிவாயிற்று. ( 159 )
-
1716 . மின்னும் பூணும் மிளிர்கதி ராரமும்
பொன்னும் பூத்ததொர் கற்பகப் பூமர
மன்ன காளை யமர்துயி றேறினான்
மன்னும் வெஞ்சுடர் மாக்க லிவர்ந்ததே.
விளக்கம் : கதிராரம் என்றது முத்துமாலையை. மின்னும்.....பூத்த கற்பகமரம் : இல் பொருளுவமை; இது நந்தட்டனுக்குவமை. துயில் தேறுதல் - துயிலுணர்தல். வெஞ்சுடர், ஞாயிறு. மாக்கல் - பெருமலை; ஈண்டு உதயகிரி. ( 160 )
வேறு
-
1717. செய்யவாய் நெடிய கண்ணாள்
செல்கென விடுக்கப் பட்ட
வெய்யவாட் டடக்கை வீர
னிருத்தலும் விசய னென்பான்
கையவாஞ் சிலையி னானைக்
கண்டுவந் தருகு சேர்ந்தான்
பையவாய்ப் பரந்த வல்குற்
பாவையர்க் கமிர்த மன்னான்.
விளக்கம் : கையவாம் சிலையினான் எனவே காமனாம். காமனைப் போன்ற நந்தட்டன் என்க. கண்ணாள் - காந்தருவதத்தை. வீரன் - நந்தட்டன், கை அவாம் சிலையினான் - காமன். காமன் என்றது நந்தட்டனை. அமிர்தமன்னான் : விசயன். ( 161 )
-
1718. தெய்வமே கமழு மேனித்
திருவொளி கலந்த மார்பி
னையநீ யாரை யென்றாற்
கவனுரை கொடாது விட்டான்
பையவே பெயர்ந்து போகிப்
பனிமலர்க் கோதை மார்பின்
மையலங் களிறு போலு
மைத்துனற் கிதனைச் சொன்னான்.
விளக்கம் : சீவகனுடைய மாற்று வடிவத்தைக் கொண்டு நின்ற தெய்வமாதலின், தெய்வமே கமழும் மேனியாய் விசயற்குக் தோற்றியது. வடிவொன்றேயாகவும் தெய்வத் தன்மையைத் தன் நுண்ணுணர் வால் உணர்தலின், இவற்குச் சிறிது வேறுபாடும் உண்டென்றறிந்து, நீ யாரை என்றான். யாரை : ஐ : அசை. வசுந்தரி என்னும் பணிப் பெண் விசயற்குக் கூற, அவன் கண்ட செய்தியை இதனை என்றார். இவ்விடத்திருந்து உரைகொடாதிருந்ததும், அவன் வெறாதபடி காத்ததும் நந்தட்டன்மேல் தங்கிய தெய்வம் என்றுணர்க என்பர் நச்சினார்க்கினியர். அன்றி, வடிவ வொற்றுமையிருப்பினும் பழகிய நோக்கமின்மையின், நீ யார் என்றான் எனவும், ஒன்று பட்ட வடிவினால் வியந்து வெறாமல் உண்மையுணர்தலை மேற்கொண்டானாகையால் யாதும் புரிந்திலன் எனவும் கொள்ளுதலே சிறப்புடைத்து.( 162 )
-
1719. சந்தனக் களியும் பூவுந் தமனியக் குடத்து ணீருங்
கெந்தநா றகிலு முத்துங் கிளரொளி விளக்கு மேந்தி
யந்தில்விற் பயிற்றுந் தானம் வழிபட வாங்குச் சென்றாண்
மந்திர மடந்தை யன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்.
விளக்கம் : அந்தில் : அசை. களி - குழம்பு. தமனியக் குடம் - பொற்குடம், கெந்தம் - மணம். அந்தில் - அசை, மந்திர மடந்தை - இருபெயரொட்டு. இது முதல் நான்கு செய்யுள் விசயன் சீவகனுக்குக் கூறுவன. ( 163 )
-
1720. ஆரகிற் சேக்கை நீங்கி
வெறுநிலத் தடிக டாமே
நீரிதிற் கிடந்த தென்கொ
லென்றியா னினைந்து போகிச்
சேர்துணை கழறச் சென்றேன்
செல்வியோ டாங்குக் கண்டேன்
போர்பல கடந்த வேலோய்
மாயங்கொல் போற்றி யென்றாள்.
விளக்கம் : இவ்வாறு வசுந்தரி கூறினாள் என்றான். ( 164 )
-
1721. கணைகடி கண்ணி சொல்லக்
காணிய யானுஞ் சென்றேன்
மணியிலங் கொண்பொன் வைவாள்
கேடக மருங்கு வைத்த
விணைகடி சீய மன்னா
னிளமையும் வனப்பு மேருந்
துணையமை வடிவுஞ் சொல்லி
னிற்பொறி யொற்றிக் கொண்டான்.
விளக்கம் : வனப்பு - பல உறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு. துணை அமை வடிவு - உவமையின்மையாகிய உருவம். துணை அமை வடிவு என்பதற்கு இளமை வனப்பு ஏர் இவற்றிற்குத் துணையாகப் பொருந்திய வடிவு என்றும் பொருள்கொள்ளலாம். துணை - சார்பு. ( 165 )
-
1722. நீண்டதோ ணெடிய செங்க
ணீலமாய்ச் சுரிந்த குஞ்சிப்
பூண்டதோ ரார மேனிப்
பொன்னுரைத் திட்ட தொக்குங்
காண்டகு காதிற் றாழ்ந்த
குண்டலங் குவளைப் பைந்தா
ராண்டகை யழகன் யார்கொ
லறியல னவனை யென்றான்.
விளக்கம் : வசுந்தரி, அடிகள் வெறுநிலத்தே கிடந்தார் என்று கழறச் சென்றே னென்றமையானும், விசயன் நிற்பொறி ஒற்றிக் கொண்டான் என்றமையானும், உவமை கூறுதல் இன்றி இருவரும், இருவர்க்கும் ஒரு வடிவென்றே கூறினார்கள். உவமையாவது சிறிது ஒத்து இரண்டிற்கும் வேறுபாடு உணர்த்துவது. இஃது அஃதன்மை உணர்க. பொறியும் ஒன்றில் அழுத்தினால் ஒப்பன்றி அதுவேயாய் இருக்கும் என்று உணர்க. இவ்வாற்றானும் நிருமித்தமையே கூறிற்றாம், வசுந்தரி பெண்பாலாதலின் தெய்வத் தன்மை உணர்ந்திலள். ( 166 )
-
1723. இனத்திடை யேறு போலு
மெறுழ்வலி யுரைத்த மாற்ற
மனத்திடை மகிழ்ந்து கேட்டு
மைந்தனந் தட்ட னேயாம்
புனத்திடை மயில னாளாற்
பொருளுரை பெற்று வந்தா
னெனத்தவி ராது சென்றாங்
கெய்தின னென்ப வன்றே.
விளக்கம் : என்ப : அசை. தவிராது என வருவதால் அன்று ஏ அசை எனினும் பொருந்தும். பொருளுரை - மந்திரம் எனக் கொண்டு பொருளுரையாலே இவ்வடிவைப் பெற்று வந்தான் என்பதும் பொருந்தும். நச்சினார்க்கினியர், மைந்தன் யாம் என்ப எனக் கூட்டுக என்றும், என்ப எனப் பன்மையாற் கூறிற்று வசுந்தரி கூற்றையுங் கருதி என்றும் கூறுவர். எறுழ்வலி யுரைத்த மாற்றம் கேட்டு என்ற அளவிலே வசுந்தரியும் விசயனும் நந்தட்டனைச் சீவகன் எனக் கருதினார்கள் என்று சீவகன் உணர்ந்ததனால், மைந்தன் நந்தட்டனேயாம்எனக் கருதினான் என்பது போதரும், எனவே, இவ்வாறு கொண்டு கூட்டுதல் எற்றுக்கோ? ( 167 )
-
1724. கருமுகிற் பொடித்த வெய்யோன்
கடலிடை நடப்ப தேபோற்
றிருமுகஞ் சுடர நோக்கிச்
சீவகன் சென்று சேர்ந்தான்
றருமனை யரிதிற் கண்ட
தனஞ்சயன் போலத் தம்பி
திருமலர்த் தடக்கை கூப்பிச்
சேவடி தொழுது வீழ்ந்தான்.
விளக்கம் : கடலிடைத் தோற்றின இளங்கதிர் கருமுகிலிடத்தே விடாது நடப்பதே போலும் முகம். முகில் குழலிற்கும், வெய்யோன் முகத்திற்கும் உவமை; கடல் - தோற்றுஞ் செஞ்சுடர்போலச் சுடர்ந்ததே (சீவக. 2497) என்பர் பின்னும். ( 168 )
-
1725. தாமரைத் தடக்கை கூப்பித்
தாண்முதற் கிடந்த தம்பி
தாமரைத் தடத்தை யொத்தான்
றமையனும் பருதி யொத்தான்
றாமரைக் குணத்தி னானை
மும்முறை தழுவிக் கொண்டு
தாமரைச் செங்க ணானுந்
தன்னுறு பரிவு தீர்ந்தான்.
விளக்கம் : சீவகன் பரிவு இருமுது குரவரை எண்ணியது. ( 169 )
-
1726. என்னுறு நிலைமை யோரா
தெரியுறு தளிரின் வாடிப்
பொன்னுறு மேனி கன்றிப்
போயினீர் பொறியி லாதேன்
முன்னுற விதனை யோரேன்
மூரிப்பே ரொக்க லெல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன்
பேதையேன் கவல லென்றான்.
விளக்கம் : என் உறு நிலைமை ஓரேன் என்றது தேவன் கொண்டு போந்த நிலைமையை அறிந்தும், உண்மை என்று உணராதே என்றவாறு; கொண்டு போம் இயக்கன் (சீவக. 1131) என்று முனிவர் கூறிய கூற்றைக் கந்துகன் கூறக் கேட்டும் இவர் வருந்துவர் என்று இங்ஙனங் கூறினான். பொறியிலாதேன் என்றது இருமுது குரவரையும் வழிபட்டிருக்கும் நல்வினையில்லாதேன் என்றவாறு.
இதனை என்றது களிற்றிடைக் குணமாலைக் குதவியதனை. முன்னும், ஊழ்வினை என்று விட்டான் (சீவக.1167) என்றார். இனி முன் உற என்றதனை அச்சணந்தி யாசிரியனுக்கு நேர்கின்ற பொழுதெனின் அது பொருந்தாது; என்னை? தான் மேல் வருகின்ற இதனை அறியானாதலானும் ஆசிரியன் கூற்றாலே ஓரியாண்டு அவன் இருப்பனென்றுணர்ந்து,இன்னுயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்ததில்லை (சீவக. 1154) என்று தான் கூறினமையானும் என்பது. மேனி கன்றிப் போயினீர் என்றான் மதனன்மேல் ஏவாமையை உட்கொண்டு. குணமாலையின் ஓருயிர்க்காகப் பல்லுயிரையும் வருத்தினேன் என்று நினைத்து, முன்னுற இதனை ஓரேன் என்றான். ( 170 )
-
1727. ஆக்கமுங் கேடு முற்றீ ரடிகளே யல்லிர் மேலைப்
பூக்குலா மலங்கன் மாலைப் புட்கொடி யாற்கு முண்டே
வீக்குவார் முலையி னார்போல் வெய்துயிர்த் துருகி நைய
நோக்கினீ ரென்னை யென்றா னுதியழற் குட்ட மொப்பான்.
விளக்கம் : புட்கொடியான் : இராமன். என்னை நோக்கினீர் என்றான் இராமன் காட்டிற்குச் செல்லுங் கேட்டிற்குத் தம்பியையும் கொண்டு சென்றான்; நீர் நும் கேட்டிற்கு என்னையுங் கொண்டிலீர் என்று கருதி. தேர் பண்ணிவந்து கண்டபோது மதனன்மேல் ஏவாமல் நில் எனக் குறிப்பித்தான் என்று வருந்தியே இங்ஙனங் கூறினான். ( 171 )
-
1728. குரவரைப் பேண லின்றிக்
குறிப்பிகந் தாய பாவந்
தரவந்த பயத்தி னாலித்
தாமரைப் பாத நீங்கிப்
பருவருந் துன்ப முற்றேன்
பாவியே னென்று சென்னி
திருவடி மிசையின் வைத்துச்
சிலம்பநொந் தழுதிட் டானே.
விளக்கம் : குரவர்- தாய் தந்தை தமையன் ஆசிரியன் அரசன் என்னுமிவர். குறிப்பு-அக் குரவர் குறிப்பெனக் இகந்து-கடந்து இத் தாமரைப்பாதம் என்றது சீவகன் திருவடிகளை பருவரும் துன்பம், துன்புறற்குக் காரணமான இன்னல் என்வாறு. சிலம்ப என்றது வாய்விட்டு எதிரொலி எழும்படி என்பதுபடநின்றது. சிலம்ப அழுதிட்டான் என ஓட்டுக.
-
1729. பரிந்தழு கின்ற தம்பி
பங்கய மனைய செங்கண்
பொருந்துபு துடைத்து வேண்டா
புலம்புதல் காளை யென்று
மருந்தனா ளுறையுங் கோயின்
மடுத்துடன் கொண்டு புக்கா
னருந்ததிக் கற்பி னாளை
யடிபணிந் தவனுங் கண்டான்.
(விளக்கம்.) பங்கயம் - தாமரை, பொருந்துபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; இதனைச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. காளை புலம்புதல் வேண்டா - முன்னிலைப் புறமொழி - மருந்தனாள் - கனகமாலை, கற்பினாள் - கனகமாலை. அவன் - நந்தட்டன். ( 173 )
-
1730. கொழுநனைக் குறிப்பி னாலே
குமரன்யா ரென்று நோக்கக்
கழுமிய கற்பி னாய்நின்
மைத்துன னைய னென்ன
வெழுமையும் பெறுக வின்ன
விளங்கிளைச் சுற்ற மென்றாள்
கொழுமலர்த் தடங்கட் செவ்வாய்க்
குவிமுலைக் கொம்ப னாளே.
விளக்கம் : கொழுநன் - கணவன், குமரன் என்றது இவன் என்னும் சுட்டுமாத்திரையாய் நின்றது. கழுமுதல் - நிறைதல். மைத்துனன். இளங்கிளைச் சுற்றம் என்பன கொழுந்தன் என்னும் பொருளன. ( 174 )
-
1731. குடவரை யனைய மார்பிற்
குங்கும மெழுதிக் கோல
வடவரை வைரச் சாதி
வாலொளி கலந்த பைம்பூண்
டடவரை மார்பின் மின்னத்
தம்பியோ டமிர்த முண்டான்
படவர வல்கு லாளும்
பான்மையால் விருந்து செய்தாள்.
விளக்கம் : குடவரை - அத்தகிரி. வடவரை - இமயம், வைரச்சாதி - வைரவகை; சாதி வைரம் என மாறினுமாம். அமிர்தம் - உணவு ஆகுபெயர். ( 175 )
-
1732. விருந்தவள் செய்த பின்றைத்
தம்பியுந் தானும் வேறா
விருந்துழி யென்னைக் காணா
துற்றதை யெவன்கொ லென்று
பொருந்தினார் செய்த தெல்லாம்
புரைவிடுத் துரைமோ வென்னக்
கருங்கழற் செங்கட் பைந்தார்க்
காளையீ துரைக்கின் றானே.
விளக்கம் : நந்தட்டனுடன் தோழன்மார் கூடுதற்குமுன்பு, அவர் தம்முள் கூறியவாறு நந்தட்டன் அறியானாதலின், தானும் அவரும் கூடின பின்பு பிறந்த செய்தி இவன் சீவகனுக்குக் கூறுகின்றான். இதனால், அதற்கு இது வேறுபாடாயிற்று ( 176 )
-
1733. புண்ணுமிழ் குருதி போர்த்த
பொருகளம் போன்று தோன்றி
யண்ணலங் கதிரு மத்த
மடைந்துசெவ் வான்கொ ளந்தித்
துண்ணெனக் களத்தி னீங்கித்
தொன்னகர்ப் புறத்துத் தொக்கே
யெண்ணுமின் செய்வ தென்றான்
பதுமுக னெரியும் வேலான்.
விளக்கம் : சுதஞ்சணனால் மிகுதியான மழை வந்தது. சீவகன் காணப்படாமையின் எண்ணுமின் என்றான். ( 177 )
-
1734. மின்னென மிளிரும் பைம்பூட்
புத்திசேன் வெகுண்டு வெய்ய
கன்னவி றோளி னானைக்
காண்கலே மாயி னின்னே
மன்னனை வாளி னானே
வானகங் காட்டி மூதூர்
தன்னையுஞ் சவட்டிப் போகிச்
சாமியைச் சார்து மென்றான்.
விளக்கம் : புத்திசேன் - புத்திசேனன். தோளினானை - சீவகனை. காண்கலேம் - தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று. இன்னே - இப்பொழுதே. மன்னனை - கட்டியங்காரனை. வானகம் காட்டி என்றது கொன்று என்றவாறு. சவட்டி - அழித்து. சாமியை - சீவகசாமியை. ( 178 )
-
1735. சிலையொடு திரண்ட திண்டோட்
டேவமா தத்த னென்பான்
மலையுடை யுருமிற் சீறி
மாற்றல னுயிரை யுண்ட
லிலையுடைக் கண்ணி யீர்க்கிஃ
தெளிதுநங் குருசி லுண்மை
யுலைவினோ டின்மை யாராய்ந்
தொறுப்பதே துணிமி னென்றான்.
விளக்கம் : அவன் சிறையாய் இருக்கின், இஃது ஆகாதென்றான், தேவமாதத்தன், உலோகமா பாலன் (சீவக. 395) போற் கொள்க. ( 179 )
-
1736. பவ்வத்துப் பிறந்த வெய்ய
பருதிபோற் றிறலி னாற்குத்
தெவ்வரைக் கிழங்கி னோடுந்
தின்றுநீ சொன்ன வாறே
யெவ்வத்தைத் தணித்து மென்றான்
சீதத்த னென்ன லோடு
மவ்வல மணந்த தண்டார்ப்
பதுமுக னிதனைச் சொன்னான்.
விளக்கம் : ஞாயிறு இருளை நீக்குமாறு போலத் தன்னை சூழ்ந்த பகையை நீக்குதற்குரியன், அவற்குத் தீங்கு வாரா தென்றான். மக்கள் நூற்றுவரையுஞ் சேரக் கோறற்குக் கிழங்கினோடும் என்றான். மவ்வல் அம் மணந்த : அம் சாரியை. ( 180 )
-
1737. நம்பிநந் தட்டன் கேட்க
நங்கட்குக் குரவ ருள்ளார்
தம்பரி வகற்றி யோம்பி
நீர்க்கடன் மரபு தாங்கிக்
கம்பஞ்செய் பரிவு நீங்கிக்
கற்பிப்பார்க் குவர்த்துச் சொல்லா
ரிம்பரிவ் வுலக மொப்பாய்க்
கென்னையா னுரைப்ப தென்றான்.
விளக்கம் : என்னை : என் : எவன் என்பதில் திரிபு. ஐ : சாரியை. நம்பியாகிய நந்தட்டன் என்க. நந்தட்டன் : விளி. நங்கட்கு - நமக்கு. குரவராயுள்ளார் என்றது கந்துகனையும் சுநந்தையையும், கம்பம் - நடுக்கம். இம்பர் - இவ்விடத்தே. என்னையான் உரைப்பது என்றது. உனக்கு யான் கூறுதல் மிகை என்பதுபட நின்றது. ( 181 )
-
1738. ஓம்படை சாற்றற் பால
துள்ளவர்க் காகு மன்றே
யாம்புடை யென்க ணில்லை
யங்கையென் கண்க ளாகத்
தேம்படு தாரி னீர்க்குஞ்
செல்வற்குஞ் செய்வ செய்தேன்
காம்படு காட்டுத் தீயிற்
கனன்றுட னெழுக வென்றேன்.
விளக்கம் : அழுதது இழவு என்னும் மெய்ப்பாடு. தாரினீர்க்கு எனவே இருமுது குரவர் முதலிய சுற்றத்தினர் எல்லோரையும் அடக்கிக் கூறினா னாயிற்று. ( 182 )
-
1739. கோட்டிளங் குழவித் திங்க
ளிரண்டன்ன வெயிற்றுக் கோளே
வேட்டவோர் சிங்கஞ் சூழ்ந்த
வேங்கையி னினத்தின் வெய்ய
வாட்படை யெழுந்து வாழ்க
சீவக னென்னு மாங்கட்
பாட்டினை யொருவ னெங்கள்
பரிவறப் பாடி னானே.
விளக்கம் : சீவகன் சிங்கமும் மற்றையோர் புலித்திரளுமாகக் கொண்டு சிங்கத்தின் ஏதந்தீர்க்க எழுந்த புலித்திரள் என்றான். ( 183 )
-
1740. வருவர்நங் கேள்வ ரின்னே
வாணுதற் பசலை தீர
வுருகிநைந் துடன்று முன்கை
வளையுக மெலிய வேண்டா
வருவிமும் மதத்த யானை
யதிர்ந்துழிக் காரென் றெண்ணித்
தெரிவில பேதை முல்லை
பூத்தன தெளியி தென்றான்.
விளக்கம் : இது, பருவம் அன்று என்று தலைவியை ஆற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்று ;நிம் பெயர்த்துறைதல், வரைநிலை, உரைத்தல் - கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய (தொல். கற்பு. 28) என்னும் கற்பியற் சூத்திரத்தானும், அரக்கத்தன்ன....தேரே என்னும் (14) அகப்பாட்டில், யாங்கா குவங்கொல் பாணவென்ற - மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன் - செவ்வழி நல்யாழ் இசையினென்பையெனக் - கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந்நிறுத் - தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே என்பதனானுங் கொள்க. எனவே, சீவகன் இப்பொழுதுவாரான் என்பதூஉம், யாம் சென்று பின்பு கொண்டு வருவோம் என்பதூஉம், இதற்குக் கருத்தென்று தேறிப் போர்த்தொழில் தவிர்தல் பயனாம். இனி என்றாள் என்று பாடம் ஓதித் தோழி ஆற்றுவித்தாள் என்றல் ஈண்டைக்குப் பொருந்தாது. இன்னே வருவர் எனக் கூட்டி, இப்பொழுதே வருவர் என்றால், இவனும் இப்பொழுதே வருவன் என்பது கருத்தாம் ஆதலின் பொருந்தாது. அருவி மும்மதத்த - அருவி போன்ற மூன்று மதத்தையுடைய. இஃது உவமைத்தொகை. ( 184 )
-
1741. பாட்டினைக் கேட்ட லோடும்
பழம்பகை நட்பு மாமே
யோட்டியுங் கோறு மன்றே
நம்பிதா னுண்மை பெற்றா
னாட்டிடம் பரந்து போகி
நாடுது நாங்க ளென்னா
வீட்டமும் வேறு மாகி
யிலைப்புரை கிளைத்திட் டேமே.
விளக்கம் : ஆமே : ஏ : எதிர்மறை. நாடு : நானிலத்திற்கும் பொதுப் பெயர். இலைப்புரை கிளைத்தல் பழம்பகை நட்பாதல் இல் என்பவை பழமொழிகள். ( 185 )
-
1742. மணிபொதி துகிலிற் றோன்று
மஞ்சுசூழ் வரைக ணாடி
யணிநகர் யான்சென் றெய்தி
மாலைதன் மனையைச் சேர்ந்தேன்
றுணைமலர்க் காந்த ளூழ்த்துச்
சொரிவபோற் றோன்றி முன்கை
யணிவளை நலத்தோ டேக
வங்ஙன மிருந்து நைவாள்.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். காந்தள் மலர் வளைக்கு உவமை வளையுடைந்தன்ன வள்ளிதழ்க் காந்தள் (மலைபடு. 159) என வருதல் காண்க. ( 186 )
-
1743. என்னைக்கண் டடிசி லாக்க
வையர்க்கென் றவல நீங்கப்
பொன்னைக்கண் டனைய சாய
லவர்புரிந் தடிசி லேந்தத்
துன்னிநோ யுற்ற மஞ்ஞைத்
தோற்றம்போ லிருந்த நங்கை
பின்னைநாட் குவளை நீர்வீழ்
பெற்றிய கண்ண ளாகி.
விளக்கம் : பின்னை நாட்குவளை எனவே, செவ்வியழிந்த குவளையா யிற்று. பின்னை ஐ : அசை. பின்னாள் - மற்றை நாள், என்று - என்ன : எச்சத்திரிபு. ஆக்குக என்பது, ஆக்க என விகாரப்பட்டது. இப்பாட்டுங் குளகம். ( 187 )
-
1744. அடிகளை யின்றி நீரே
யுண்ணவும் வல்லீ ரானீர்
கடியிர்நீ ரைய னீரே
யெனக்கசிந் துருகிக் காய்பொற்
கொடிதுக ளார்ந்த வண்ணங்
குழைந்துமா நிலத்து வீழ்ந்த
பெடைமயிற் சாய லாடன்
பேதுகண் டாங்கு மீண்டேன்.
விளக்கம் : பெடைமயில் என்றார் பொலிவு கெடுதலின்.அடிகளை என்றது, சீவகனை, கடியிர் - கொடியீர் , சாயலாள் : குணமாலை. பேது - துன்பம். ( 188 )
-
1745. செல்வனை யின்று நாடிச்
சேவடி தொழுத லொன்றோ
வல்லதிவ் வுடம்பு நீங்க
வேற்றுல கடைத லொன்றோ
வெல்லையிவ் விரண்டி னொன்றை
யிப்பகன் முடிப்ப லென்னா
மல்லிகைக் கோதை யைம்பான்
மலைமகண் மனையைச் சேர்ந்தேன்.
விளக்கம் : செல்வனை - சீவகனை, வேற்றுலகடைதல் - சாதல். முடிப்பல் - தன்மை ஒருமை வினைமுற்று. மலைமகள் - காந்தருவதத்தை. ( 189 )
-
1746. மணியொலி வீணை பண்ணி
மாண்டகோ றடவ மாத
ரணிமுலைத் தடத்தி னொற்றி
வெப்பராற் றட்ப மாற்றிப்
பிணைமலர்க் கோதை கீதம்
பாடயான் பெரிதும் பேதுற்
றிணைமலர்க் கண்ணிக் கொவ்வா
விளிவரு கிளவி சொன்னேன்.
விளக்கம் : மாண்ட கோல் - மாட்சிமையுடைய யாழ் நரம்பு. தடவ - வருட. மாதர் அவள் எனச் சுட்டு மாத்திரையாய் நின்றது. வெப்பர் - வெப்பம். தட்பம் - குளிர்ச்சி, ஈண்டுத் தளர்ச்சி, என்பது படநின்றது. கீதம் - இசை. இளிவரு கிளவி என்றது. அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்று கூறியதனை - (1706). ( 190 )
-
1747. சொல்லிய வென்னை நோக்கித்
துளங்கனும் மடிகள் பாதம்
புல்லயான் புணர்ப்ப லென்று
பொழுதுபோய்ப் பட்ட பின்றை
யெல்லிருள் விஞ்சை யோதி
யிவ்வழி யிடுவித் திட்டாள்
சொல்லுமி னடிக ணீரும்
போந்தவா றெனக்கு மென்றான்.
விளக்கம் : காளையீதுரைக்கின்றவன் (சீவக. 1732) இடுவித் திட்டாள் என்றுரைத்தான் என முடிக்க. ( 191 )
-
1748. தாதையா ருவப்பச் செய்வான்
றாழ்கச்சிற் பிணிப்புண் டைய
போதரா நின்ற போழ்திற்
போர்ப்புலிக் குழாத்திற் சீறிக்
காதனஞ் சுற்ற மெல்லாங்
கையிலங் கெஃக மேந்திச்
சாதலே புரிந்து தோன்றுந்
தன்மையந் நகரிற் கண்டேன்.
விளக்கம் : இங்கும் நச்சினார்க்கினியர், கச்சின் : இன் : உவமப் பொரு. எனக் கொண்டு, கச்சிற் பிணித்தாற் போலச் சொல்லாற் பிணிக்கப்பட்டு என்று பொருள் கூறுவர். ( 192 )
-
1749. கண்டபி னின்னைக் காண்பேன்
கருவரை புலம்பிப் பல்கால்
விண்டுவு முடைய வாலின்
வெடித்துராய் வெகுண்டு நோக்கா
வெண்டிசை யோரு மெள்கக்
குஞ்சர மிரியப் பாயு
மொண்டிறற் சிங்க மன்ன
கதழொளி யுடற்சி கண்டேன்.
விளக்கம் : பழிவந்து மூடுமென் றெள்குதும் (சிற். 92) என்றாற் போல எள்க என்பது அஞ்ச என்னும் பொருளில் வந்தது. அஃக எனவும் பாடம். முன்னர் அவன், சிங்கத்தை யின்றி எழுந்தேம் (சீவக. 1731) என்றதற்கு, நீ அப் புலித்திரளுக்குச் சிங்கம் என்றான் என்க. விண்டுவும் என வகரவுடம்படுமெய் பெற்றது விகாரம். விண்டும் என வருதல் வேண்டும். ( 193 )
-
1750. சினந்தலைப் பெருக்கித் தீக்கோ
ளுறுப்பினைச் சுருக்கித் தீப்போ
லனன்றுநில் லாத கண்ணா
னிறுத்தின செவியிற் றாகி
முனம்புக வடக்கிப் பின்போந்
திருந்துபாய் வான மைந்த
வினந்தலைப் புலியோ டொக்குந்
தோழர்நின் னிடத்திற் கண்டேன்.
விளக்கம் : தீக்கோள் உறுப்பு - தீய கோட்பாட்டினையுடைய உறுப்புக்கள். நில்லாத என்பது சுழற்சியுடைய என்னும் பொருள்பட நின்றது. கண்ணான் என்புழி ஆன் உருபு ஒடு உருபின் பொருட்டு. செவியிற்று - செவியினையுடைத்து . இனம் - கூட்டம். ( 194 )
-
1751. கூடநீர் நின்ற பெற்றி
கண்டிப்பா னோக்கு வேற்கொர்
கேடகம் வாளொ டேந்திக்
கெடுகவிந் நகர மென்னா
மாடத்தி னுச்சி நின்ற
மலைமக டன்மை கண்டே
யாடவர்க் குழுவை யொப்பா
யஞ்சினே னதன்க ணென்றான்.
விளக்கம் : ஆடவர்க் குழுவை ஒப்பாய். ஏகதேச உருவகம். பெற்றி - தன்மை. மாடத்தின் உச்சி மலைமகள் ஏந்தி நின்ற தன்மை கண்டே என மாறுக. உழுவை - புலி. அதன்கண் - அந்நிலையிடத்து. ( 195 )
-
1752. பெண்ணிடர் விடுப்ப வாழ்விற்
சாதலே பெரிது நன்றென்
றெண்ணினே னமர்கள் வீயு
மியல்பினா னெருங்கப் பட்டுக்
கண்ணிநா னியக்கன் றன்னைச்
சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
யண்ணல்வந் தழுங்கத் தோன்றி
யாங்கென்னைக் கொண்டு போந்தான்.
விளக்கம் : வாமணத் தொழுவின் முற்றி - மீளிமை செய்யின், (சீவக. 658) என்ற நிலையைவிட்டு நினைத்தான். ( 196 )
-
1753. மந்திர மூன்றுந் தந்து
வானவன் விடுப்பச் செல்வேற்
கிந்திர திருவிற் சூழ்ந்த
வினமழைக் குழாத்தின் வேழங்
கொந்தழற் காட்டுத் தீயால்
வளைப்புண்ட குழாத்தை நோக்கிச்
சிந்தித்துக் கவன்று நிற்பத்
திருமழை பொழிந்த தன்றே.
விளக்கம் : குழாத்தை நோக்கிச் செல்வேற்கு எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். மந்திரமும் பிறவும் உண்மையின், உம்மை, இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் (தொல் - கிளவி. 33) உம்மையன்றி மூன்று மந்திரமும் வழி முதலியனவும் என எச்சவும்மை செல்வேற்குக் கவன்று என்க. எண்ணிறந்த இனக் களிற்றின் துயரை நீக்குதற்குரிய யான் நீக்காதொழியின், செய்தல், செய்வித்தல், உடன்பாடு என்னும் மூவகைப்பாவத்தினும் உடன்பாடாகிய பாவம் எய்தி, நெருநலிலே சுற்றமும் யானும் உற்ற துன்பமும் போல் இதுவும் பின்பு வருமென்று எனக்குக் கவன்று என்றான். முன்பு, வேழப் பேரினந் தங்கிய காடு (சீவக. 1179) என்றார்.சீவகன் மற்றும் வழியில் நிகழ்ந்தன எல்லாம் கூறாது. இதனையே கூறியது என்னையெனின், யாண்டு நேரெல்லை (சீவக. 393) என்ற மொழி நந்தட்டன் அறியானாதலின். இன்னும் இராசமாபுரத்துச் சென்றாலும் இத் துன்பம் உளதாமோ என்று கருதினும் அது கருதாதபடி, மற்றை நாளே அத் தீவினையுள்ளது நீங்கவேண்டும். பேரறஞ் செய்தேன் என்றான் என்க. இனிச் செல்வேற்கு மழை பொழிந்ததெனக் கூட்டி, தேவன், பாம்பும் அல்லவும் - கடுந்திறல் நோய்களுங் கெடுக்கும் (சீவக. 1218) என்ற மந்திரத்தைக் கூறலின், அவன் கூறிய மந்திரமே இம் மழையைப் பெய்வித்த தென்றுமாம். இதற்கு, நெருநற் சுற்றமுற்ற துயரை இவையும் உற்றன என்று கவன்று என்க இம்மந்திரங்களின் பெருமை கூறியது இனி நமக்கு ஏதம் இன்று என அறிவித்தது. ( 197 )
-
1754. வெல்களிற் றச்ச நீக்கி
விரைவொடு வனத்தி னேகிப்
பல்லவ தேய நண்ணித்
தனபதி யென்னு மன்ன
னல்வனப் புடைய தேவி
திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன்மற் றுலோக பாலன்
றிருமகள் பதுமை யென்பாள்.
விளக்கம் : வெல்களிறு : வினைத்தொகை. மன்னனும் திலோத்தமையும் பெற்ற என்க. நம்பியாகிய செல்வன் என்க. திருமகள் என்றது முறைப் பெயர் அடையடுத்தவாறு. ( 198 )
-
1755. அரிகுரற் கோழி நாமத்
தரவவட் கடித்த தாகத்
திருவிழை யவளைத் தீர்த்தேன்
றீர்விலா நண்பு வேண்டிப்
பொருகளி யானை மன்னன்
புனையிழை யவளைத் தந்தா
னிருமதி கழிந்த பின்றை
யிடையிராப் பொழுதிற் போந்தேன்.
விளக்கம் : களிற்றின் அச்சம் நீக்கியதனால் அவன் சுற்றமாகிய பதுமைக்கும் அச்சம் இன்றெனக் கருதினான். ( 199 )
-
1756. வாவிப்புண் ணடையி னாளை
வஞ்சித்துத் தக்க நாட்டை
மேவியான் காண லுற்றுச்
சார்தலு மிப்ப ருள்ளான்
றூவிப்பொன் மாட மூதூர்ச்
சுபத்திர னென்னைக் கண்டே
யாவிக்க ணறிவு போல
வளவளா யன்பு பட்டான்.
விளக்கம் : வணிகரில் இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என முப்பிரிவினர் உண்டு. தூவிப் பொன் என்பதனைத் தூவி அனைய பொன் என்றும் கொள்க. தூவி - பறவையின் மெல்லிய சிறகு. ( 200 )
-
1757. பண்ணமை தேரி னேறி
யவனொடியா னிருந்து போகி
விண்ணுயர் செம்பொன் மாடத்
திழிந்தவண் விளங்கப் புக்கேன்
வெண்ணிலா முத்தஞ் சூழ்ந்த
வெம்முலைத் தடங்க ணாளை
மண்ணெலாஞ் செல்ல நின்ற
மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்.
விளக்கம் : அவண் விளங்க - கேமசரி நாணுதலின், அவள் மனை விளங்கியது. மகிழ்ச்சியின் : இன் : ஒப்பு. ( 201 )
-
1758. அவ்வழி யிரண்டு திங்கள்
கழிந்தபி னவளி னீங்கி
யிவ்வழி நாடு காண்பான்
வருதலு மிறைவன் கண்டே
செவ்வழி பாட ராகிச்
சிலைத்தொழில் சிறுவர் கற்ப
மைவழி நெடுங்க ணாளைத்
தந்தனன் மதலை யென்றான்.
விளக்கம் : ஏனைப் படைக்கலங்களின் தொழிலும், யானை முதலிய ஏற்றுத் தொழிலும் கற்றாரேனும் அவை கூறாது விற்றொழிலே கூறினார், அதன் சிறப்பு நோக்கி. ( 202 )
-
1759. தானுழந் துற்ற வெல்லாந்
தம்பியை யுணரக் கூறித்
தேனுழந் தரற்றுந் தாரான்
குரவரைச் சிந்தித் தாற்கு
வானிழிந் தாங்குக் கண்ணீர்
மார்பக நனைப்பக் கையா
லூனுமிழ்ந் திலங்கும் வேலா
னொற்றிமற் றிதனைச் சொன்னான்.
விளக்கம் : இனி, கூறி என்பதைக் கூற, எனக்கொண்டு; சீவகன் கூற இதனைக் குரவருங் கேட்கப் பெற்றிலமேயென்று சிந்தித்த நந்தட்டனுக்குக் கண்ணீர் மார்பிடத்தை நனைப்ப என்றுமாம். ( 203 )
-
1760. திண்பொரு ளெய்த லாகுந்
தெவ்வரைச் செகுக்க லாகு
நண்பொடு பெண்டிர் மக்கள்
யாவையு நண்ண லாகு
மொண்பொரு ளாவ தையா
வுடன்பிறப் பாக்க லாகா
வெம்பியை யீங்குப் பெற்றே
னென்னெனக் கரிய தென்றான்.
விளக்கம் : எம்பி : முன்னிலைப் படர்க்கை. திண்பொருள் - அறத்தாறு நின்று ஈட்டலான் நிலைத்திருக்கும் தன்மையுடைய பொருள். தெவ்வர் - பகைவர். செகுத்தல் - அழித்தல். யாவையும் என்றது பிற பொருள் பலவற்றையும் என்பதுபட நின்றது. எம்பி - என் தம்பி, அரியதென் என்னும் வினா அரியதொன்றுமில்லை என்பதனை வற்புறுத்து நின்றது. நின்னைப் பெற்றேன் என முன்னிலையாகக் கூற வேண்டிய விடத்து எம்பியை எனப் படர்க்கையாகக் கூறினர். இஃது இடவழுவமைதி. ( 204 )
வேறு
-
1761. தேனிற் பாலெனச் செல்வன் றம்பியோ
டானி யம்பல கழிய வாயிடை
வேனிற் குன்றெனத் தோழர் வெந்துமெய்
யூனி னைகின்றார் செய்வ துன்னினார்.
விளக்கம் : ஊனின் : இன் : அசை. தேனிற் பால் என்றது தேனும் பாலும் கலந்தாற் போன்று என்றவாறு. ஒன்றன் இனிமைக்கு மற்றொன்று ஆக்கமாதல் பற்றி இங்ஙனம் உவமை கூறினர். ஆனியம் - நாள். வேனிற்குன்று - கோடைக் காலத்து மலை. தோழர் - பதுமுகன் முதலியோர். ( 205 )
-
1762. நாடு மின்னினி நாங்கள் செய்வதென்
றீடி னாலிருந் தெண்ணி நால்வரு
மாடு மஞ்ஞையஞ் சாயற் றத்தைமெய்
வாட லொன்றிலள் வஞ்சமாங் கொலோ.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம் : நால்வர் : பதுமுகன், புத்திசேனன், சீதத்தன், தேவதத்தன், கொல். ஐயம். நாங்கள் : கள் : பகுதிப் பொருள் விகுதி. ( 206 )
-
1763. கள்ள முண்டெனிற் காண்டு நாமென
மௌள வெய்தினார் வினவக் கூறினாள்
வள்ளற் குற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண்மலை வேந்தன் பாவையே.
விளக்கம் : மௌள - மெல்ல, எய்தினார் : முற்றெச்சம். வேந்தன் பாவை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தை. வள்ளற்கு - சீவகனுக்கு. வண்ணம் - தன்மை. ( 207 )
-
1764. மற்ற வள்சொலக் கேட்ட மைந்தர்க
ளிற்ற தம்முயி ரியல்பிற் போத்தவட்
பெற்ற மாந்தரிற் பெரிது மெய்குளிர்ந்
தற்ற மன்மையி னவல நீங்கினார்.
விளக்கம் : அவள் : காந்தருவதத்தை. மைந்தர்கள் - பதுமுகன் முதலாயினோர், பேர்த்து - மீட்டு. மாந்தரின் - மனிதரைப்போல. அற்றம் - பொய். ( 208 )
-
1765. திருவின் சாயறன் சீற டிச்சிலம்
புருவக் குஞ்சிவா யுறுத்தி யொய்யென
வுருகு முள்ளத்தி னுடம்பு வீங்கினார்
பருகு காதலிற் பாடி யாடினார்.
விளக்கம் : திருவின் : இன் : பொரு. சிலம்பு : ஆகுபெயர்; அடியை நோக்கி வணங்கி என்று கொள்க. ( 209 )
வேறு
-
1766. பைத்தர வத்திரை சிந்திய பல்கதிர்
மொய்த்தெரி நித்திலம் வைத்தன பல்லின
ளித்திரு வின்னுரு வந்தொழு தார்தம
தெத்துய ருங்கெடு மென்றின சொன்னார்.
விளக்கம் : அரவத்திரை பைத்துச் சிந்திய என மாறுக. அரவம் - ஒலி. திரை - அலை. பைத்து - பொங்கி. நித்திலம் - முத்து. இத்திரு என்றது - காந்தருவதத்தையை. இன - இன்ன. ( 210 )
-
1767. ஐயனை யாமவ ணெய்துவ மாயிழை
நொய்தினு ரைபொரு ளுண்டெனி னொய்தென
மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக்
கைவளர் கோதை கரந்தெழுத் திட்டாள்.
விளக்கம் : மை-மஷிஎன்பர் நச்சினார்க்கினியர். அவ்வெழுத்தறிந்தாலும் பிறர் வாசியாதபடி எழுதினாள். ( 211 )
-
1768. ஆங்குருக் காரரக் கிட்டதன் மீமிசைப்
பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத்
தேங்குழ லாடொழு தாடிசை செல்கெனப்
பாங்கரங் குப்படர் குற்றன ரன்றே.
விளக்கம் : குரவரை நோக்கச் சில பிள்ளைகள் நிற்கவேண்டுமென்று நபுல விபுலர் நின்றனர்; மற்றையோர் புறப்பட்டனர். ( 212 )
-
1769. வேந்திரி யக்கணை வித்திய வெஞ்சிலைக்
காய்ந்திரிக் கும்புரு வக்கருங் கண்ணிய
ராய்ந்தரிக் குந்நற வம்மலர் மாலையை
வேய்ந்தரிக் கும்மிஞி றார்ப்ப விடுத்தாள்.
விளக்கம் : தத்தை தன் தலையை அசைத்துப் போம் என்றலின் மிஞிறு ஆர்த்தது என்க. (213)
வேறு
-
1770. அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே
நிலங்கொண் டோங்கின நிரம்பின புகர்சுழி யுடைய
வுலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல்வ
விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா.
விளக்கம் : இதுமுதல் மூன்று பாட்டுகள் குதிரைப்படையின் இயல்பைத் தெரிவிப்பன. மதி - திங்கள். ஐப்பசி -அசுவதிமீன்.நிலங்கொண்டென்றது - பிறந்து என்றவாறு. நல்லிலக்கணமாகிய புகரையும் சுழியையும் உடைய என்க. உலம்புதல் - முழங்குதல், விலங்கு - குறுக்கே. தம்மேலிருந்து விடுகணை என்க. ( 214 )
-
1771. அள்ளற் சேறரு மணல்புன லருவரைப் படினு
முள்ளம் போற்செல்வ வுரனசை வில்லன வமருட்
கொள்ளி மண்டிலம் போற்கொடி படத்திரிந் திடுவ
வெள்ளி மால்வரைத் தாழ்வதின் மேம்படப் பிறந்த
விளக்கம் : அள்ளற்சேறு : இருபெயரொட்டு. அருவரை - ஏறுதற் கரிய மலை. தம்மேலேறிய வீரர் உள்ளம்போல் என்க. உரன் - வலிமை. கொள்ளி மண்டிலம் - எரிகொள்ளியைச் சுற்றுங்காற் றோன்றும் ஒளி வட்டம். கொடி - வரிசை, வரைத்தாழ்வு - மலைச்சரிவு. ( 215 )
-
1772. ஈரைஞ் ஞாற்றினை யிருபதின் முரணிய தொகைய
வீர ரேறின விளங்கொளிப் பக்கரை யமைந்த
தாரும் புட்டிலு மரற்றுவ சாமரை யணிந்த
வோருங் கூடின மள்ளரு மொலித்தெழுந் தனரே.
விளக்கம் : ஈரைஞ்ஞாற்றினை : நகர ஞகரப்போலி. ஆயிரத்தை இருபதால் உறழ்ந்த (பெருக்கிய) தொகை; அஃதாவது இருபதினாயிரம். பக்கரை - கலணை என்னும் உறுப்பு. புட்டில் - கெச்சை. ஓரும் : அசை. ( 216 )
வேறு
-
1773. வடித்த போத்தொடு வன்செல லத்திரி
கடுத்த வொட்டகங் காற்செல்வ யாவையு
நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ
வெடுத்த பண்ட மியைந்துட னென்பவே.
விளக்கம் : நொடிப்பின் : இன் : அசை. என்ப, ஏ : அசைகள். வடித்த - பண்ணுறுத்திய. போத்து - எருது. அத்திரி - கோவேறு கழுதை. கால்செல்வ - காலாற் செல்வனவாகிய ஊர்திகள், வில் - ஓரளவு. ( 217 )
-
1774. ஞாலம் விற்பன பைங்கிளி நன்னிறத்
தாலு மாபவ ளக்குளம் பார்ந்தன
காலி னொய்யன கண்வெளவு காட்சிய
நால்குப் பண்ணினர் நால்வரு மேறினார்.
விளக்கம் : நால்கு : பெயர்த்திரிசொல்; பால்புரை புரவி நால் குடன் பூட்டி (பொருந. 165) என்றார் பிறரும். ஞாலம் - உலகம், விற்றல் - விலையாகக் கோடல், ஆலுமா - ஆடும் குதிரை, ( 218 )
-
1775. நாளும் புள்ளு நயத்தகு நன்னிலைக்
கோளு மோரையுங் கொண்ட நிமித்தமு
மாளு மாந்தரி னாய்ந்துகொண் டாயிடைத்
தாளி னூக்குபு சாத்தொ டெழுந்தவே.
விளக்கம் : புறப்பட்டு நின்று நாட்கேட்டனர் போக்கின் விரைவால். புள் - பறவையான் அறியும் நிமித்தம். ஆளும் மாந்தரின் - இவற்றை மேற்கொள்ளும் நிமித்திகர் போன்று. சாத்து - வணிகர் கூட்டம் : உயர் திணைவிரவி மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது. ( 219 )
-
1776. பறையுஞ் சங்கும் பரந்தொலித் தார்த்தெழ
வுறைகொள் வாளினோ டொண்சுடர் வேன்மினச்
சிறைய ழிந்ததொர் செம்புனல் போன்றவ
ணறைக டற்படை யார்ப்பொ டெழுந்தவே.
விளக்கம் : பறை பரந்து ஒலித்து எழ சங்கு ஆர்த்து எழ என இயைக்க. மின்ன - மின என இடை குறைந்து நின்றது. செம்புனல் - புதுநீர். அறைகடல் : வினைத்தொகை. ( 220 )
-
1777. காய்த்த செந்நெலின் றாழ்கதிர் நெற்றிமேற்
பூத்த முல்லையின் போது பொழிந்துக
நீத்த நீர்வய லன்னமு நாரையு
மேத்தல் சான்முரு டார்ப்ப விரிந்தவே.
விளக்கம் : இது முல்லையும் மருதமும் மயங்கின நிலமயக்கம். ( 221 )
-
1778. அளகு சேவலொ டாடியங் காய்க்குலை
மிளகு வார்கொடி யூசல் விருப்புறூஉஞ்
சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சர
மிளகு காடிள கப்பரி கொண்டவே.
விளக்கம் : ஊசலை விரும்புகின்ற காடு, யானைகளையுடைய தழைத்த காடு எனக் கூட்டுக. இளகு காடு - தழைத்த காடு காடு அசையும்படி யானை அவ்வோசைகளைக் கேட்டுச் செலவு கொண்டன என்றுங் கூறலா மென்பர் நச்சினார்க்கினியர். அளகு - காட்டுக் கோழியுமாம்; கோழி கூகை ஆயிரண்டல்லவை - சூழுங்காலை அளகெனல் அமையா (தொல். மரபு. 55) ( 222 )
-
1779. அருவிக் குன்றமு மைவனச் சாரலுங்
குருவி யார்த்தெழு கொய்புனக் கானமுந்
திருவிற் றீர்ந்தவர் தேயமுந் தோந்துபோய்
மருவி மாதவர் பள்ளியுள் விட்டதே
விளக்கம் : ஐவனம் - மலைநெல். கொய்புனம் : வினைத்தொகை. திரு - செல்வம், தேயம் - நாடு, தேர்ந்து - ஆராய்ந்து. விட்டது - தங்கியது. ( 223 )
வேறு
-
1780. வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி
விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக்
கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன்
றுண்டுபொழி லிமையவர்க ளுலகமுறு வதுவே.
விளக்கம் : துயில் கொள்ளப்பட்டு ஆலப்பட்டு அகவப்பட்டு பொதுளப்பட்டு வேயப்பட்டு; தாழ்ந்து ஆர்ந்து ஒரு பொழில் உண்டு என்க. உறுவது - ஒப்பது. ( 224 )
-
1781. காவிகழு நீர்குவளை யாம்பல்கடிக் கமலந்
தூவிமட நாரைதுணை யன்னம்பயின் முதுமீன்
மேவியுறை வண்டினொடு மல்கிவிழை தகைய
வாவியொடு காவினிடை மாந்தர்பதி கொண்டார்.
விளக்கம் : காவி - நீலோற்பல மலர். கடிக்கமலம் - மணமுடைய தாமரை மலர். தூவி - சிறகு. பயின்முதுமீன் - பயில்கின்ற முதுமையாகிய மீன் என விவரிக்க. வினைத்தொகை பின்னது பண்புத்தொகை. மல்கி - நிறைந்து. தகைய - தன்மையையுடைய. பதிகொள்ளுதல் - தங்குதல். ( 225 )
-
1782. ஐயருறை பள்ளியிட மாண்டிழகர் காணச்
செய்கழகர் தாரரவ ரெங்கந்திரி கின்றார்
கொய்தகைய பூம்பொதும்பர்க் குளிருமரப் பலகைச்
செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார்.
விளக்கம் : விசையையைக் கண்டனர். குளிரும் : திசைச் சொல். மலர்ப்பலகை என்றும் பாடம்.( 226 )
-
1783. அந்நுண்டுகிற் கல்லரத்த மல்குலது வருத்தச்
செந்நுண்டுகி லுத்தரியம் புதைந்துசுவல் வருத்த
மைந்நுண்குழற் சிறுவன்மனம் வருத்தவடி வேற்கண்
கைந்நொண்டன கவர்ச்சிநனி வருத்தக்கலுழ்ந் தாற்றாள்.
விளக்கம் : அரத்தம் போலும் நிறமுடைய கல் அல்குலது என்புழி அது பகுதிப் பொருளது எனினுமாம். உத்தரியம் - மேலாடை. சுவல் - தோள். மை - கருமை. சிறுவன் : சீவகன். கை - ஒழுக்கம். கவற்சி - கவலை, கலுழ்ந்து - அழுது. ( 227 )
-
1784. மாசொடுமி டைந்துமணி நூற்றனைய வைம்பால்
பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ
வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித்
தோசமறத் துதிகண்மனத் தோதித்தொழு திருந்தாள்.
விளக்கம் : கருத்து சீவகன் வாழ்வே கருதுதலின் மறைந்த வழியில் இருந்தாள். மணி - நீலமணி, ஐம்பால் - கூந்தல். பூசுதல் - கழுவுதல், புறம் - முதுகு. மறைந்தவழி வாசமலர் வாமனடிக்கேற்றி என மாறுக. வாமன் - அருகக்கடவுள். தோசம் - குற்றம். (228 )
-
1785. சிந்திப்பலென் சிறுவன்றிற மினியென்றெழி னெடுங்கண்
வந்துபனி வார்ந்துமுலைக் கலிங்கமது நனைப்ப
வந்திலிருந் தாளவளுக் கடைந்துமன நடுங்கி
வந்தித்திருந் தார்மகிழ்ந்து காதன்மிக மாதோ.
விளக்கம் : இவர்களைக் கண்டு அழுகை மாற்றினாள். சிந்திப்பல் : தன்மை ஒருமை வினைமுற்று. சிறுவன் - பிள்ளை; சீவகன். முல்லைக்கலிங்கம் - முலையின் மேற்றுகில். அந்தில் - அவ்விடத்தே. அவளுக்குக் காதன்மிக அடைந்து என இயைக்க. அவள் : விசயை. ( 229 )
-
1786. வரையுடுத்த பள்ளியிட மாகவதின் மேயோள்
விரையுடுத்த போதுறையும் வேனெடுங்க ணாள்கொ
லுரையுடுத்த நாவுறையு மொண்ணுதல்கொ லன்றித்
திரையுடுத்த தேமொழிகொ லென்றுதெரி கல்லார்.
விளக்கம் : உடுத்த - சூழ்ந்த. இடம் - உறையுமிடம். மேயோள் - இருப்பவள், விரை - மணம், போதுறையும் நெடுங்கணாள் : திருமகள். நாவுறையும் ஒண்ணுதல் : கலைமகள். திரையுடுத்த தேமொழி - நிலமகள். ( 230 )
-
1787. மங்கலம டிந்ததிரு மாமகளை யொப்பீ
ரிங்குவர வென்னைகுலம் யாதடிகட் கென்ன
வெங்குலமு மெம்வரவும் வேண்டிலெளி தன்றே
நுங்குலமு நும்வரவும் நீருரைமி னென்றாள்.
விளக்கம் : அடிகள் என்னுஞ் சொல் பெண்பால் முன்னிலையாயும் வருதற்கு இந் நூலிலேயே 1792, 1884, 1909 ஆம் செய்யுட்களிலும், ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் (சிலப். 14 : 24) என்று வருதல் காண்க. மங்கலமடிதலாவது - மங்கலநாண் இல்லையாதல். இஃது அவள் கைம்மைக்கோலத்தினை உணர்த்தி நின்றது. ( 231 )
-
1788. மோட்டுமுது நீர்மலங்கு மொய்த்தவிள வாளை
பூட்டுசிலை யிறவினொடு பொருதுதுயின் மடியு
மீட்டமுடை யவர்களுறை யிராசபுர மென்னு
நாட்டமுடை நகரமெம தாகுமுறை பதியே
விளக்கம் : பொருது துயிலும் இராசமாபுரம், உடையவர்கள் இராசமாபுரம் எனக் கூட்டுக. மோடு - பெருமை, மலங்கு - ஒருவகை மீன். இறவு - இறாமீன், இதற்கு நாண் பூட்டப்பட்ட வில் உவமை. துயின்மடியும் : ஒருசொல். இராசமாபுரம் - இராசபுரம் என நின்றது. நாட்டம் - அழகு. ( 232 )
-
1789. பொன்னுடைய மார்பிற்புகழ் மந்திரிபொ லந்தார்த்
தன்னுடைய நுண்ணுணர்விற் சாகரற்குத் தக்காள்
கொன்னெடிய வாட்கட்குரு தத்தைசீ தத்தன்
மன்னடுங்க வீங்குதிர டோண்மடங்க லன்னான்.
விளக்கம் : பொன் : திருமகள். மந்திரியாகிய சாகரற்கு. கொன் - அச்சம், மடங்கல் - அரிமா. ( 233 )
-
1790. அளப்பரிய நான்மறையி னானசல னென்பான்
றிளைக்குந்திரு வொப்புடைய திலோத்தமைதன் சிறுவன்
விளைத்திரும்பு மேய்ந்தொழிந்த மிச்சில்வரை மார்ப
னிளைப்பலிவன் றேசுரைப்பிற் புத்திசே னிவ்விருந்தான்.
விளக்கம் : வளைத்து என்பது பாடமாயின் சூழ்ந்து என்க. இவன் படைத் தலைவன். நச்சினார்க்கினியர் வரைமார்பனைச் சச்சந்தனாக்கி அவனுடைய அந்தணன் அசலன் எனக் கூட்டுவர் ( 234 )
-
1791. செட்டிதன பாலன்மனை யாள்சினவு வாட்கட்
பட்டநுதன் மின்னினகு பவித்திரைக்குத் தோன்றி
மட்டுமலர் மார்பின்மத யானையெயி றுழுதாங்
கிட்டகுறி தார்திவளப் பதுமுகனிவ் விருந்தோன்.
விளக்கம் : நுதலிலே மின்போலப் பட்டம் நகுமென்னும் பெயரெச்சம் பவித்திரை யென்னும் நிலப்பெயர் கொண்டது; அரவம் புன்சடைமிடைந்த - மின்னனையான் (சிற். 125) போல. ( 235 )
-
1792. பொன்னகருள் வேந்தன்பெய ராற்பொறியும் பெற்றான்
வின்மரிய தோள்விசய தத்தனுயிர்க் கவசம்
பின்னரிய கற்பினவள் பிரீதிமதி காதற்
றன்மகனென் யானடிக டேவதத்த னென்பேன்.
விளக்கம் : நால்வர்க்குத் தாயரைக் கூறி அவர் புதல்வரென்றது, மகடூஉவாற் குலந்தூய்மை பெறுதலானும், மகடூஉவிற்குக் கூறுதலானும் என்றுணர்க. ஒரு பெயரை எழுதலிற் பொறியென்று பட்டத்திற்குப் பெயர் கூறினார். பொறி : ஆகுபெயர். ( 236 )
-
1793. எங்கள்வினை யாலிறைவன் வீடியவஞ் ஞான்றே
யெங்களுயிர் நம்பியொடு யாங்கள்பிறந் தேமா
வெங்கடமர் நம்பிக்கிவர் தோழரென வீந்தா
ரெங்கெழிலென் ஞாயிறென வின்னணம்வ ளர்ந்தேம்.
விளக்கம் : அரசன் சுற்றத்தை யெல்லாம் கட்டியங்காரன் அழிக்கின்றமை நோக்கியும் கந்துக்கடன் தமக்கு இன்றியமையாமை நோக்கியும் இவர்கள் தமர் தோழரென ஈந்தார் : இங்ஙனம் செய்வித்தது தோழர் நல்வினை யென்று உணர்க. இனி அழுகுரல் (சீவக. 330) என்னுஞ் செய்யுளில் உழிதரு பெருநிதி என்றதனைத் தோழராக்கி, இவரைக் கட்டியங்காரன் தன் கந்துக்கடற்குக் கொடுத்தான் என்பார்க்கு, இச் செய்யுளில், எங்கள் தமர் தோழரென ஈந்தார் என்றல் பொருந்தாமை உணர்க. ( 237 )
-
1794. யாண்டுநிறைந் தேகியபி னந்தனவற் கிளையார்
மாண்டகுணத் தார்நபுல விபுலரொடு மன்னு
மீண்டவளர்ந் தேந்தவிசி னுச்சிமிசை யெய்தித்
தீண்டரிய வெம்மையொடு திக்கயங்க ளெனவே.
விளக்கம் : இளையான் என்பது பாடமாயின், அவனுக்கிளையான் நந்தன்; அங்ஙனம் மாண்ட குணத்தார் நபுலவிபுலரென்க. நந்தன் - நந்தட்டன். அங்ஙனம் மாண்ட குணத்தார் எனவே தம்பிய ரென்னும் பொருள் தோன்றிற்று. ( 238 )
-
1795. விற்றொழிலும் வாட்டொழிலும் வீணைபொரு தொழிலு
மற்றொழிலுந் தோத்தொழிலும் வாரணத்தின் றொழிலு
நற்றொழில வாசியொடு நன்கலைக ணீந்திக்
கற்றனங்கள் யாமுமுடன் கற்பனக ளெல்லாம்.
விளக்கம் : பொருதல் - தடவுதல், நன்கலைகள் - நூல்கள். வீணை பொரு தொழில் போர்த்தொழிலுடன் சேர்க்காமல் தனியே கூறுக. நல்தொழில் : அ : அசை. ( 239 )
-
1796. வெஞ்சிலையின் வேடர்தொறு மீட்டுவிசும் பேகும்
விஞ்சையரை யன்மகளை வீணைபொரு தெய்திக்
குஞ்சரமும் வென்றுகுண மாலைநல னுண்ட
நம்பியவ னாமமெவ னென்னினிது வாமே.
விளக்கம் : அப் பெயர்மேற் கூறுகின்றான். சிலையின் - வில்லினால். வேடர் கவர்ந்துகொண்ட தொறு வென்க. தொறு - ஆனிரை. விஞ்சையரையன் மகளை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தையை. குஞ்சரம் - யானை; அசனிவேகம். எவன் - யாது. ( 240 )
-
1797. கந்துக்கட னென்றநகர்க் காதிமுது நாய்கன்
முந்திப்பெறப் பட்டமகன் மூரிச்சிலைத் தடக்கைச்
சிந்திப்பவ ரவலமறு சீவகனென் றோழ
னந்திலொரு நாளவனை யரசனொரு தவற்றால்
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். கந்துக்கடன் என்ற நாய்கன், நகர்க்கு ஆதிநாய்கன், முதுநாய்கன் எனத் தனித்தனி கூட்டுக. மூரிச்சிலை - பெரிய வில். அவலம் அறுதற்குக் காரணமான சீவகன் என்க. அந்தில் - அவ்விடத்தே. ( 241 )
-
1798. தொடிகடவழ் வீங்குதிர டோளிறுக யாத்துக்
கடிகடவழ் குழன்மகளிர் கசிந்துமனங் கரியக்
கொடிகடவழ் மாடநகர்க் கொல்லவென மாழ்கி
யிடிகடவழ்ந் திட்டபட நாகமென வீழ்ந்தாள்.
விளக்கம் : கொல்லக் கொலைக்களம் குறுகலும் என்றுரைக்கப் புகுகின்றவன், கொல்ல என்ற அளவிலே வீழ்ந்தாள். அரசன் கொல்லும்படி அவன் வென்று கொலைக்களங் குறுகலும் எனப் பொருள் கொள்கஇடிகள் உடம்பெங்குந் தவழ்ந்த நாகம் - இல்பொருளுவமை. மோட்டு முதுநீர் என்பது தொடங்கிக், கொல்ல என்னும் சொல்வரை தேவதத்தன் கூற்று. ஒரு பெண்ணுயிரைக் காத்தவனைக் கோறல் அறம் அன்மையின், ஒரு தவறு என்பதனை அரசனுடையதாக்குக. இங்கும் நச்சினார்க்கினியர், யாத்து என்பதற்கு நாய்கன் பிணிக்க என்றே பொருள் கூறுவர். நாய்கன் என்ற சொல் முற்செய்யுளில் (1797) உள்ளது. தொடிகள் - வீரவளைகள். தவழ்தோள், வீங்குதோள், திரள்தோள் எனத் தனித்தனி கூட்டுக. இவைகள் மூன்றும் வினைத்தொகைகள். ( 242 )
வேறு
-
1799. மாதவப் பெருமை வண்ண
மாநகர் நம்பிக் குற்ற
வேதத்தைக் கேட்ட லோடு
மிருகணும் பிறழ்ந்து மாழ்கிக்
காதற்றம் மகனுக் குற்ற
நவையெனக் கலங்கி வீழ்ந்தா
ராதலா னங்கை யாரே
யருள்பெரி துடைய ரென்றார்.
விளக்கம் : மாதவப் பெருமை வண்ணம் இருந்தபடி என்? என வருவித்துக் கூறுக. நம்பி : சீவகன். ஏதிலான் ஒருவன் துயரத்தைக் கேட்டமாத்திரையானே இவ்வாறு கலங்கி வீழ்தற்குக் காரணமான பேரருளை இவர்க்கு இவர் தவமே உண்டாக்கியதாதல் வேண்டும் என்று வியந்தவாறாம். ( 243 )
-
1800. மாழ்குபு மயங்கி வீழ்ந்த
மாபெருந் தேவி தன்னை
யாழ்துய ரவித்தற் கொத்த
வரும்பெறல் யோக நாடிக்
காழ்பரிந் தரைத்த சாந்தின்
களிதரு நீரிற் றேற்ற
யாழ்புரை கிளவி யாற்றாண்
மயங்கிவீழ்ந் தரற்று கின்றாள்.
விளக்கம் : கையாற்றின் நீங்கி நின்றாள். மாழ்குபு : செய்பு என்னும் வாய்பாட்டெச்சம். தேவி; விசயை; கோப்பெருந்தேவியை என்றவாறு . யோகம் - கூட்டுமருந்து. காழ் -முத்துவடம், சாந்தின்களி - சந்தனக் குழம்பு. யாழ்புரை கிளவி - வீணையின் இசை போன்ற சொல்லுடையவள்; விசயை. ( 244 )
வேறு
-
1801. கைம்மாண் கடற்படையுட் காவலனை யாண்டொழியப்
பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள்
விம்மாந்தி யான்வீழ வீழ்ந்தேன் றுணையாகி
யெம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ.
விளக்கம் : காவலனை : ஐ : அசை. எம்மான் : எம்பெருமான் என்பதன் மரூஉ. ( 245 )
-
1802. கையா ரிலங்கெஃகிற் கந்துக்கடன் கொடுபோய்
மொய்யா ருவகையனாய் முற்றிழைக்குத் தான்கொடுப்ப
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற வென்
னையாவென் னையாவென் னையா வகன்றனையே.
விளக்கம் : விரைபொருளின் வந்த சொல்லடுக்காதலின் மூன்றாயின. என் ஐயா என்பது விளியன்று; இரக்கக்குறிப்பு. நின்னை வளர்த்தற்குரிய நல்வினையுடையவளும் வருந்த அகன்றாயே என்றாள். ( 246 )
-
1803. மின்னிரைத்த பைம்பூண் விளங்கிலை வேல்வேந்தன்
முன்னுரைத்த மூன்று கனவும் புணையாக
வென்னுயிரைத் தாங்கி யிருந்தேன் வலியாகா
தென்னரசே யென்பூசல் கேளா திறந்தனையே.
விளக்கம் : பைம்பூணையுடைய வேந்தன், வேல் வேந்தன் எனக் கூட்டுக. மூன்று கனவுகளில் சச்சந்தன் இறத்தலாகிய ஒரு கனவு பலித்து விட்டதனால் மற்றையவும் பலிக்குமென்றிருந்தாள். அரசன் நீ உயிர் கொண்டிருந்து நின் புதல்வனாற் பகையை வெல்க என்று போக விடுதலின், என்பூசல் என்றாள். ( 247 )
-
1804. கோவமா வாகிக் குடியோம்பி நின்குடைக்கீழ்ப்
பாவமே செய்தேன் பரிவெலா நீங்கினாற்
போவம்மா வென்றுரைப்பப் போவேன்முன் போயினா
யாவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே.
விளக்கம் : ஆ : இரக்கக் குறிப்பு. ஏ : வினா ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு, அரசனுடனும் இறந்திலேன், இருந்தும் பகையையும் வென்றிலேன் என்று கருதிப் பாவமே செய்தேன் என்றாள். பரிவு - தான் நினைத்தவை முடியாத வருத்தம் . போ அம்மா : அம்மை அம்மா என விளியேற்றது; முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி -ஆவொடு வருதற் குரியவும் உளவே (தொல். விளிமரபு. 9) என்றதனால். அம்ம என அடுக்கிய திசைச்சொல்லாகிய விலாவணை கடிசொல் இல்லை (தொல் எச்ச. 56) என்பதனாற் கொள்க. அன்றி, அம்ம, என்ற அகர ஈற்றிடைச் சொல், கேட்பித்து உரையசையாய விடத்து, உரைப் பொருட்கிளவி நீட்டமும் வரையார் (தொல் உயிர் மயங்கு. 10) என்பதனால் நீண்டு - அது பின்பு. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணாதாயினும் - விளியொடு கொள்ப தெளியுமோரே (தொல். விளிமரபு. 36) என்பதனால், அம்மா கொற்றா என்ற வழிக். கொற்றா என்பது எதிர்முகம் ஆக்கத் தான் கேளாய் என்னும் பொருள் தந்து, அதனோடு கூடி நின்றதாதலின் பிரிந்து நின்று விளியேலா தென்றுணர்க. இதனாற் பிள்ளாய் என விளித்தல் பொருந்தாது. இதனால் அடுக்கி வந்த அம்மா என்னும் சொல் இரக்கக் குறிப்பைத் தரும் இடைச்சொல்லே அன்றி விளியாகாது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாயிற்று. மற்றும், அம்மா என்பது மரபு வழுவமைதியாய்ப், பிள்ளாய்! என விளித்தற் பொருளில் வந்ததென உரைகூறினாரும். முன்னர் உளர் என்று தெரிகிறது. ( 248 )
-
1805. கோமான் மகனே குருகுலத்தார் போரேறே
யேமாங் கதத்தா ரிறைவாவென் னின்னுயிரே
காமா கடலுட் கலங்கவிழ்த்தேன் கண்ணுணீர்
பூமாண் புனைதாராய் நோக்காது போதியோ.
விளக்கம் : குருகுலத்தார் பலருளராதலின், ஏமாங்கதத்தார் இறைவர் என்றாள். உவப்பின் கண் புதல்வனைக் கூறுவதனை ஈண்டுக் கூறிக், காமா என்றாள். கலங்கவிழ்த்தது - அரசன் பட்டது. கண்ணுள் நீர் நோக்காது என்றது யான் பகை வென்றால் யான் நின் தந்தையை நோக்கி அழுகின்ற நீரை நோக்காதே என்றவாறு. கண்ணுள் நீ என்றும் பாடம். ( 249 )
-
1806. கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை
வந்தார்வாய்த் தீதின்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பலகாலு நோயோடே வீகின்றே
னந்தோ வறனேமற் றாற்றேனா லாற்றேனால்.
விளக்கம் : கந்து - கட்டுத்தறி காவலனார் : சச்சந்தன், கான்முளை - மகவு. நோன்பிலே மறைந்திருந்து என்க. வீசுகின்றேன், தெளிவுபற்றி, எதிர்காலம் நிகழ்காலமாயிற்று. அறன் - அறக்கடவுள், ஆல் : அசை. ( 250 )
-
1807. முன்னொருகா லென்மகனைக்
கண்டேனென் கண்குளிரப்
பின்னொருகாற் காணப்
பிழைத்ததென் றேவிர்கா
ளென்னொப்பார் பெண்மகளி
ரிவ்வுலகிற் றோன்றற்கென்
றன்னப் பெடைநடையா
ளாய்மயில்போல் வீழ்ந்தனளே.
விளக்கம் : தாபதர்க்குக் குலமுதலியன கூறலாகா தென்றவள் தன் உணர்வழிந்து அரற்றினதாற் குலனே அன்றி மறைபொருள் எல்லாங் கூறினள்; தோழர் நல்வினை அங்ஙனம் நிகழ்த்திற்று. ( 251 )
-
1808. புண்மல்கு மத்தகத்த போர்வேழம் பொற்பழித்த
மண்மல்கு தாரான் பெருமாட்டி வாய்மொழிகேட்
டுண்மல்கு நெஞ்சினரா யொய்யெனவே வெய்துயிராக்
கண்மல்கு நீரார் முகமுகங்க ணோக்கினரே.
விளக்கம் : மண் மல்குதார் - பண்ணுதல் மிக்க மாலை. ஆவுதி மண்ணி (மதுரைக். 494) என்றார் பிறரும். தோழர்களிடையே வாய்ப்பேச்சின்றிக் குறிப்பே நிகழ்ந்தது அரசன் மனைவியாகிய விசயையிடம் தாம் கொண்ட வழிபாட்டுணர்ச்சியினால். ( 252 )
-
1809. கண்டீர் கருமம் விளைந்தவா றென்றாராய்
வண்டாரார் வண்கடக மின்னத்தங் கைம்மறித்துக்
கொண்டாங் கடல்வேலி கீழ்மகனைக் கூற்றமா
யுண்டா முயிரென் றுவப்பெழுந் தாடினரே.
விளக்கம் : எதிர்காலத்தைத் துணிவினால் இறந்தகாலமாகக் கூறினார். ( 253)
-
1810. வீழ்ந்து மயில்போல் விசயை கிடந்தாளைத்
தாழ்ந்து பலதட்பந் தாஞ்செய்ய வேல்பெற்றுப்
போழ்ந்தகன்ற கண்ணாள் புலம்பா வெழுந்திருப்பச்
சூழ்ந்து தொழுதிறைஞ்சிச் சொன்னா ரவன்றிறமே.
விளக்கம் : மயில்போல் வீழ்ந்துகிடந்த விசயை என்றவாறு. தட்பம் - குளிர்ச்சி, ஏல் - உணர்ச்சி, அரசன் இறத்தற்குக் காரணமாதல் பற்றி அரசனுயிரைப் போழ்ந்தகன்ற கண்ணாள் என்றனர் நச்சினார்க்கினியர். ( 254 )
வேறு
-
1811. கொலைக்களங் குறுகலுங் கொண்டொர் தெய்வத
நிலைக்கள மிதுவென நீக்க நீங்கினா
னிலக்கண மடப்பிடி யியைந்தொர் போதக
மலைக்கணத் திடைமகிழ்ந் தனைய மைந்தனே.
விளக்கம் : கொல்ல என்று தேவதத்தன் முன்னர்க் கூறியதனைத் தொடர்ந்து, கொல்லக் கொலைக்களங் குறுகலும் தேவன் நீக்கினான், என்றனர். மலைக்கணம் : தோழர்க்குவமை. ( 255 )
-
1812. பூவுடைத் தெரியலான் போர்வை நீத்தினிக்
கோவுடைப் பெருமக னாதல் கொண்டனஞ்
சேவடி சோந்தனந் தொழுது சென்றன
மாவடு நோக்கியுண் மகிழ்ந்து கூறினாள்.
விளக்கம் : சென்று - செல்ல : எச்சத்திரிபு. தெரியலான் - மாலை புனைந்தவன் : சீவகன். போர்வை - மறைப்பு, வணிகச்சாதி என்பது இவன் மன்னர் சாதியை இதுகாறும் மறைத்திருத்தமைப்பற்றி அதனைப் போர்வை என்றார். நோக்கி : விசயை. ( 256 )
வேறு
-
1813. தரணி காவலன் சச்சந்த னென்பவன்
பரணி நாட்பிறந் தான்பகை யாவையு
மரணி லானென்கட் டங்கிய வன்பினா
லிரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான்.
விளக்கம் : இன்ன நாளிற் பிறந்த இன்னான் என்னல் அரசர்க்கு மரபு. பரணி யானை பிறந்த நாளாதலின் யானைபோற் பகையை மதியான் என்றாள். பரணியிற் பிறந்தவன் தரணி ஆள்வான் என்பது இக்காலப் பழமொழி. இறைவன் உற்றது - அமைச்சர் நிலமும் திருவும் நீங்கும் என்றது கொள்ளாதே, கட்டியங்காரனே எனக் குள்ளான் என்று பின் உதவியின்றி நின்ற நிலை. காவலன் என்பது உண்ணலன் என்பதுபோல ஈண்டு மறையை உணர்த்திற்று. ( 257 )
-
1814. விசயை யென்றுல கோடிய வீறிலேன்
பசையி னாற்றுஞ்சி யான்பட்ட தீதெலா
மிசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை
யசைவின் றையனைத் தம்மி னெனச்சொன்னாள்.
விளக்கம் : விசயை என்றுலகெலாம் புகழ்பரவுதற்குக் காரணமான வீறு இலேன் என்க. வீறு ஈண்டு நல்வினை. இனி அந்தோ விசயை பட்டன. காண்மின் என உலகெலாம் கூறுதலின் என்பெயர் உலகெலாம் பரத்தற்குக் காரணமாவேனும் வீறு இலேனும் ஆகிய யான் எனினுமாம். பசை-பற்று. என்னுறை-என்பால்.
-
1815. கோதை வேனம்பிக் கல்லதை யிப்பொருள்
யாதுங் கூறின்மின் யாரையுந் தேறன்மி
னேத மின்னன வின்னண மெய்தலாற்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின்.
விளக்கம் : இன்னன என்றது தான் பிறப்புணர்த்திய அதனை இன்னனம் என்றது தன் நினைவின்றிப் புலம்பலிற் கூறிய அதனை (259)
-
1816. பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
[1]வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு
மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா
புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே.
விளக்கம் : படர்ச்சி - செலவு. மிகை - மேலே; வானிலே என்றவாறு நில்லலா - நில்லா. வேலினீர் : விளி. ( 260 )
வேறு
-
1817. வணக்கருஞ் சிலையி னானை
யொருமதி யெல்லை நாளுட்
குணத்தொடு மலிந்த பாதங்
குறுகயாங் கொணர்ந்த பின்றைப்
பணித்ததே செய்து பற்றார்
பகைமுத லடர்த்து மென்றார்
மணிக்கொடி மாசுண் டன்னாண்
மற்றதே துணிமி னென்றாள்.
விளக்கம் : பிறரால் வளைத்தற்கரிய சிலையினையுடையானை என்க. சீவகனை, ஒருமதி - ஒரு திங்கள், குணத்தொடு மலிந்த பாதம் என்புழி முதலின் குணம் சினைமேலேற்றிக் கூறப்பட்டது. நின் பாதம் என்ற படியாம். அடர்த்தும்: தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. ( 261 )
-
1818. பொறிதவ நெருங்க நோற்றுப்
புகரற நிறைந்த கொள்கைச்
செறிதவ விசயை பாதஞ்
சென்னியின் வணங்கி மீண்டு
வெறிகமழ் சோலை நண்ணி
வேண்டிய வடிசில் கைதொட்
டெறிபடை யெழுக வென்றார்
வளையெழுந் தார்த்த வன்றே.
விளக்கம் : பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம் பொறிகளும். தவ - மிகுதியும், நெருங்க என்றது விரிவின்றி ஒடுங்க என்றவாறு. செறிதவம் : வினைத்தொகை, வெறி - மணம், அடிசில், கைதொட்டென்றது - உண்டு என்றவாறு, வளை - சங்கு. ( 262 )
-
1819. பைந்துகின் மகளிர் தேன்சோர்
பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச்
செவ்வணந் துடைப்ப தேபோ
லிந்திர கோபங் கௌவி
யிறகுளர் கின்ற மஞ்ஞை
யந்தரத் திவர்ந்த பாய்மா
வரும்பொற்றா ரரவத் தாலே.
விளக்கம் : தேன் சோர்வாய், பவளவாய் என ஒட்டுக. செவ்வணம் - சிவப்பு நிறம். இந்திரகோபம் - ஒரு புழு. பாய்மா : வினைத்தொகை, பொற்றார் அரவத்தால் மஞ்ஞை அந்தரத்து இவர்ந்த என்க. ( 263 )
-
1820. சாந்தின்மேற் றொடுத்த தீந்தேன்
றண்மதிக் கோடு போழப்
போந்துமட் டருவி வீழும்
பொன்னெடுங் குன்று மந்த
ணேந்துபூங் காவு சூழ்ந்த
விரும்புனல் யாறு நீந்தி
மாந்தரே மலிந்த நாடு
மடுத்துடன் சென்ற தன்றே.
விளக்கம் : சாந்து - சந்தனமரம். தேன் - தேன் அடை; ஆகுபெயர். மதி - ஈண்டுப் பிறைத்திங்கள். மட்டு - தேன், அந்தண்ஏந்து - அழகையும் குளிர்ச்சியையும் தாங்கிய என்க. இரும்யாறு, புனல்யாறு என ஒட்டுக. ( 264 )
-
1821. மதுக்குலா மலங்கன் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத் தெழுந்த தீம்பாற்
பொங்கலி னுரையிற் பொங்கிக்
கதிர்த்துவெண் மாடந் தோன்றுஞ்
செவ்வெயிற் காத நான்கி
னதிக்கரை வந்து விட்டார்
நச்செயிற் றரவோ டொப்பார்.
(விளக்கம்.) எயில் : ஏமமாபுரமதில். அலங்கலையுடைய மாலை என்க. செவ்வெயில் - சிவந்த நிறமுடைய மதில். இதற்குப் புதுக்கலத்தின் வாய்விளிம்பு உவமை. அம்மதிலக்கத்து உயர்ந்து தோன்றும் வெண்மாடங்களுக்குப் புதுக்கலத்தின் அகத்தே உண்டான பாற்பொங்கலின் நுரைகள் உவமை. ( 265 )
வேறு
-
1822. மானயா நோக்கியர் மருங்குல் போல்வதோர்
கானயாற் றடைகரைக் கதிர்கண் போழ்கலாத்
தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணற்
றானையா நால்வருந் தணப்பின் றெய்தினார்.
விளக்கம் : கான யாறு : அ : அசை. கண் - இடம். மான் அயாவுதற்குக் காரணமான நோக்கென்க. அயாவுதல் - வருந்துதல். அடைகரை - நீரடைகரை. கதிர்- ஞாயிற்றின் கதிர் போழ்கலாப் பொழில், தேனயாம் பொழில், என ஒட்டுக, தானை ஆம் என்புழி ஆம் அசையெனினுமாம். ( 266 )
-
1823. வார்ந்துதேன் றுளித்துமட் டுயிர்த்து வார்மண
லார்ந்துபோ தருந்துவி சடுத்த தொத்துமேற்
றூர்ந்துதேன் வண்டொடு துதைந்துள் புக்கவர்
போந்துபோக் கரியதப் பொழிலின் பெற்றியே.
விளக்கம் : அப்பொழிலின் பெற்றி துளித்தலானும் உயிர்த்தலானும் ஆர்தலானும் தூர்தலானும் துதைதலானும் உள்புக்கவர் போக்கரிது என்க ( 267 )
-
1824. தாதணி கொழுநிழ லிருந்து தண்மதுப்
போதணி யலங்கறாழ் பொருவின் மார்பனை
யாதுநா மடைதிற முரைமி னீரெனக்
காதலாற் பதுமுகன் கண்டு கூறினான்.
விளக்கம் : தாது - பூந்துகள் மதுப்போது தேனையுடைய மலர். மார்பனை : சீவகனை, நீர் உரைமின் என மாறுக. கண்டு ஆராய்ந்து தெளிந்தென்க. ( 268 )
-
1825. திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கொளி யினநிரை கோடுங் கொண்டபின்
முருக்கொளி மலரடி மூரி மொய்ம்பனைச்
செருக்களத் தெதிர்ப்படச் சிதைவ தில்லையே.
விளக்கம் : பொருக்கு - பொருவுக்கு; நிலக்குப்போல் என்றது, துரியோதனன் விராடபுரத்தே நிரையடித்துத் தருமன் முதலாயினோருண்மை யுணர்ந்ததற்கு யாமும் இவன் உண்மையை உணர்கின்ற தன்மை ஒக்கும்படி என்றவாறு. இனி, பொருவுக்கு ஆனிரை கொள்வோம் என்றது வாய்மையானன்றிப் பொய்யாக ஆனிரையைக் கொள்வோம் எனினுமாம். ( 269 )
-
1826. சேட்குலாஞ் சிலையொடு திளைத்த பின்னவர்
வாட்கலாம் வலித்தமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்புடைத் தெழுக வென்றுதன்
னாட்கெலாஞ் செப்பின னலர்ந்த தாரினான்.
விளக்கம் : திளைத்தல் - ஈண்டு போர்பொருதல். வாள்கலாம் - வாளாற் செய்யும் போர். வல்லையே - விரைந்து. தாரினான் : பதுமுகன். ( 270 )
வேறு
-
1827. இருங்கடன் மணிநிரை யெய்திநாங் கொண்டபின்
னருங்கடி யணிநக ரையனங் கில்லையேற்
பெரும்படை தான்வரிற் பின்றிநீங் கிற்பழி
தரும்படித் தன்றியுஞ் சாற்றுவல் கேண்மினோ.
விளக்கம் : இது புத்தி சேனன் கூற்று. இருங்கடல் - பெரியகடல்; இஃது ஆனிரைக்குவமை. அணிநகரங்கு என ஒட்டுக. ஐயன் : சீவகன், ஐயன் இல்லையாகப் படை வருதல் ஒருதலை; அதுவரின் என்றவாறு. பின்றி - மீண்டு. அச்செயல் பழிதரும் படித்து என்க. ( 271 )
-
1828. மஞ்சுசூழ் விசும்பிடை மணந்துமின் மிளிர்வபோல்
வஞ்சமின் மறவர்வாண் மிளிர்ந்துபாய் குருதியுட்
குஞ்சரங் குளிப்பதோர் நீத்தமா மாதலா
லெஞ்சலில் கொள்கையீ ரெண்ணிச்சூழ் மின்களே.
விளக்கம் : படைவீரர் பின்வாங்காமற் பொருதால் நேருவது இஃது என்று கூறினான். ஒழியாத கொள்கையீர் என்பது எச் செய்தியையும் நன்காய்ந்து துணிந்து வெற்றியுடன் முடிக்கும் ஊறுதியுடையீர் என்பதாம். மஞ்சு - முகில், விசும்பு - வானம், அவர் நமக்குப் பகைவர் அல்லர் என்பான் வஞ்சம் இல் மறவர் என்றான். இவ்விரண்டும் செய்யுளும் புத்திசேனன் கூற்று. (இவற்றால்) நமக்குப் பழியும் பாவமும் உண்டு என்றான். ( 272 )
-
1829. என்றனன் புத்திசே னென்னுநான் மறையினா
னன்றதே பொருளென நால்வரு மிருந்துழி
யொன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந்
தின்றிதாற் பட்டதென் றியம்புகின் றார்களே.
விளக்கம் : மூவர் வந்து கூறுகின்றார்கள் என்றாராயினும் மூவரும் ஒருவரையொருவர் அறியாமலே சென்று ஒற்றிவந்து தனித்தனியே கூறினார்கள் என்றும், அம் மூவர் கூற்றும் ஒன்றாக இருந்தன என்றும் கொள்க. ஒற்றொற் றுணராமை ஆள்க; உடன் மூவர் - சொற்றொக்க தேறப் படும் (குறள். 589) என்பதூஉங் காண்க. ( 273 )
-
1830. வளையசுந் தரமெனும் வாரண மால்வரை
முளையிளந் திங்கள்போன் முத்துடைக் கோட்டது
கிளையிளம் பிடிகளைஞ் ஞாற்றிடைக் கேழரக்
களையவஞ் சனவரை யனையதக் களிறரோ.
விளக்கம் : வளையசுந்தரம் என்பது தடமித்தன் பட்டத்தியானையின் பெயர். மால்வரையில் முளைத்த இளந் திங்கள்போல் கோடு, முத்துடைக் கோடு எனத் தனித்தனி கூட்டுக. ஐஞ்ஞாறு - ஐந்நூறு. கேழ் - நிறம். அளைய - அளாவிய. அஞ்சனவரை - கருமலை. ( 274 )
-
1831. கடுமதக் களிப்பினாற் காரென முழங்கலின்
விடுகலார் பாகரும் வெருவரக் கொன்றிடப்
பிடியொடுங் கந்தணை வின்றிநீ ருருள்பிளந்
தடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே.
விளக்கம் : நீருருள்- சங்கடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுவதொன்று. இனி, ஈருள் பிளந்து என்று ஓதின், உள்ளீரலைப் பிளந்து கொன்றிட வெனக் கூட்டுக. (ஈர்+உள் : உள்+ஈர்.) ( 275 )
-
1832. கண்ணுமிழ் தீயினாற் சுடநிறங் கரிந்தபோற்
பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீ
ரண்ணலங் களிற்றினை யடக்கினான் சீவகன்
வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே.
விளக்கம் : வண்டுலாம் பார்த்தர என்ற பாடத்திற்கு, வண்டுலாங் களிற்றைப் பார்க்கின்ற சீரை நமக்குத் தருதற்கு அடங்கினான் என்க. ( 276 )
-
1833. இறுவரை யிவர்வதோ ரிலங்கெயிற் றரியென
வுறுவரை மார்பினான் றூசங்கொண் டொய்யெனப்
பெறலருங் குஞ்சர மேறலிற் பெருஞ்சன
மறைகடற் றிரையொலித் தாங்கென வார்த்ததே.
விளக்கம் : இறுவரை - பெரிய மலை. அரி - சிங்கம். உறுவரை - பெரிய மலை. மார்பினான் : சீவகன். தூசம் - புரோசைக்கயிறு. பெருஞ்சனம் - மக்கட் கூட்டம். ( 277 )
-
1834. அங்கையந் தலத்தினா லப்புதா தையெனக்
கொங்கலர் கண்ணியான் கொம்மைதான் கொட்டலும்
பொங்கிய வுவகையிற் பொலிந்துமாக் களிறவன்
றங்கிய பயிர்த்தொழி றடக்கையாற் செய்ததே.
விளக்கம் : அப்புது, ஆது, ஐ : இவை யானைப் பேச்சான குறிப்பு மொழிகள், பயிராவன; பரிபரி என்பன முதலியன. தொழில் - தோட்டி முதலியன எடுத்துக் கொடுத்தல். ( 278 )
-
1835. கொட்டையம் புரோசைதா னிருவடங் கொண்டுடன்
கட்டினான் கருவலித் தடக்கையாற் றோட்டியு
மிட்டன னிரண்டுட னிமிழ்க்கொளீஇ யிலங்குபொற்
பட்டமும் பனிவரை மின்னெனக் கட்டினான்.
விளக்கம் : கொட்டை - முடிமணி, முடிச்சுமாம், கருவலித்தடக்கையான் என்புழி கருமை கொடுமைப் பண்பின்மேற்று. இரண்டு தோட்டியும் என்க. அவை நெடுந்தோட்டி குறுந்தோட்டி என்பன. ( 279 )
-
1836. கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணியணிந்
தச்சுறு கொழுந்தொடர் யாப்பழித் தடியிணை
யுச்சியும் புரோசையுட் குளிப்பவுய்த் துறுவலி
மெச்சிமேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான்.
விளக்கம் : அச்சுறு கொழுந்தொடர் - விரையாதபடி மரங்களிலே இரும்பைத்தைத்துக் கழுத்திலே மாலைபோலே இடுவதொன்று. ( 280 )
-
1837. கோற்றொடிப் புரிசையுட் கொற்றவ னின்றைய
னேற்றியல் காண்டுநா மிவட்டரு கென்னவே
காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ.
விளக்கம் : கொற்றவன் : தடமித்தன். ஐயன்: சீவகன். ஏற்றியல் - யானை ஏறும் அழகு, காண்டும் - காண்பேம். விசையாற் காற்று எனவும் முழக்கத்தால் கடல் எனவும் வடிவால் வரையெனவும் பொதுத்தன்மை விரித்தோதுக. ( 281 )
-
1838. குழவியஞ் செல்வனோர் குன்றுகொண் டொய்யென
வழகிதாப் பறப்பதே போலவு மார்புயன்
மழையையூர்ந் தோடுமோர் வானவன் போலவு
மெழுதலா காவண மிருந்தன னென்பவே.
விளக்கம் : என்ப, ஏ : அசைகள். குழவியஞ் செல்வன் என்றது ஈண்டுக் குறிப்பால் இளஞாயிற்றை உணர்த்தியது. ஓய்யென : விரைவுக் குறிப்பு. குன்று - ஈண்டு உதயகிரி. ( 282 )
-
1839. வனைகலத் திகிரியும் வாழுயிர் மேற்செலுங்
கனைகடுங் கதழ்பரிக் காலசக் கரமும்போல்
வினைதகு வட்டமும் வீதியும் பத்தியு
மினையவை யேமுற விமைப்பினி னியற்றினான்.
விளக்கம் : கலம் வனைதிகிரி என்க. வாழுயிர் : வினைத்தொகை. கதழ்பரி - விரைந்த செலவினையுடைய. வட்டம், வீதி, பத்தி என்பன யானையின் செலவு வகை. ( 283 )
-
1840. ஒருவனே களிறுமொன் றோருநூ றாயிரந்
திரிவவே போன்றன திசையெலாங் குஞ்சரக்
குரியவன் னிவனலா லுலகினில் லிலனென
வரிதுணர் வேத்தவை யமைகமற் றென்றதெ.
விளக்கம் : ஓரும், மற்று : அசைகள். களிறும் ஒன்று அதனை ஊருவோனும் ஒருவனே என்க. நூறாயிரம் என்றது மிகுதிக்கோர் எண் கூறியவாறு. குஞ்சரக்கு - குஞ்சரத்திற்கு. சாரியையின்றி உருபு புணர்ந்தது. ( 284 )
-
1841. வள்ளுகிர் நுதியினால் வரிநுத லுறுத்தலு
முள்ளுணர் குஞ்சரம் ஓய்யென நிற்றலு
மௌளரும் மிருமணி கிணினென விசைத்தன
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்துகை விதிர்த்ததே.
விளக்கம் : ஓடுகின்ற விசையாலே ஒலி அடங்கின மணிகள் நின்ற பொழுது ஒலித்தன. நுதி - முனை. வரிநுதல் - வரிகளையுடைய நெற்றி. ஓய்யென; விரைவுக் குறிப்பு. கிணின்; ஓசைக் குறிப்பு. ( 285 )
-
1842. என்மன நின்மன மென்றிரண் டில்லையாற்
றன்மனத் துளபொரு டான்றனக் குரைப்பதொத்
துன்மன மென்மன மென்பதொத் திழைத்ததா
னன்மனக் குஞ்சர நம்பியோ டென்மரும்.
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். ( 286 )
-
1843. தேவனே மகனலன் செல்வன்மற் றென்மரும்
பாவையே நோற்றனள் பாரின்மே லென்மருங்
கோவனும் மக்களுங் குளிர்ந்துதோ ணோக்கினா
ரோவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே.
விளக்கம் : என்பார் என்பர் எனத் திரிந்தது. உண்மரும் தின்மரும் (பதிற் -24) என்றாற்போல; இனி, ஆயினார் என வினை கோடலின்; மாரீறு விகாரமாய் நின்ற தெனின், தனக்குரிய எதிர்காலம் உணர்த்தாமை உணர்க. ( 287)
-
1844. பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டியவன்
வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக்
கொண்டதன் றம்பியுந் தானுங்கோ யில்புகக்
கண்டனங் கண்ணினே யென்றுகண் டவர்சொனார்
விளக்கம் : கண்ணினே : ஏ : அசை. கண்டவர் என்றது முன்னர் இயம்புகின்றார் என்ற ஒற்றரைச் சுட்டிநின்ற பெயராகக்கொண்டு, அவர் இங்ஙனங் கூறினார் என்க. நந்தட்டன் கூட நிற்றலின் சீவகன் என்று உணர்ந்தார். (நச்சினார்க்கினியர் முன்னர் (சீவக. 1713, 1718, 1721, 1722 முதலிய செய்யுட்களில்) சீவகனும் வேற்று வடிவுடன் இருந்தான், நந்தட்டனையும் சீவகனைப்போலவே வேற்றுருவுடன் இருக்கத் தன் விஞ்சையால் மாற்றியனுப்பினாள் என்று கூறியவர் ஈண்டு, நந்தட்டனை ஒற்றர் அறிந்தனர் என்றும், அவனால் உடன் இருப்பவன் சீவகன் எனக் குறித்தறிந்தனர் என்றுங் கூறுகின்றனர். ( 288 )
-
1845. பாத்தில்சீர்ப் பதுமுகன் படிவவொற் றாளர்சொற்
கோத்தெனக் கொடுத்தனன் கொழுநிதி யுவகையிற்
றூத்திரட் சுறாவினந் தொக்கபோன் மறவரு
மேத்தருஞ் சிலைகைவா ளிலங்குவே லேந்தினார்.
விளக்கம் : ஒத்ததென என்பது ஓத்தென விகாரமுற்றது; ஓத்து : விதியுமாம்.பாத்தில் - பாத்தல் இல்லாத - பகுத்தல் இல்லாத; நீங்குதல் இல்லாத என்றவாறு, படிவம் - மறைந்த வேடம். ஒத்ததென எனற்பாலது முதனீட்டல் விகாரமும் தகர அகரம் கெடுதல் விகாரமும் எய்தி ஓத்தென என்றாயிற்று. ஓத்து என்றே கொண்டு விதி எனினுமாம். இப்பொருட்கு ஒற்றளர் சொற்கு நிதிகொடுத்தல் விதியெனக் கருதிக் கொழுநிதி கொடுத்தனன் எனப் பொருள் கூறுக. ( 289 )
-
1846. வேனிரை வாண்மதில் பிளந்துவெஞ் சமத்திடைத்
தேனிரை களிற்றின்மேற் றிண்குளம் பழுத்துவ
வானிரை வளைப்பதோர் பொருளெனச் சிரித்துடன்
மாநிரை பண்ணினார் வடித்தநூற் கேள்வியார்.
விளக்கம் : வேனிரை, வாண்மதில் இரண்டும் பண்புத்தொகை, சமம் - போர், தேன் - வண்டுகள், நிரைகளிறு : வினைத்தொகை, மாநிரை - குதிரை அணி. ( 290 )
வேறு
-
1847. விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால்வளை
முடியுல குறநிமிர்ந் தார்த்த மொய்கழ
லடுபடை யிளையரு மரணம் வீசினார்.
விளக்கம் : விடை - காளை, துவைத்த; பலவறிசொல்; வால்வளை வெள்ளிய சங்கு, முடியுலகு - மேலுலகம், அரணம் - கவசம். ( 291 )
-
1848. காந்தளங் கடிமலர்க் கண்ணி நெற்றிய
ராய்ந்தளந் தியற்றிய வத்து ணாடையார்
வேய்ந்துணி யலமரும் புறத்தார் வெஞ்சுட
ரேந்தெழி னவியமு மேந்து தோளினார்.
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். அளந்தியற்றுதல் - இந்த ஆடைக்கு இஃது அளவு என்று அளந்து பண்ணுதல். அத்து - சிவப்பு. வேய்ந்துணி-மூங்கில் துண்டம் (குழல்) ÷ய்த்துணி, வேய்ந்துணி : உறழ்ச்சி. ( 292 )
-
1849. கோனுடை யினநிரை காக்குங் கோவலர்
தேனொடு கடிச்சுரும் பரற்றும் தேமலர்க்
கானிடை யினநிரை காவல் போற்றுமி
னானிடை யழித்தபுள் ளென்று கூறினார்.
விளக்கம் : கோன் - அரசன். இனநிரை - ஆன்சுட்டம். கோவலர் - இடையர். தேன், சுரும்பு என்பன வண்டின்வகை. கான் - காடு. புள் - காரி என்னும் பறவை. மணிநிரைக் கட்சியுள் காரியெழும் என்றார் வெண்பாமாலையினும் (பு. வெ. 3. பி-ம்.) ( 293 )
1850. விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை
யடுகணை சிதறினா ரார்த்த வால்வளை
கடுகின காலிய லிவுளி காண்டலு
முடுகுபு கோவலர் முந்து காற்பெய்தார்.
பொருள் : விடு பொறி அரவு என விளங்கு வெஞ்சிலை அடுகணை சிதறினார் - வீசுகின்ற தீப்பொறியையுடைய பாம்பைப் போல விளங்கும் கொடிய வில்லாலே அம்புகளை (ஆனிரை கொள்ள வந்தோர்) வீசினார்; வால்வளை ஆர்த்த-வெண் சங்குகள் முழங்கின; கால் இயல் இவுளி கடுகின - காற்றைப்போல இயங்கும் குதிரைகள் விரைந்தான; காண்டலும் - இவற்றைக் கண்டதும்; கோவலர் முந்து முடுகுபு காற்பெய்தார் - கோவலர் முற்பட ஆனிரையைக் காத்தற்கு முற்பட ஓடினார்.
விளக்கம் : விடுபொறி : வினைத்தொகை. பொறி - தீப்பொறி, அடுகணை : வினைத்தொகை. காலியல் - காற்றைப்போல, முடுகுபு - முடுகி, காற்பெய்தார் - ஓடினார். ( 294 )
-
1851. அளைச்செறி யிரும்புலி யனைய வாடவர்
வளைத்தனர் மணிநிரை வன்க ணாயரும்
விளைத்தனர் வெருவரத் தக்க வெஞ்சொலா
லுளைத்தனர் பூசல்விட் டுணர்த்த வோடினார்.
விளக்கம் : அளை - குகை, இரும்புலி - பெரிய புலி, ஆடவர் ஈண்டு வீரர் என்பதுபட நின்றது. வெருவரத்தக்க - அஞ்சத்தக்க. பூசல் - போர். ( 295 )
வேறு
-
1852. தோத்தொகைத் தானை மன்னன்
சீவகற் கிளைய நம்பி
வார்த்தொகை முழவம் விம்ம
மல்லுறழ் தோளி னானை
நீர்த்தொகைக் கழனி நாடு
நெடுநகர்ப் பெயரு நுங்கள்
சீர்த்தொகைக் குலனு மெல்லாந்
தெரிந்தெமக் குரைமோ வென்றான்.
விளக்கம் : தெரிந்து - தெரிய : எச்சத்திரிபு. தானை மன்னன் - தடமித்தன், இளையநம்பி - நந்தட்டன், முழவம் இதனை (தோளை) ஒவ்வேன் என வருந்தி அழாநிற்ப மல்லுடன் உறழ்ந்த தோள் என்க. விம்ம என்றது சிலேடை. அழ - ஒலிப்ப என்னும் பொருளது. உரைமோ - மோ : முன்னிலையசை. (296 )
-
1853. திருக்குறிப் பன்ன தாயிற்
செப்புவ லடிகள் செம்பொ
னரித்தசும் பொழுகு குன்றத்
தருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரைப்
பார்ப்பொடு மருதிற் சேக்கு
முரைத்தகு நாடு மூருங்
குலத்துட னுணர வென்றான்.
விளக்கம் : திருக்குறிப்பு - திருவுள்ளக் குறிப்பு. செப்புவல் - தன்மை ஒருமை வினைமுற்று. அடிகள் - விளி. அசும்பு - ஊற்று. வெரீஇய - வெருவிய; அஞ்சிய. பரித்தவை - ஓடியவை. பழனம் - வயல். உரைத்தகு - புகழத் தகுந்த. ( 297 )
-
1854. பொருகய லுகளிப் பாயப்
பூஞ்சிறைக் குமரி யன்னங்
குருகினோ டிரியச் செந்நெற்
கொழுங்கதிர் குவளை யெற்ற
முருகுவிண் டிரியத் தீந்தேன்
முழங்குநீர்க் கழனி நன்னா
டெரியுமிழ்ந் திலங்கும் வேலோ
யேமமாங் கதம தென்றான்.
விளக்கம் : உகளுதல் - பிறழ்தல், பூஞ்சிறை - அழகிய சிறகு. குமரியன்னம் - இளைய அனைப் பெடை. குருகு - நாரை முருகு - மணம், எரி - தீ, ஏமாங்கதம் ஏமமாங்கதம் என விரிந்தது. அது : பகுதிப்பொருளது. ( 298 )
-
1855. பூந்துகிற் கொடுத்த தீந்தே
னகிற்புகை பொன்ன னார்தங்
கூந்தலிற் குளித்த வண்டு
கொப்புளித் திட்ட வாச
மாந்தர்மேற் றவழ்ந்து மாட
மிருள்படப் புதையுஞ் செல்வத்
தேந்துபொன் னிஞ்சி மூதூ
ரிராசமா புரம தென்றான்.
விளக்கம் : துகிற்குக் கொடுத்த புகை என்க. தேன் கலந்த புகை என்க. பொன் - திருமகள். கொப்புளித்திட்ட; ஒரு சொல் . தவழ்ந்து - தவழ பொன்னிஞ்சி - பொன்னாலியன்ற மதில். இராசமாபுரமது என்புழி அது பகுதிப்பொருளது. ( 299 )
-
1856. எங்குல மடிகள் கேட்க
வென்றலு மெழுந்தோர் பூசல்
பொங்குளைப் புரவி வெள்ளம்
போக்கற வளைத்து முற்றி
யிங்குள நிரையை யெல்லாங்
கவர்ந்ததென் றிட்ட போழ்தே
திங்கள் வெண்குடையி னான்றன்
றிருச்செவிக் கிசைத்த தன்றே.
விளக்கம் : என்றலும் - என்று நந்தட்டன் கூறியபொழுது. பூசல் இட்டபொழுது என ஒட்டுக. அப்பூசல் எனச் சுட்டு வருவித்துக் கொள்க. குடையினான் - தடமித்தன். ( 300 )
-
1857. எரித்திறல் வென்றி வேந்தற்
கிற்றென விசைப்பச் சீறி
மருப்புறக் கந்து பாய்ந்து
முழங்குமால் களிறு போலத்
திருக்கிளர் மணிசெய் பொற்றூண்
டீப்படப் புடைத்துச் செங்க
ணுருத்தெரி தவழ நோக்கி
யுடல்சினங் கடவச் சொன்னான்.
விளக்கம் : எரிபோலும் வலிமையுடைய வென்றி - கொன்று வெல் லும் வென்றி. மருப்பு - கொம்பு, மால் - பெரிய, மணிகளிழைத்தியற்றிய பொற்றூண் என்க. சினங்கொண்டுழித் தூணைப்புடைத்தல் பன்மணிக்கடகஞ் சிந்தப் பருப்புடைப் பவளத்தூண்மேல் மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து என்புழியுங் காண்க (சீவக.1282) எழுவுறழ் திணிதோள் எடுத்தனன் ஓச்சிப் பொழிமணித்திண்டூண் பொறிபடப் புடைத்து என்றார் கதையினும் (1.17 : 109 -10). உடல்சினம் : வினைத்தொகையுமாம். ( 301 )
-
1858. நாற்கடற் பரப்பும் வந்து
நன்னகர்க் கண்ணுற் றென்ன
வேற்கடற் றானை பாய்மா
விளங்கொளி யிவுளித் திண்டோ
கூற்றென முழங்கு மோடைக்
குஞ்சரக் குழாத்தோ டேகிப்
பாற்கடற் பரப்பின் வல்லே
படுநிரை பெயர்க்க வென்றான்.
விளக்கம் : கடற்பரப்பு; இருபெயரொட்டு, வேற்றானை, கடற்றானை எனத் தனித்தனி கூட்டுக. பாய்மா : வினைத்தொகை; குதிரை. குஞ்சரம் - யானை, பாற்கடல் பாலையுடைய ஆனிரைக்குவமை. ( 302 )
-
1859. கண்ணகன் கடலங் கோடும்
பறைகளு முழங்கி விம்ம
விண்ணகத் தியங்கு மேகக்
குழாமென நிரைத்த வேழந்
திண்ணுகப் புரவித் திண்டோ
விரைந்தன நிரந்த பாய்மா
மண்ணக மலிரக் காலாட்
கடல்கிளர்ந் தெழுந்த தன்றே.
விளக்கம் : இனி வேழமுந் தேரும் விரைந்தன; மாப் பரந்தன காலாட்கடல் மிக்கு எழுந்தது என்த் தனித்தனியே முடிப்பினும் ஆம். ( 303 )
-
1860. பானிறக் கவரி நெற்றிப்
பசுங்கிளி நிறத்த பாய்மாத்
தானுறப் பண்ணித் திண்டோத்
தம்பிகோல் கொள்ள வேறிக்
கூனிறக் குழவித் திங்கட்
குளிர்கதி ரார மார்பிற்
றேனிறங் கொண்ட கண்ணிச்
சீவக குமரன் சொன்னான்.
விளக்கம் : பானிறக்கவரி - பால்போலும் நிறமுடைய கவரி, திண்டேர் உறப்பண்ணி என இயைக்க. தான்; அசை, தம்பி ; நந்தட்டன். ( 304 )
-
1861. மன்னவ னிரைகொண் டாரை
வளநகர்த் தந்து மன்னன்
பொன்னவிர் கழலிற் றங்கள்
புனைமுடி யிடுவி யேனே
லின்னிசை யுலகந் தன்னு
ளென்பெயர் சேற லின்றாய்க்
கன்னிய மகளிர் நெஞ்சிற்
காமம்போற் கரக்க வென்றான்.
விளக்கம் : கன்னிய; அ : அசை. அரசனைக் காணாமலே இவ் வஞ்சினங் கூறினான். ( 305 )
-
1862. பார்மலி பரவைத் தானைப்
பரப்பிடைப் பறப்ப தேபோ
னீர்மலி கடாத்த கொண்மூ
நெற்றிமேன் மின்னி னொய்தாத்
தார்மலி மார்பன் றிண்டோ
தோன்றலுந் தறுகண் மைந்தன்
சீர்மலி பகழி யேந்திப்
பதுமுகன் சிலைதொட் டானே.
விளக்கம் : கொண்மூ போன்றது : யானை. கடல்போல நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் தலையிற்றோன்றுவதொரு மின்னினுங் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானை, மார்பன் - சீவகன். மைந்தனாகிய பதுமுகன் என்க. ( 306 )
-
1863. குடைநிழற் கொற்ற வேந்த னொருமகற் காணக் குன்றா
வடிநிழ லுறைய வந்தே மடியம்யா மென்ன வெய்த
விடுகணை சென்று தோமேற் பின்முனா வீழ்த லோடுந்
தொடுகழற் குருசி னோக்கித் தூத்துகில் வீசி னானே.
விளக்கம் : விடுகணை என்பது கணை என்னும் பெயரளவாகியது. அறிவிக்கும்படி எழுதி எய்த அம்பு என்பர் நச்சினார்க்கினியர். குருசில் - சீவகன். தூத்துகில் - வெள்ளிய ஆடை. போரை நிறுத்தியதற்கு அறிகுறியாக வெள்ளையாடை வீசினான் என்பது கருத்து. ( 307 )
-
1864. ஏந்தலைத் தோழ ரெல்லாமிணையடி தொழுது வீழச்
சேந்தன கண்ணி னாலுந் திண்ணெழிற் றோளி னாலும்
வாய்ந்தவின் சொல்லி னாலு மாலைதாழ் முடியி னாலு
மாய்ந்தவன் சிறப்புச் செய்தா னவலநோ யவருந் தீர்ந்தார்.
விளக்கம் : ஏந்தல் - சீவகன். வரிசையறிந்து கண்ணாலும் தோளாலும் இன்சொல்லினாலும் முடியினாலும் சிறப்புச்செய்தான் என்பது கருத்து. ( 308 )
-
1865. கழலவாய்க் கிடந்த நோன்றாட் காளைதன் காத லாரை
நிழலவா யிறைஞ்சி நீங்கா நெடுங்களிற் றெருத்த மேற்றி
யழலவாய்க் கிடந்த வைவே லரசிளங் குமரர் சூழக்
குழலவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான்.
விளக்கம் : கழல் அவாய்க் கிடந்த தாள் என்க. காளை - சீவகன். காதலார் - தோழர். தன்னிழலைப் பகை என்று அவாவித் தாழ்ந்து நீங்காக் களிறு என்க. அழல் - கொல்லுலையிற்றீ. கொற்றுறைக் குற்றில என்றார் பிறரும் (புறநா. 95) வங்கியம் விரும்பிக்கிடத்தற்குக் காரணமான இன்சொல்லையுடைய கோதை எனினுமாம். ( 309 )
வேறு
-
1866. வானக்கி நின்று நுடங்குங்கொடி மாட மூதூர்ப்
பானக்க தீஞ்சொற் பவளம்புரை பாவை யன்ன
மானக்க நோக்கின் மாடவார்தொழ மைந்த ரேத்த
யானைக்கு ழாத்தி னிழிந்தாரரி மானொ டொப்பார்.
விளக்கம் : சீவகனும் அரசிளங் குமரரும் தோழர் நால்வரும் யானையினின்றும் இழிகின்ற காலத்துச் சீவகனையும் அரசிளங்குமரரையும் மகளிர் தொழுதாரென்றுணர்க. ( 310 )
-
1867. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில்
வம்பிற் றுளும்பு முலைவாணெடுங் கண்மா டவார்
நம்பப் புகுந்து நரதேவ னருளி னெய்திப்
பைம்பொற் புறகக் களற்றானடி தாம்ப ணிந்தார்.
பொருள் : செம்பொன் புளகத்து இளஞாயிறு செற்ற கோயில் - செம்பொன்னாற் செய்த கண்ணாடியால் இளஞாயிற்றைக் கெடுத்த கோயிலிலே; வம்பின் துளும்பும் முர்லை வாள் நெடுங்கண் மடவார் நம்பப் புகுந்து - கச்சுடன் மாறுபட்டசையும் முலையினையும் வாளனைய நீண்ட கண்களையும் உடைய மாதர் விரும்பப் புகுந்து; நரதேவன் அருளின் எய்தி - மன்னன்அழைக்கச் சென்றணுகி; பைம் பொன் புளகக் களிற்றான் அடிதாம் பணிந்தார் - பசிய பொன்னாலாகிய கண்ணாடி அமைத்த பருமத்தையுடைய களிற்றையுடைய அவ்வரசன் அடியிலே அவர்கள் பணிந்தனர்.
விளக்கம் : செம்பொன்னாலாகிய புளகம் என்க. புளம் - கண்ணாடி, கண்ணாடி ஒளியால் இளஞாயிறு மழுங்கிற்று என்பது கருத்து. வம்பு - கச்சு, நம்ப - விரும்ப, நம்பும்மேவும் நசையா கும்மே என்பது தொல்காப்பியம் (உரி. 31) - நரதேவன் அரசன்; தடமித்தன். ( 311 )
-
1868. வல்லான் புனைந்த வயிரக்குழை வார்ந்து வான்பொற்
பல்பூ ணெருத்திற் பரந்தஞ்சுடர் கால மன்னன்
மல்லார் திரடோண் மருமான்முக நோக்க மைந்த
ரெல்லா மடிக ளெனக்கின்னுயிர்த் தோழ ரென்றான்.
விளக்கம் : மருமான் முகத்தை இவர் யார் என்னுங் குறிப்புடன் நோக்கினான். வல்லான் - கைத்தொழிலின் வல்லவன். எருத்து - பிடர். அஞ்சுடர் - அழகிய ஒளி. மல் - மற்றொழில். மருமான் - ஈண்டுச் சீவகன். அடிகள் -விளி. இம்மைந்தரெல்லாம் என்க. ( 312 )
-
1869. வார்பொன் முடிமேல் வயிரம்முழச் சேந்த செல்வத்
தார்பொன் னடிசூழ் மணியங்கழ லானை வேந்தன்
கார்மின் னுடங்கு மிடைமங்கையைக் காண்க சென்றென்
றோமின்னு தாரா னருளத்தொழு தேகி னாரே.
விளக்கம் : வார்தல் - பெருகுதலுமாம்; ஆர்பொன் - திருவுமாம். முடிமேற் பதித்த வயிரமணி என்க. சேந்த - சிவந்த. கழல் வேந்தன், ஆனைவேந்தன் எனத் தனித்தனி கூட்டுக. காரிடத்து மின் போல் நுடங்கும் இடை என்க. மங்கை; கனகமாலை அவரும் ஏகினார் என்க. ( 313 )
-
1870. தழுமுற்றும் வாராத் திரடாமங்க டாழ்ந்த கோயின்
முழுமுற்றுந் தானே விளக்காய்மிணிக் கொம்பி னின்றா
ளெழுமுற்றுந் தோளார் தொழுதாரின்ன ரென்று நோக்கக்
கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத் தோளி னாட்கே.
விளக்கம் : முழுமுற்றும் என்பதை முழுதும் முற்றும் என்பதன் விகாரம் என்றும், முற்றும் என்பதை மணிக் கொம்புடன் சேர்த்தும் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும், முழுமுற்றும் ஒரு சொல்லாக்கியும் உரைப்ப என்றுங் கூறுவர். வாளாண்மையும் தாளாண்மையும் வேளாண்மையுமாகிய ஆடவர் அணிசேர் தோள் எழுவினை யொத்து விளங்குவதாகும். எழு - உருக்கு. ( 314 )
-
1871. துறக்கம் மிதுவே யெனுந்தொன்னகர் மன்னன் மங்கை
தொறுக்கொண்ட கள்வ ரிவரோவெனச் சொல்லி நக்காங்
கொறுக்கப் படுவா ரிவரென்றங் கசதி யாடி
வெறுக்கைக் கிழவன் மகளென்ன விருந்து செய்தாள்.
விளக்கம் : துறக்கம் - தேவருலகம், மன்னன் மங்கை; கனகமாலை, தொறு - ஆனிரை, ஆனிரை கொண்ட கள்வராதலான் இவர் தண்டிக்கப்படுவர் என்றவாறு. அசதியாடுதல் - பரிகசித்து நகுதல். வெறுக்கைக் கிழவன்; குபேரன். வெறுக்கைக்கிழவன், மகள் செய்யும் விருந்து போன்று சிறந்த விருந்து செய்தாள் என்றவாறு. ( 315 )
-
1872. அருந்தீத் தொழிலே புரிந்தான்மறை யாய வெல்லாம்
விருந்தா விரிப்பா னவன்சீவக சாமி வேறா
விருந்தாற்கொ ரோலை கொடுத்தானெரி குண்ட லத்தாற்
பொருந்தார் பொறியைப் புறநீக்குபு நோக்கு கின்றான்.
விளக்கம் : பொறி, தத்தம் பொருள் வயின் தம்மொடு சிவணிய ஆகுபெயரிலேயாய்க் குழையை உணர்த்திற்று. அருந் தீத்தொழில் - செய்தற்கரிய வேள்விச் செயல். விருந்தாக எனற்பாலாது ஈறுகெட்டது. விரிப்பான் : வினையெச்சம். அவன் : புத்தி சேனன். வேறா - வேறாக. பொருந்து ஆர் எனக் கண்ணழித்துக் கொள்க. பொறி - இலச்சினை. ( 316 )
வேறு
-
1873. மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்ச்
சிற்றடிச்சி தத்தையடி வீழ்ச்சி திருவடிகட்
குற்றடிசின் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்
பொற்புடைய வாகவெனப் போற்றி யடிவீழ்ந்தேன்.
விளக்கம் : மற்று; அசை . நச்சினார்க்கினியர் இச் செய்யுளிற் கொண்டு கூட்டி உரைக்கும் முடிபும் பொருளும்:- மற்றுக் காப்பென்க; அரசன் நுகருவனவற்றைக் காப்பென்றல் மரபு. அடியிலே உற்றுப் போற்றியென்க. என்றது சமைக்கின்ற பொழுது உற்றுக் காக்கப்பட்டு என்றவாறு. திருவடிகட்கு அடிசிலையும் மஞ்சனத்தையும் உள்ளிட்டனவும் மற்றுக் காப்புக்களும் அடியிலே உற்றுப் போற்றப்பட்டுப் பொற்புடையவாக வேண்டுமென்று சிற்றடியாளாகிய தத்தை மலரடிக் கீழ் வீழ்ந்தேன். அவ்வடி வீழ்ச்சியை அடிகள் நெஞ்சாலே கண்டருள்க என்றவாறு.இவை காத்தல் தனக்குக் கடனாதலின், முற்கூறினாள். ( 317 )
-
1874. வயிரமணிக் கலன்கமழுங் கற்பகநன் மாலை
யுயிரைமதஞ் செய்யுமதுத் தண்டொடுடை யாடை
செயிரினறுஞ் சாந்துசிலை யம்புமணி யயில்வாண்
மயிரெலியின் போர்வையொடெம் மன்னன்விடுத்தானே.
விளக்கம் : மதுத்தண்டு - வீரபானம் இருக்குங் குழாய், உம்மையும் இரண்டனுருபும் விரிக்க. ( 318 )
-
1875. வந்தவனை யாருமறி யாமன்மறை யாகத்
தந்துதரன் கேட்பவிது சாமிவலித் தானா
வைந்துமதி யெல்லையினை யாண்டுடைய னாகி
யந்திலகன் றான்றமரொ டாங்கணெனச் சொன்னேன்.
விளக்கம் : தோழர் ஏமமாபுரத்திற்கு ஏறப் போவதற்கு முன்பே ஏழு திங்கள் சென்றமை, இங்கிவர்கள் இவ்வாறு (சீவக. 492) என்னுஞ் செய்யுளிற் கூறனாம். பின்பு, தோழர் தாபதப் பள்ளியிற் செல்ல ஒன்றும், ஒருமதி எல்லை நாளுட் ... கொணர்ந்த பின்றை (சீவக. 1817) எனவே சீவகன் வந்து விசயையைக் காண ஒன்றும், இவனைக் கண்டு ஊரேறப் போக ஒன்றும், மாமனாரிடத்துச் செல்ல ஒன்றும், மீண்டு ஊர் செல்ல ஒன்றும் ஆக ஐந்து திங்களும் சென்றவாறுணர்க என்று கால விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 319 )
-
1876. பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித்
தொட்டுவிடுத் தேனவனைத் தூதுபிற சொல்லிப்
பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்
விட்டலர்ந்த கோதையல ரால்விளைவ துண்டோ.
விளக்கம் : பழி வெள்ளிமலை மேற் பரத்தல் அஞ்சி எனவே இவன் சிறைப்பட்டமை கலுழ வேகனும் அறிந்திலன் என்பது பெற்றாம். எனவே, பொன்னணி (சீவக. 1147) என்னும் செய்யுளில், தெய்வ மாதரைச் சூழ்ந்த என்றும், சந்தமாலை (மேற்படி. 1160) என்னுஞ் செய்யுளில், வந்த விண்ணோர்களை என்றும், அவள் வழிபட்ட தெய்வங்கள் வந்து நினைத்தவை முடித்துக்கொடுக்கும் என்ற தன்றித் தன் படையாகிய விஞ்சையர் ஈண்டு வந்தார் என்னாமை உணர்க. அவ் விஞ்சையரை அழைக்குங்கால், தன்னுடை விஞ்சை எல்லாம் தளிரியல் ஓதலோடும் (மேற்படி1147) என்ன வேண்டாவாகலின். ( 320 )
-
1877. அல்லதுவு மெங்கைகுண மாலையவ ளாற்றாள்
செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும்
பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னு
மெல்லியிது காலையிது வென்பதறி கல்லாள்.
விளக்கம் : அல்லதுவும் - அப்பழியன்றியும், எங்கை - என் தங்கை. குணமாலை யவன் என்புழி அவள் பகுதிப்பொருளது. செல்லுமதி - ஊர்கின்ற திங்கள். பல்கதிர் - ஞாயிறு. திங்களை ஞாயிறென்பள் ஞாயிற்றைத் திங்கள் என்பள் என்க. ( 321 )
-
1878. அரவுவெகுண் டன்னவக லல்குனிலம் புல்லித்
திருவில்வளைந் தனையதிரு மேகலையி னீங்கிப்
புருவமதி முகமும்புகழ் தோளும்புணர் முலையு
முருவமழிந் தடிச்சியுள் ளாங்கொலுணர் கலனே.
விளக்கம் : அல்குல்; குணமாலை. திருவில் - வானவில். புருவத்தையுடைய மதிபோலும் முகம் என்க. புணர் முலை : வினைத்தொகை உருவம் - அழகு, அடிச்சி என்றது குணமாலையை; நும் மடிச்சி என்ற வாறு. கொல்; ஐயப் பொருட்டு. ( 322 )
-
1879. நாளைவரு நையலென நன்றெனவி ரும்பி
நாளையெனு நாளணிமைத் தோபெரிதுஞ் சேய்த்தோ
நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லு
நாளினுமிந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே.
விளக்கம் : மற்று : அசை. கிளி நாளைச் சீவகன் வரும் நையல் என்று கூற என்க. நையல்; முன்னிலை ஒருமை வினைமுற்று. அணிமைத்து - அண்மையில் உள்ளது. சேய்த்து - தொலைவிலுள்ளது. ஓகாரமிரண்டும் வினா அந்நாளை யுரை எனச் சுட்டு வருவிக்க. இந்நங்கை என்றது குணமாலையை ( 323 )
வேறு
-
1880. நோக்கவே தளிர்த்து நோக்கா
திமைப்பினு நுணுகு நல்லார்
பூக்கம ழமளிச் சேக்கும்
புதுமண வாள னார்தா
நீப்பிலார் நெஞ்சி னுள்ளா
ராதலா னினைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதுந் தாந்தம்
பொன்னடி போற்றி யென்றாள்.
விளக்கம் : நோக்கவே தளிர்த்து நோக்கா திமைப்பினும் நுணுகு நல்லார் என்றது மகளிரின் பிரிவாற்றாமையைத் திறம்படவிளக்கி நிற்றல் உணர்க. புதுமணவாளனார் என்றது பழையேம் ஆகிய எம்மை நீத்து எப்பொழுதும் புது மணமே விரும்பு மியல்புடையாய் என அசதியாடியவாறு. ( 324 )
-
1881. இலவம்பூ வாக்குண் டன்ன
பஞ்சிமெல் லடியி னாடன்
புலவிச்சொற் பொறித்த வோலை
திருமுடி துளக்கி நோக்கித்
தலைவைத்த காப்பு விஞ்சை
கொண்டபின் றாமஞ் சூழ்ந்து
கொலைவைத்த குருதி வேலான்
றோழரைக் குறுகி னானே.
விளக்கம் : இயல்பாகவே சிவந்த அடியாகலின் இலவம்பூ அரக்குண்டன்ன என்றார். பஞ்சி - செம்பஞ்சிக் குழம்பு. முன் புதுமணவாளனார் என்ற சொல் அவள் புலவியைப் புலப்படுத்தாதாகலின் புலவிச் சொற் பொறித்த வோலை என்றார். அவ்வோலையின்கண் எழுதிய சொற் பொருளழகு கண்டு முடிதுளக்கினான் என்பது கருத்து. ( 325 )இதன் பின் சில பிரதிகளிற் காணப்படுஞ் செய்யுள்:-அடிகணீ ரரச ராதல் அறிந்திலேம் மேலை நாட்கண் - தொடியணி தோளும் நல்ல ஆகமும் புல்லி நும்மைக் - குடி வழி வந்த தோலாக் கந்துகன் மகனென் றெண்ணி - அடிகணாம் இகழ்ந்ததெல்லாம் அருளுக என்று நின்றார்.
வேறு
-
1882. எங்கோமற் றென்றிறநீர் கேட்டதென்
றாற்கெரி மணிப்பூட்
செங்கோன் மணிநெடுந்தோச் செல்வன்
காதற் பெருந்தேவி
தங்காத் தவவுரு வந்தாங்கித்
தண்டா ரணியத்து
ளங்காத் திருந்தாளைத் தலைப்பட்
டைய வறிந்தோமே.
விளக்கம் : ஆத்த பொறிய (நாலடி. 290) ஆத்த அறிவினர் ங்நாலடி. 151சி என்றாற்போல ஆத்து என்றார். இனி உளங்காத்து என்றும் பாடமோதுப. பொள்ளெனக் கூறின் அவன் துன்பம் எல்லையற்றதாம் என நின்தாய் என்னாது ஏதிலாட்டிபோலச் செல்வன் காதற் பெருந்தேவி என்றார். செல்வன் என்றது சச்சந்தனை. தண்டாரணியம் - தண்டகாரணியம். ( 326 )
-
1883. என்னேமற் றென்னேநீர் மொழிந்ததென்
னேயென விரும்பி
முன்னேமொ ழிந்தாற்போன் முறைநின்
றெல்லா முடன்மொழிய
மன்னாஞ் சிந்துவபோன் மலர்ந்த
செந்தா மரைக்கண்ணீர்
பொன்னார மார்பின்மேற் பொழியப்
புன்க ணுற்றானே.
விளக்கம் : விரைவாதலின் மூன்றடுக்கினார். விசயை யிருப்பதை ஆசிரியன் வாயிலாக விளங்கக் கேளாமையின், இங்ஙனம் ஈண்டு வினவினான். ( 327 )
-
1884. அஃதே யடிகளும் முளரோ
வென்றாற் கருளுமா
றிஃதா விருந்தவா றென்றார்க்
கென்னைப் பெறவல்லார்க்
கெய்தா விடருளவே யெங்கெங்
கென்றத் திசைநோக்கி
வெய்தா வடிதொழுது வேந்தன்
கோயிற் கெழுந்தானே.
விளக்கம் : முற்செய்யுளின்கண் என்னே! என்னே! என்னே! எனவும் இச்செய்யுளின்கண் எங்கு எங்கு (எங்கு) எனவும் அடுக்கு மாற்றால் இப்புலவர் பெருமான் சீவகன் மனநிலையை நம்மனோர்க் குணர்த்துகின்ற புலமைத்திறம் நினைந்து மகிழற்பாலாது. ( 328 )
-
1885. இலைவிரவு பூம்பைந்தார் வேந்த
னேந்தல் குலங்கேட்பான்
மலைவிரவு நீண்மார்பின் மைந்தன்
றோழர் முகநோக்கிக்
கொலைவிரவு கூர்நுதி வேற்குமர
னென்னக் குருகுலத்தான்
கலைவிரவு தீஞ்சொல் லார்காம
னென்றார் கமழ் தாரார்.
விளக்கம் : மலைவிரவு : விரவு : உவம உருபு வேந்தன்; தடமித்தன். கேட்பான் : வினையெச்சம். மைந்தன் என்றது சீவகனை. சொல்லார் காமன் குருகுலத்தான் என்றார் என்க. முன்னர் நந்தட்டனைத் தடமித்தன் வினவி நாடும் ஊரும் உணர்ந்திருந்தான், தடமித்தன் உணர விரும்பியவை நாடும் ஊரும் குலனும் ஆகும். இதனை 1852 ஆம் செய்யுளான் உணரலாம். ஆண்டு நந்தட்டன் குலங்கூறுமுன்னர் அவன் கூறலாகாதபடி புலவர் பெருமான் செய்வித்துக்கொண்டு ஈண்டு வெளிப்படுத்தமை காப்பியம் இனிமையுடையதாதற்கு இன்றியமையாதாயிற்று. ( 329 )
-
1886. அண்ணல் குருகுலத்தா னென்றால்
யான்முன் கருதியதென்
ணெண்ணம் வெளிப்பட்டான் கரந்த
மைந்த னெரிசெம்பொன்
வண்ண வரைமார்ப முயங்கி
நுண்ணூன் மதியாரோ
டெண்ணி வியநெறியால் விடுத்தான்
கோயில் புக்கானே.
-
1887. விள்ளா வியனெடுந்தோ வேந்தன்
காதன் மடமகளே
கள்ளாவி கொப்புளிக்குங் கமழ்பூங்
கோதா யென்மனத்தி
னுள்ளாவி யுள்ளாய்நீ யொழிந்தா
யல்லையெனக் கையிற்
புள்ளாவிச் செங்கழுநீர்க் குவளை
செய்தாள் புனைபூணாள்.
விளக்கம் : இனி, கள்ளாவி கொப்புளிக்கும் என்பதற்குக் கள்ளை நீராவியாகக் கொப்பளிக்கும் என்றும் , ஆவி உள்ளாய் என்பதற்கு, உயிரிலே இருத்தலின் என்றும், புள் ஆவிச் செங்கழுநீர் என்பதற்கு, அன்னங்களை உடைய வாவியிற் கழுநீர் என்றும் உரைப்ப. ( 331 )
-
1888. வார்முயங்கு மென்முலைய வளைவேய்த்
தோளாண் மனமகிழ
நீர்முயங்கு கண்குளிர்ப்பப் புல்லி
நீடோ ளவனீங்கித்
தோமுயங்கு தானையான் சிறுவர்
சேடா ரகன்மார்பந்
தார்முயங்கிக் கூந்தன்மா விவர்ந்தான்
சங்க முரன்றவே.
விளக்கம் : வார் - கச்சு, தோளாள் : கனகமாலை. பிரிவை நினைந்து கண்ணீர்மல்க நிற்றல் தோன்ற, நீர் முயங்குகண் குளிர்ப்ப என்றார். தோளவன் : சீவகன். தானையான் சிறுவர் என்றது விசயன் முதலியோரை. சேடு - பெருமை, கூந்தன்மா - குதிரை. ( 332 )
கனகமாலையார் இலம்பகம் முற்றும்.
-------------------
This file was last updated on 03 June 2019.
Feel free to send the corrections to the Webmaster.